காலச்சுவடு பதிப்பகம் அடையாளம் கு.ப.ரா கதைகள் ,பிரமிள் கவிதைகள் தி.ஜானகிராமன் படைப்பு...
எனக்கு சில்க் சட்டை இருக்கே! உனக்கு இருக்கா! என்று கெட்டிக்காரத் தனமாகக் கேட்டான் ராமசாமி.
செல்லையா பதில் சொல்லத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்; தம்பையா ஆகாயத்தைப் பார்த்து யோசனை செய்தான்; மங்கம்மாள் மூக்கின் மேல் ஆள்காட்டி விரலை வைத்துக் கொண்டும் கண்ணை இலேசாக மூடிக்கொண்டும் லேசாக யோசனை செய்தாள். அந்த மூவரும் ராமசாமியின் கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் மற்றப் பிள்ளைகள்.
அன்று பள்ளிக்கூடத்திலிருக்கும்போது ராமசாமிக்கும் செல்லையாவுக்கும் இடையே ஒரு போட்டி நடந்தது. ராமசாமி தன் 'ஐந்தாம் வகுப்பிற்குரிய இந்திய தேச சரித்திரப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டான். செல்லையா அந்த வருடம் இந்திய தேச சரித்திரம் வாங்கவில்லை; அதனால் தன்னிடமுள்ள ஒரு சிவிக்ஸ் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டான். இருவரும் படப் போட்டியை ஆரம்பித்து விட்டார்கள்.
ராமசாமி தன் புத்தகத்தை முதலிலிருந்து ஒவ்வொரு தாளாகத் திருப்புவான்; படம் இருக்கும் பக்கத்தைச் செல்லையாவுக்குக் காட்டி, ”இதோ, இந்தப் படத்துக்குப் பதில் படம் காட்டு" என்பான். செல்லையா தன் புத்தகத்தைத் திறந்து அதில் உள்ள ஒரு படத்தைக் காட்டுவான்; பிறகு, இருவருமே புத்தகத்தைப் பக்கம் பக்கமாகப் புரட்டுவார்கள். யாராவது ஒருவருடைய புத்தகத்தில் அடுத்த படியாகப் படம் வரும்; உடனே, அந்தப் படத்துக்கு அடுத்தவன் பதில் படம் காட்ட வேண்டும். இவ்விதமாக பதிலுக்குப் பதில் படம் காட்டிய வண்ணம் புத்தகம் முழுவதையும் புரட்டுவார்கள்.எவன் புத்தகத்தில் அதிகப் படங்கள் இருக்கின்றனவோ, அவன் ஜெயித்து விடுவான்; மற்றவன் தோற்றுப் போவான். உடனே ஜெயித்தவன், "உனக்குப் படம் காட்ட முடியல்லே! தோத்துப் போயிட்டியே!" என்று பரிகாசம் செய்வான். இந்த மாதிரியான படப் போட்டிதான் அன்றும் நடந்து கொண்டிருந்தது.
போட்டி பாதியில் நிற்கிறது. அந்தச் சமயத்தில் ஐந்தாம் வகுப்புக் கணக்கு வாத்தியார் வந்துவிட்டார். அந்த கணக்கு வாத்தியார் மிகவும் கெடுபிடியானவர். அவர் வகுப்பில், பையன்கள் வெளியே தெரியாமல் விளையாடிக் கொண்டிருக்க முடியாது. தவிரவும் கணக்குப் போடும்போது, பென்சிலும், கையுமாக இருக்க வேண்டும். இதில், "படப்போட்டி" நடத்துவது எப்படி?
வாத்தியார் வந்ததும் இவருடைய போட்டியும் நின்றுவிட்டது. கடைசியில், சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டு வெளியே வந்த பிறகு, ஒரு வேப்பமரத்தின் அடியில் நின்று இருவரும் அந்தப் போட்டியை நடத்தினார்கள்.
ராமசாமியின் சரித்திரப் புத்தகத்தில் பாதிதான் தாண்டியிருக்கும்; ஆனால் செல்லையாவின் சிவிக்ஸ் புத்தகம் முடிந்துவிட்டது. செல்லையா தோற்றுப் போய்விட்டான். பக்கத்தில் நின்ற பிள்ளைகள் அவனைக் கேலி செய்தார்கள். தங்கள் அண்ணன் தோற்றுப் போனதைக் கண்டு, தம்பையாவுக்கும் மங்கம்மாளுக்கும் சொல்லமுடியாத வருத்தம்.
அந்த இடத்தை விட்டு எல்லோரும் வீட்டுக்குப் போகப் புறப்பட்டார்கள். நடந்து செல்லும்போதே, படப் போட்டி வேறொரு அவதாரம் எடுக்கத் தொடங்கியது. 'எங்கள் வீட்டில் அது இருக்கே, உங்கள் வீட்டில் இருக்கா?' என்று இருவரும் ஒருவரிடம் ஒருவர் கேட்க ஆரம்பித்தனர். இந்தப் புதுப் போட்டியின் கடைசிப் பகுதியில் தான் ராமசாமி, "எனக்கு சில்க் சட்டை இருக்கே, உனக்கு இருக்கா?" என்று கேட்டான்.
வேப்ப மரத்தைவிட்டு, அரை பர்லாங் தூரத்திலுள்ள பார்வதியம்மன் கோவில் பக்கமாக வந்தாய்விட்டது. இன்னும் செல்லையாவோ தம்பையாவோ ராமசாமிக்கு பதில் சொல்லவில்லை. ஆனால், மங்கம்மாள் திடீரென்று எல்லோரையும் இடித்துத் தள்ளிக்கொண்டு, ராமசாமியின் முன்னாள் வந்து நின்றாள் குழந்தைகள் எல்லோரும் மங்கம்மாவையே கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
அவள், ரேகை சாஸ்திரியிடம் காட்டுவது போலக் கையை வைத்துக் கொண்டு, "ஐயோ! சில்க் சட்டை எதுக்காம்? ஹூம், லேசாச் சருகு மாதிரி இருக்கும். சீக்கிரம் கிழிஞ்சி போகும். (செல்லையாவின் சட்டையைக் காட்டி) இதுதான் கனமாயிருக்கு. ரொம்ப நாளைக்குக் கிழியாமே இருக்கும். நல்லாப்பாரு!" என்று மிகமிகப் பரிகாசமாகச் சொல்லிவிட்டு செல்லையாவின் பக்கத்தில் வந்து நின்றாள்.
ராமசாமி திகைத்து நின்றுவிட்டான். முதல் வகுப்பில் படிக்கும் மங்கம்மாள், ஐந்தாம் வகுப்பில் படிக்கும் தன்னை இப்படித் தோற்கடித்து விட்டாளே என்று சங்கடப்பட்டான். பிள்ளைகள் ராமசாமியைப் பார்த்து, "தோத்துப் போயிட்டியா!" என்று ஏளனம் பண்ணினார்கள்.
மங்கம்மாள் செல்லையாவின் சட்டையைப் பிடித்துக்கொண்டு, அவனை ஒட்டி உரசி நின்று கொண்டாள். நடக்கும் போதும் அப்படியே நடந்து வந்தாள். அவள் மனதிற்குள்ளே ஒரு பெருமிதம்.
ராமசாமி அடுத்து கேள்வியைப் போட்டான்: "எங்கள் வீட்டிலே ஆறு பசு இருக்கு; உங்க வீட்டிலே இருக்கா?"
இதற்குச் செல்லையா பதில் சொல்லவில்லை; மங்கம்மாளும் பதில் சொல்லவில்லை. தம்பையா, "இவுஹதான் பணக்காரராம்! அதுதான் ரொம்பப் பெருமை ஹூம்! பெருமை பீத்திக்கலாம்...!" என்று சொல்லி நிலைமையைச் சமாளிக்க முயன்றான். அது முடியவில்லை. அந்தச் சமயத்தில் செல்லையா, "அது சரி, எங்க வீட்டிலே ஒன்பது கோழி இருக்கு, உங்க வீட்டிலே இருக்கா?" என்று ஒரு போடு போட்டான்.
ராமசாமியும் தயங்கவில்லை: "நாங்கள் உங்களைப் போலக் கோழி அடிச்சுச் சாப்பிட மாட்டோம். நாங்க எதுக்குக் கோழி வளக்கணும்? அதுதான் எங்க வீட்டிலே கோழி இல்லே" என்றான்.
"அதெல்லாம் சும்மா. ஒன்பது கோழி இருக்கா, இல்லையா?" என்று ஒரே பிடிவாதமாகக் கேட்டான் செல்லையா.
ராமசாமிக்கு பதில் சொல்ல முடியவில்லையே என்று கூட வருத்தமில்லை. மற்றப் பிள்ளைகள் எல்லோரும் ஒன்று கூடிக் கொண்டு அவனைப் பரிகாசம் செய்வதை அவனால் தாங்கமுடியவில்லை.அழுகை வரும் போல இருந்தது. அதனால் எல்லோரையும் விட வேகமாக நடக்க ஆரம்பித்தான். மற்றப் பிள்ளைகளும் அதே வேகத்தில் நடந்தார்கள். சிறு குழந்தையாக இருக்கும் மங்கம்மாள் அதே வேகத்தில் நடக்க முடியாது. அதனால் ஓடினாள்.
சிற்சில குழந்தைகள் தங்கள் தங்கள் வீட்டுக்கு நேராக வந்த மாத்திரத்தில் கூட்டத்திலிருந்து விலகி வீட்டுக்குப் போய் விட்டார்கள். கூட்டம் குறையக் குறைய ராமசாமியின் அவமானமும் குறைந்துகொண்டு வந்தது.
மேலத் தெருவுக்குள் நுழையும் போது, ராமசாமியும் அவனுடைய எதிர்க்கட்சியைச் சேர்ந்த மூவரும்தான் மிஞ்சினார்கள். ஏனென்றால், அந்தக் குக்கிராமத்துப் பள்ளிப் பிள்ளைகளில், இவர்களுடைய வீடுகள் தான் மேலத் தெருவில் இருந்தன.
ராமசாமியின் வீடு முதலாவதாக வந்தது. 'தப்பித்தோம் பிழைத்தோம்’ என்று வீட்டுக்குள்ளே பாய்ந்தான் ராமசாமி. உடனே, வீதியில் நின்ற அந்த மூவரும், "தோத்தோ நாயே!" என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டும், கையால் சொடுக்குப் போட்டுக்கொண்டும் நின்றார்கள்.
அப்போது வீட்டுக்குள்ளிருந்து ஒரு மீசைக்காரன் தலைப்பாக் கட்டுடன் வெளியே வந்தான். அவன் ராமசாமியின் வீட்டு வேலைக்காரர்களில் ஒருவன். குழந்தைகள் மூவரும் கிழிந்துபோன அழுக்குத் துணியுடனும், பரட்டைத் தலையுடனும் தெருவில் நின்று, ஒரே குரலில் "தோத்தோ நாயே!" என்று சொல்வதைப் பார்த்து, "சீ, கழுதைகளா! போறீகளா, எண்ணமும் வேணுமா?" என்று அதட்டினான். மூன்று பேரும் நாலுகால் பாய்ச்சலில் ஓடிவிட்டார்கள். அவர்கள் போன பிறகு, "பிச்சைக்காரக் கழுதை! தோத்தோ!... நாயே!...கழுதை! என்று தனக்குத் தானே ஏகத்தாளமாச் சொல்லிக் கொண்டு, தன வேலையைக் கவனிக்கப் போனான்.
செல்லையா, தம்பையா, மங்கம்மாள் - மூன்று பேரும் நெஞ்சோடு புத்தகக் கட்டுக்களை அணைத்துக்கொண்டு வீடு சேரும் போது, அவர்களுடைய தாயார் தாயம்மாள் வாசல் பெருக்கித் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தாள்.
மங்கம்மாள் ஒரே ஓட்டமாக ஓடி, "அம்மா...!" என்று தாயம்மாளைப் பின்புறமாகக் கட்டிக்கொண்டாள்.
குனிந்து வாசல் தெளித்துக் கொண்டிருந்த தாய் செல்லமாக, "ஐயோ!... இது என்னடா இது!" என்று முகத்தைச் சுளித்துக் கொண்டு அழுவது போலச் சிரித்தாள்! அம்மா 'அழுவ'தைக் கண்டு மங்கம்மாளுக்கு அடக்க முடியாதபடி சிரிப்பு வந்தது.
"ஐயா வந்துட்டாரா அம்மா?" என்று தம்பையா கேட்டான். அப்பாவைத் தான் ஐயா என்று அந்த கிராமத்துப் பிள்ளைகள் குறிப்பிடிவார்கள்.
"வரலையே!" என்று பொய் சொல்லிவிட்டு, பொய்ச் சிரிப்பும் சிரித்தாள் தாயம்மாள்.
"நிஜம்மா?" என்று கேட்டான் தம்பையா.
"நிஜம்ம்ம்மா தான்!" என்று சொன்னாள் தாயம்மாள். அப்புறம் சிரித்தாள்.
மங்கம்மாள் விறுவிறு என்று அம்மாவுக்கு முன்னாள் வந்து நின்றாள். வலது கையிலிருந்து புத்தகக்கட்டை இடது கையில் இடுக்கிக் கொண்டாள். வலது கையின் ஆள்காட்டி விரலை மூக்கின் மேலும், புருவங்களுக்கு மத்தியிலும் வைத்துக்கொண்டு, முகத்தையும் ஒரு பக்கமாகத் திருப்பிக்கொண்டு, "அம்மா!... எனக்குத் தெரிஞ்சு போச்சு!... நீ பொய் சொல்றே!... ஐயா வந்துட்டாரு!" என்று நீட்டி நீட்டிச் சொன்னாள்.
தாயம்மாளுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. பல்லை இறுகக் கட்டிக்கொண்டு, "போக்கிரிப் பொண்ணு!" என்று மங்கம்மாளின் கன்னத்தைக் கிள்ளினாள்.
செல்லையா மிகவும் ஆழமான குரலில், "ஐயா வரல்லையாம்மா?" என்று கேட்டான். அவன் குரலில் சோகம் ததும்பி, ஏமாற்றம் இழையோடியிருந்தது.
தாயம்மாள் வீட்டிற்குள் நுழைந்தாள். மூளையிலிருந்த ஒரு ஜாதிக்காய்ப் பொட்டியைச் சுட்டிக்காட்டி, "அந்தப் பெட்டியைத் திறந்து பாரு மங்கம்மா" என்றாள்.
மூவருமே ஓடிப்போய்ப் பெட்டியைத் திறந்தனர்.
பெட்டிக்குள்ளே இருந்த ஜவுளிப் பொட்டணத்தை வெளியே எடுத்து அவிழ்த்துப் பார்த்தனர். மறுநாள் விடிந்த பிறகு ஆரம்பமாகும் தீபாவளி, குழந்தைகளுக்கு அப்பொழுதே ஆரம்பித்துவிட்டது. ஒரே குதூகலம்! ஒவ்வொரு துணியாக எடுத்து, 'இது யாருக்கு இது யாருக்கு' என்று இனம் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
பொட்டணத்தில் இரண்டு மல் பனியன்களும், இரண்டு கால் சட்டைகளும், ஒரு பாவாடையும், ஒரு பச்சை நிறமான சட்டையும், ஒரு நான்கு முழ ஈரிழைச் சிட்டைத் துண்டும் இருந்தன.
துண்டைத் தவிர மற்ற உருப்படிகள் இன்னின்னாருக்குத்தான் என்று குழந்தைகளே பங்கு போட்டுவிட்டார்கள். துண்டுயாரைச் சேருவது என்று தெரியவில்லை உடனே செல்லையா கேட்டான்: "துண்டு யாருக்கும்மா?"
"ஐயாவுக்கு" என்றாள் தாயம்மாள்.
"அப்படின்னா உனக்கு?" என்று மங்கம்மாள் கேட்டாள்.
தாயம்மாள் சிரித்துக்கொண்டு, "எனக்குத் தான் ரெண்டு சீலை இருக்கே இன்னும் எதுக்கு? எல்லோரும் புதுத்துணி எடுக்க நாம் என்ன பணக்காரரா?"
"ஐயாவுக்கு மட்டும் பிறகு புதுத்துண்டு எதுக்காம்?" என்றாள் மங்கம்மா.
"வாயாடி! வாயாடி! ஐயாவுக்கு ஒரு துண்டுகூட இல்லே. துண்டு இல்லாமே எத்தனை நாளைக்குப் பழைய வேட்டியை உடம்பிலே போட்டுக்கிட்டு அலையறது?" என்று சொல்லிவிட்டு, மங்கம்மாளைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள் தாய்.
அந்தி மயங்கி, இருட்டத் தொடங்கியது. விளக்கேற்றுவதற்காகத் தாயம்மாள் எழுந்தாள்.
விளக்கேற்றிவிட்டுக் குழந்தைகளை வெந்நீரில் குளிப்பாட்டி விட்டாள். ஐப்பசி மாதமானதால் அநேகமாக நாள் தவறாமல் மழை பெய்திருந்தது. பூமி குளிர்ந்து ஜில்லிட்டு விட்டது. காற்றும் ஈரக்காற்று. இதனால் வெந்நீரில் குளித்துவிட்டு வந்த குழந்தைகளை ஈரவாடை அதிக வேகத்துடன் தாக்கியது. எல்லோரும் குடுகுடு என்று முற்றத்திலிருந்து வீட்டுக்குள்ளே ஓடி வந்து விட்டார்கள்.
குழந்தைகள் சாப்பிடும்போதுதான், அவர்களுடைய அப்பா பக்கத்துக் கிராமத்துக்கு ஒரு தூர பந்துவின் திடீர் மரணத்தை முன்னிட்டுச் சென்றிருப்பதாகவும், மறுநாள் மத்தியானத்துக்குள் வந்துவிடுவார் என்றும், வரும்வரை காத்திருக்காமல் குழந்தைகளோடு தீபாவளி கொண்டாடி விடவேண்டும் என்று அவர் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் என்றும் தாய் தெரிவித்தாள்.
சாப்பாடு முடிந்தது. ராப் பாடம் படிக்க மாடக்குழியில் இருந்த அகல் விளக்கைத் தூண்டிவிட்டுக் கொண்டு அதன் முன்னால் மூன்று பெரும் உட்கார்ந்தார்கள்.
தாயம்மாள் சாப்பிட்டுவிட்டு, எச்சில் கும்பாக்களைக் கழுவ முற்றத்துக்கு வந்தாள். முற்றத்தின் மூலையில் கொஞ்ச தூரத்துக்கு அப்பால் ஒரு முருங்கை மரம் உண்டு. அதன் நிழலில் கருப்பாக ஓர் உருவம் தெரிந்தது. பக்கத்து வீட்டு நாயாக இருக்கும் என்று நினைத்து உள்ளே வந்துவிட்டாள்.
மண் தரையில் முந்தானையை விரித்து ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு, குழந்தைகள் உரக்கச் சத்தம்போட்டுப் பாடம் படிப்பதைக் கேட்டுக் கொண்டிருந்தாள் தாய். சிறிது நேரத்தில், "தரை என்னமாக் குளுருது! ராத்திரி எப்படிப் படுத்துக்கிடுறது?" என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டே எழுந்து உட்கார்ந்தாள். அவளுடைய உடம்பு அவளுடைய ஸ்பரிசத்துக்கே 'ஜில்' லென்றிருந்தது.
தம்பையா, அண்ணனைப் பார்த்து, "துணைக்கு வர்ரயா?" என்று கூப்பிட்டான். இருட்டானதால் வீட்டு முற்றத்துக்குப் போய் ஒன்றுக்குப் போய்விட்டுவர அவனுக்கு பயம். செல்லையா துணைக்குப் போனான். இந்தச் சிறுவர்களின் கண்ணிலும் முருங்கை மரத்தடியில் இருந்த கருப்பு உருவம் தென்பட்டது. அதைப் பார்த்து பயந்து போகாமல் இவர்கள் தைரியமாக நின்றதற்குக் காரணம், ராமசாமியின் வீட்டை நோக்கிப் போகும் இரண்டு பேர் இரண்டு 'பெட்ரோமாக்ஸ்' விளக்குகளைக் கையில் எடுத்துக் கொண்டு போனதுதான். ஆள் நடமாட்டமும் விளக்கு வெளிச்சமும் சேர்ந்து தைரியம் கொடுத்தன. இருவரும் கருப்பு உருவத்தைக் கூர்ந்து பார்த்தார்கள்.
அது இவர்களைப்போன்ற ஒரு சிறுவனுடைய உருவம்தான்.
உடனே இருவரும் பக்கத்தில் போனார்கள். அப்பொழுது மழை இலேசாகத் தூற ஆரம்பித்தது. அதனால் முருங்கை மரத்துக்குக் கீழாகப்போய் நின்று கொண்டு, அந்தச் சிறுவனுடைய நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
அவனுக்கு வயது எட்டு அல்லது ஒன்பது இருக்கும். அவன் உடம்பில் அழுக்கடைந்த கௌபீனம் ஒன்றைத் தவிர, வேறு உடைகள் கிடையாது, தரையில் உட்கார்ந்தால் குளிரும் என்று, பாதங்கள் மட்டும் தரையில் படும் படியாக அவன் குந்திக் கொண்டிருந்தான். அவனுக்கு முன்னாள் மூன்று எச்சில் இலைகள். கிராமத்தில் வெண்கலக் கும்பாவில் சாப்பிடாமல், இல்லை போட்டுச் சாப்பிடுகிற வீடு ராமசாமியின் வீடுதான். அந்த வீட்டின் வாசலிலிருந்துதான் அந்த எச்சில் இலைகளை எடுத்துக் கொண்டு வந்து, அவற்றில் ஒட்டிக் கொண்டிருந்த பருக்கைகளையும் கரி வகைகளையும் எடுத்து வாயில் போட்டுக் கொண்டிருந்தான்.
செல்லையாவோ தம்பையாவோ ஒன்றும் சொல்லாமல் பார்த்துக்கொண்டே நின்றார்கள்.
ஏற்கனவே யாரோ கடித்துச் சுவைத்துத் துப்பிய முருங்கைக் காய்ச் சக்கைகளில் ஒன்றை இலையிலிருந்து எடுத்தான் சிறுவன். அதை இரண்டாம் தடவையாகக் கடிக்க ஆரம்பித்தான்.
"சீ! எச்சீ!... ஆய்..." என்று சொல்லிவிட்டுக் கீழே 'தூ' என்று துப்பினான் தம்பையா.
சிறுவன் ஏறிட்டுப் பார்த்துவிட்டுப் பழையபடியும் குனிந்து கொண்டான். செல்லையாவுக்குத் திடீரென்று ஏதோ உதயமானது போல், "டேய்! ஏண்டா எங்க வீட்டு வாசலிலே வந்து உட்கார்ந்திருக்கே? போடா..." என்று அதட்டினான்.
சிறுவன் போகாவிட்டாலும் பயந்துவிட்டான்; அதனால் இடது கையால் தலையைச் சொறிந்துகொண்டு, அதிவேகமாக இலையை வழித்தான்.
"உங்க வீட்டுக்குப் போயேன்" என்றான் தம்பையா.
மழை பலமாகப் பிடித்து விடும்போல இருந்தது.அதற்குள்ளாக அவனை விரட்டிவிட்டு, வீட்டிற்குள் ஓடிவிட வேண்டும் என்று செல்லையாவும் தம்பையாவும் முடிவு கட்டினார்கள்.
"போடா... இல்லாட்டி உன் மேலே துப்புவேன்" என்றான் தம்பையா. சிறுவன் எழுந்திருக்கும் வழியைக் காணோம்.
அவனைக் காலால் மிதிக்க வேண்டுமென்று தம்பையா தீர்மானித்தான்.
மழை 'சட சட' வென்று பெய்ய ஆரம்பித்துவிட்டது.
வெளியே போன குழந்தைகள் மழையில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற திகைப்புடன் தாயம்மாள் ஓடிவந்து, "செல்லையா!..." என்று கூப்பிட்டாள்.
"ம்ம்" என்று பதில் வந்தது.
"இருட்டிலே அங்க என்ன பண்றீங்க?" என்று சொல்லிக் கொண்டே மரத்தின் பக்கமாக வந்துவிட்டாள். அங்கே வந்து, நின்று யோசிப்பதற்கு நேரமில்லை மழை. ஆகவே, மூன்று பேரையும் அவசர அவசரமாக வீட்டுக்குள்ளே அழைத்துக்கொண்டு ஓடிவந்தாள்.
சிறுவன் விளக்கு வெளிச்சத்தில் வந்து நின்றான். அவனுடைய உடம்பெல்லாம் ஒரே சிரங்கு. தலையில் பொடுகு வெடித்துப் பாம்புச் சட்டை மாதிரி தோல் பெயர்ந்திருந்தது. பக்கத்தில் வந்து நின்றால், ஒரு மாதிரி துர்வாடை. இந்தக் கோலத்தில் நின்றான் சிறுவன்.
"இது யாரம்மா?" என்று மங்கம்மாள் திகைப்போடு கேட்டாள்.
"யாரோ? யார் பெத்த பிள்ளையோ?" என்று சொல்லிவிட்டு, மழையில் நனைந்த குழந்தைகளைத் துவட்டப் பழைய துணியை எடுக்கப்போனாள். அவள் மறுபக்கம் திரும்பியதும், தம்பையா அம்மாவுக்குக் கேட்காமல், வாய்க்குள்ளேயே "போடா" என்று பயமுறுத்தினான்.
செல்லையா, 'போ' என்று அவனைப் பிடித்துத் தள்ளினான்.
இவர்கள் இருவரையும் பார்த்து மங்கம்மாளும் அர்த்தமில்லாமல் "போயேன்' என்று சிணுங்கிக்கொண்டே சொன்னாள்.
அவ்வளவுதான், திடீரென்று மடை திறந்த மாதிரி 'கோ' வென்று அழுது விட்டான். விஷயம் என்னவென்று தெரியாமல் பதைபதைப்புடன் ஓடி வந்தாள் தாயம்மாள்.
"ஏண்டா அழுகிறே? சும்மா இரு. அவனை என்ன சொன்னீங்க நீங்க? என்று தன் குழந்தைகளைக் கேட்டாள்.
"அவன் போன்னா, போகமாட்டேங்கிறான்" என்று புகார் பண்ணுவதைப் போலச் சொன்னாள் மங்கம்மாள்.
"சீ, அப்படி எல்லாம் சொல்லக்கூடாது! நீ சும்மா இரு அழாதேப்பா" என்று சொல்லிச் சிறுவனைத் தேற்றினாள்.
சிறுவன் அழுகையை அப்படியே நிறுத்திவிட்டான். ஆனால், பெருமூச்சு விடுவதை மட்டும் அவனால் நிறுத்த முடியவில்லை.
"சும்மா இரு தம்பி!... அழாதே!" என்று இரண்டாவது தடவையும் தாயம்மாள் சொன்னாள்.
பழைய துணியைக் கொண்டு செல்லையாவும் தம்பையாவும் உடம்பைத் துடைத்துக்கொண்டார்கள். உடனே மங்கம்மாள் தம்பையாவைப் பார்த்து. "பாவம்! அவனுக்குக் குடு!" என்றாள்.
தம்பையா துணியைக் கொடுத்தான்.
"நீ சாப்பிட்டாயா?" என்று தாயம்மாள் அவனைப் பார்த்துக் கேட்டாள்.
"அவன் எச்சியைச் சாப்பிடுறான், அம்மா. ராமசாமி வீட்டிலிருந்து எச்சிலையை எடுத்துவந்து சாப்பிடுறான். அசிங்கம்!" என்று முகத்தைச் சுளித்துக்கொண்டு சொன்னான் தம்பையா. குழந்தைகள் எல்லோரும் சிரித்தார்கள். "இந்தா தம்பையா! இனிமே அப்படிச் சொல்லாதே!" என்று அதட்டிவிட்டு, "நீ யாரப்பா? உனக்கு எந்த ஊரு?" என்று தாயம்மாள் சிறுவனை விசாரித்தாள்.
"விளாத்திகுளம்" என்றான் சிறுவன்.
"உனக்குத் தாய் தகப்பன் இல்லையா?"
"இல்லை"
"இல்லையா?" என்று அழுத்திக் கேட்டாள் தாயம்மாள்.
"உம்... செத்துப் போயிட்டாக."
"எப்போ, தம்பி?"
"போன வருஷம் அம்மா செத்துப் போயிட்டா. ஐயா, நான் சின்னப்பிள்ளையாயிருக்கும் போதே செத்துப் போயிட்டாராம்."
"உனக்கு அண்ணா தம்பி ஒருத்தரும் இல்லையா?"
"இல்லை"
உடனே தம்பையா கேட்டான்:
"தங்கச்சியும் இல்லையா?"
"இல்லை"
"பாவம்" என்று சொல்லிவிட்டுத் தம்பையா நிறுத்திக் கொண்டான்.
"இங்கே எதுக்கு வந்தே?" என்று தாயம்மாள் கேட்டாள்.
"கழுகுமலைக்குப் போறேன்."
"அங்கே ஆரு இருக்கா?"
"அத்தை" என்று பதில் சொன்னான் சிறுவன். அவன் விளாத்தி குளத்திலிருந்து கால்நடையாகவே நடந்து அந்தக் கிராமம் வரையிலும் வந்திருந்தான். இந்த இருபது மெயில் பிரயாணத்துக்கு நான்கு நாட்களாகிவிட்டன. நான்காவது தினத்தில் தான் இந்தக் கிராமத்தில் வந்து தங்க நேர்ந்தது. அதுவும் பொழுது இருட்டி விட்டதனாலும் பசியும் இருந்ததனாலும் தான் மறுநாள் விடிந்த பிறகு, எட்டு மெயில் தூரம் நடந்து கழுகுமலைக்குப் போனால், அவனுடைய அத்தை தன் வீட்டில் அவனை வைத்துக் கொள்ளுவாளா, விரட்டி விடுவாளா என்பது அவனுக்குத் தெரியாது. அத்தையையும் அவன் பார்த்ததில்லை. எப்படியோ, ஒரு வழியில் அவனுக்கு அவள் அத்தை என்றும், 'அங்கே போ' என்றும் யாரோ சொல்ல, அதை நம்பிக்கொண்டு அந்தச் சிறுவன் விளாத்திக் குளத்திலிருந்து கால்நடையாகவே நடந்து வந்திருக்கிறான்.
மேற்கண்ட விவரங்களை எல்லாம் சிறுவனுடைய வாய் மொழி மூலமாகவே தாயம்மாள் அறிந்து கொண்டாள்.
"உன் பேரு என்ன?" என்று கடைசியாகக் கேட்டாள் தாயம்மாள்.
"ராஜா" என்றான் சிறுவன்.
அப்புறம் அவனுக்குச் சாப்பாடு போட்டார்கள். அவன் சாப்பிட்ட பிறகு, குழந்தைகளுக்குப் படுக்கையை எடுத்து விரித்தாள். மண் தரை ஈரச் சதசதப்புடன் இருந்ததால், வெறும் ஓலைப்பாயை விரித்துப் படுப்பதற்கு இயலாமல் இருந்தது. அதனால், கிழிந்து போய்க் கிடந்த மூன்று கோணிப் பைகளை எடுத்து உதறி விரித்து, அதன் மேல் வீட்டிலிருந்த இரண்டு ஓலைப் பைகளையும் பக்கம் பக்கமாக விரித்தாள். ராஜா தெற்குக் கோடியில் படுத்துக் கொண்டான். அவனுக்குப் பக்கமாகச் செல்லையாவும் அப்புறம் தம்பையாவும் படுத்துக் கொண்டார்கள். தம்பையாவின் உடம்பு இரண்டு பாய்களிலுமே பாதிப்பாதி படிந்திருந்தது. வடகோடியில் தாயம்மாளும் மங்கம்மாளும் படுத்துக் கொண்டார்கள்.
எங்கோ தூரத்தில், ஒரு வீட்டில் சீனிவெடி வெடிக்கும் சப்தம் கேட்டது. தீபாவளி மறுநாளானாலும், யாரோ ஒரு துருதுருத்த பையன் அப்பொழுதே (வேட்டுப்) போட ஆரம்பித்துவிட்டான்.
வேட்டுச் சத்தம் கேட்டதும், "எனக்கு மத்தாப்பு..." என்றாள் மங்கம்மாள்.
"எனக்கும்..." என்றான் தம்பையா.
"நம்ம கிட்ட அதுக்கெல்லாம் பணம் ஏது மங்கம்மா? ராமசாமி பணக்காரன். அவனுக்குச் சரி, எவ்வளவு வேட்டுன்னாலும் போடுவான்."
"ஊஹும் எனக்கு மத்தாப்பு..." என்று முரண்டு பண்ணினாள் மங்கம்மாள்.
"வம்பு பண்ணாதே. சொன்னாக் கேளு. மத்தாப்பு கொளுத்தினா வயிறு நிறையாதா? காலையிலே உனக்கு தோசை சுட்டுத் தாரேன். நிறையச் சாப்பிடு, மத்தாப்பு எதுக்கு?"
மங்கம்மாள் தன் முரண்டை நிறுத்தவில்லை; அழுவதுபோல் சிணுங்க ஆரம்பித்தாள்.
செல்லையா தூங்க ஆரம்பித்தான்.
அப்போது தெருவில் ஆட்கள் நடந்து செல்லும் சந்தடி கேட்டது.
"சமீன் வந்து இறங்குறதுன்னா லேசா?" என்று தாயம்மாள் தனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டு, 'மங்கம்மா! நீ நல்ல பிள்ளை! பிடிவாதம் பண்ணாதே. அடுத்த வருஷம் நிறைய மத்தாப்பு வாங்குவோம். இந்த வருஷம் நாம் எவ்வளவு சங்கடப் பட்டோம்ன்னு உனக்குத் தெரியாதா?" என்றாள். அப்புறம் அவளால் சரியாகப் பேச முடியவில்லை. வாய் குழறியது. மங்கம்மாளைப் பார்த்துத்தான் அவள் பேசினாள். ஆனால் அவள் உண்மையில் தன்னுடைய தாயாரிடத்திலோ, தன்னை உயிருக்கு உயிராகப் பேணி வளர்த்த ஒரு கிழவியிடத்திலோ, தான் வருஷக் கணக்கில் அனுபவித்த துயரங்களைக் கண்ணீரும் கம்பலையுமாகச் சொல்லுவது போலவே பேசினாள். ஒரு நீண்ட பெருமூச்சுடன், "மங்கம்மாள்!... நீ கூட ஒரு நாள் சாப்பாடு இல்லாமெ பள்ளிக்கூடம் போனியே கண்ணு. உன் வயித்துக்குக் கூட அன்னிக்கு ஒருவாய்க் கூளு கெடைக்கல்லையே! (அவளுக்குக் கண்ணீர் வந்துவிட்டது.) சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் போது நீ மத்தாப்புக் கேக்கலாமா, கண்ணு? பேசாமப் படுத்துத் தூங்கு" என்று தேற்றினாள். மங்கம்மாளைப் பரிவோடு தடவிக் கொடுத்தாள்.
"ஒரு மத்தாப்பாவது வாங்கித் தா" என்றாள் மங்கம்மாள்.
அழுகையுடனும் துயரச் சிரிப்புடனும் தாயம்மாள் சொன்னாள்: "நீ தானே இப்படிப் பிடிவாதம் பண்றே? அந்தப் பையனைப் பாரு அவன் மத்தாப்பு கேக்கிறானா... சோறு கிடைக்காமே, எச்சிலைக்கூட எடுத்துத் திங்கறான்.... அவன் சோறு வேணும்ன்னு கூட அழல்லே; நீ மத்தாப்பு வேனும்னு அழறே மங்கம்மா..."
மங்கம்மாளுக்கு அவன் மேல் கோவம் வந்துவிட்டது. அவனைப் புகழ்ந்து, தன் கோரிக்கையைத் தாயார் புறக்கணித்துக் கொண்டுவருவது அவளுக்குப் பிடிக்கவில்லை. உடனே, "அவனுக்கு ஒரே சிரங்கு!" என்று திட்டுவது போலக் கடுமையாகச் சொன்னாள்.
"அவனுக்குத் தாய் தகப்பன் இருந்தா அப்படி இருப்பானா? தாயில்லாப் பிள்ளைன்னா யாரு கவனிப்பா? அவனோட அம்மா, முன்னாலே, அவனுக்குத் தீபாவளிக்குப் புதுவேட்டி, புதுச்சட்டை எல்லாம் வாங்கிக் குடுத்திருப்பா! மத்தாப்பும் வாங்கிக் கொடுத்திருப்பா. இப்போ, அவன் அதை எல்லாம் நினைச்சுக் கேக்கிறானா பாரு."
"இப்போ அவன் தூங்கிட்டான். காலையில் கேப்பான்" என்று சொல்லிவிட்டு மங்கம்மாள் சிணுங்கினாள்.தாயம்மாளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. "வாயாடி" என்று சொல்லி மங்கம்மாளின் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளினாள்.
தாயம்மாளுக்குத் திகைப்பாக இருந்தது. "எதை மூடிக்கிறது? ஊம்? என்று ஒரு கணம் யோசித்தால். அப்புறம், "என் பிள்ளைகளை விடவா அந்தப் பீத்தல் பெரிசு?" என்று சொல்லிக் கொண்டே எழுந்து போய், மறு நாள் கட்டிக்கொள்வதற்காக துவைத்து உலர்த்தி மடித்து வைத்திருந்த - உண்மையில் 'பீத்தல்' இல்லாத நாட்டுச் சேலையை எடுத்துக்கொண்டு வந்து ராஜா உட்பட உல்லோருக்கும் சேர்த்துப் போர்த்தினாள்.
மங்கம்மாளைப் பார்த்து, 'சரி, படுத்துக்கோ காலையிலே எப்படியும் வாங்கித் தாரேன்" என்று சொல்லி அவளை உறங்கப் பண்ணுவதற்கு முயன்றாள்.
மூன்றாவது தடவையாகவும் சீனவெடியின் சப்தம் கேட்டது.
தாயம்மாள் தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்: "இன்னிக்கு அங்கே யாரும் தூங்கமாட்டாக போலிருக்கிறது! ஊம், அரண்மனைக் காரியம்! ஆளு போறதும் வாரதுமா இருக்கும். ராமசாமியும் தூங்காம வேட்டுப் போடுறான்!"
ராமசாமியின் அக்காளைக் கல்யாணம் பண்ணிக் கொண்டவன் ஒரு ஜமீன்தாரின் மகன். அந்த வருஷம் தலை தீபாவளிக்காக அவனை அன்று மாலையில் அழைத்து வந்திருந்தார் ராமசாமியின் தகப்பனார். அந்த ஊரில் மட்டுமில்லாமல் அந்த வட்டாரத்திலேயே அவர்தான் பெரிய மிராசுதார். ஜமீன்தாரை, மிகவும் கோலாகலமாக அழைத்து வந்து தீபாவளி நடந்த அநேக தினங்களாகவே அவர் வீட்டில் ஏற்பாடுகள் நடந்து வந்தன. தீபாவளிக்கு முதல் நாள்தான் மாப்பிள்ளை வந்து இறங்கினான். அதற்க்கு முன் பத்துப் பதினைந்து நாட்களாக ஒரு நிமிஷத்திற்கு ஒன்பது தடவை, "ராஜா வர்றார், சிறப்பாகச் செய்யணும்" என்று அவர் சொல்லிக்கொண்டே இருந்தார். உண்மையில் வெகு சிறப்பாகத்தான் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன...
"மங்கம்மா!"
பதில் இல்லை; தூங்கிவிட்டாள்.
தாயம்மாளும் அகல் விளக்கை அணைத்துவிட்டுத் தலையைச் சாய்த்தாள்.
முதல் கோழி கூப்பிட்டதும் தாயம்மாள் கண்விழித்து விட்டாள். அப்போது மணி நாலு ஆகவில்லை. நல்ல வேளையாக மழை அப்போதுதான் நின்றிருந்தது சிறு தூவானம் மட்டும் ஓலைக் கூரையில் விழுவது, ஒரே நிதானத்துடன் சோளம் பொரிவது போலக் கேட்டுக் கொண்டிருந்தது. அந்தத் தெருவில் வேறு சில வீடுகளில் ஏற்கனவே எழுந்து தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடத் தொடங்கி விட்டதற்கு அடையாளமாக வேட்டுச் சப்தமும், வேட்டுச் சப்தத்தைக் கேட்டுப் பயந்து நாய்கள் குரைக்கும் சப்தமும் கேட்டுக் கொண்டிருந்தன.
தாயம்மாள் எழுந்து விளக்கை ஏற்றினாள். பழைய படியும் மழை பிடித்து விடக்கூடாதே என்று அவளுக்கு பயம். அதனால் குழந்தைகளை எழுப்பி, விறுவிறு என்று குளிப்பாட்டிவிட்டு, மற்ற வேலைகளை கவனிக்கலாம் என்று திட்டம் செய்தாள். குழந்தைகளுக்குப் படுக்கையை விட்டு எழுந்திருக்க மனமில்லை. கடைசியில் முனகிக் கொண்டும், புரண்டு படுத்துக்கொண்டும் ஒருவழியாக எழுந்து விட்டார்கள். அவள் ஒவ்வொரு குழந்தையாக எண்ணெய் தேய்த்து விட்டாள். ஆனால் ராஜா மட்டும் எண்ணெய் தேய்த்துக் கொள்ள முடியாது என்று சொல்லித் தூரத்தில் போய் உட்கார்ந்து கொண்டான். தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்காவிட்டால் தோஷம் என்று சொன்னாள். ராஜாவுக்கோ என்ன சொன்னாலும் காதில் ஏறவில்லை.
"அரப்புக் காந்தும்; நான் மாட்டேன்." என்று பிடிவாதமாகச் சொன்னான் ராஜா.
"அரப்புப் போடல்லே; சீயக்காய் போட்டுக் குளிப்பாட்டுறேன். குளிர்ச்சியாயிருக்கும்"
"ஊஹும்."
"தம்பி, சொன்னாக் கேளுடா. என்னை உன் அம்மான்னு நெனைச்சுக்கோ, உனக்குக் காந்தும் படியாக நன் தேய்ப்பனா? - வா, எண்ணெய் தேய்ச்சிக் குளி. இந்தத் தீபாவளியோடே பீடை எல்லாம் விட்டுப்போகும். குளிக்காம இருக்கக்கூடாதப்பா" - இப்படி வெகுநேரம் கெஞ்சிய பிறகுதான் அவன் வேறு வழி இல்லாமல் சம்மதித்தான்.
ராஜா எழுந்து வந்து மணையில் உட்கார்ந்தான். "அது தான் நல்ல பிள்ளைக்கு அடையாளம். ஒரு பிள்ளைக்குத் தேச்சி, ஒரு பிள்ளைக்கு தேக்காமல் விடலாமா? என் பிள்ளை குட்டியும் நல்லா இருக்கனுமில்லப்பா!..." என்று மற்றவர்களுக்குச் சொல்லுவது போலத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டே எண்ணெய் தேய்த்தாள். 'தாயில்லாக் குழந்தைன்னா இந்தக் கோலம் தான். நான் மூணாம் வருஷம் காய்ச்சலோட படுத்திருன்தேனே, அப்போ கண்ணை மூடியிருந்தா என் குழந்தைகளுக்கும் இந்தக் கதிதானே? அதுகளும் தெருவிலே நின்னிருக்கும்.' - இப்படி என்னென்னவோ மனதுக்குள் நினைத்துக் கொண்டு அவசர அவசரமாகக் குழந்தைகளைக் குளிப்பாட்டினாள். ஆனால், தாயம்மாள் பயபத்திரமாகச் சீயக்காய்த் தூளைப் போட்டுத் தேய்த்த போதிலும், ராஜா பல தடவைகள் 'ஐயோ, ஐயோ' என்று அழுதுவிட்டான். அவன் அழும்போதெல்லாம் அவள் 'இன்னிக்கோட உன் சிரங்கு குணமாயிரும்' என்று மட்டும் மாறி மாறிச் சொல்லிக்கொண்டே இருந்தாள்.
'யாரோ எவரோ? மழைன்னு வந்து வீட்டிலே ஒதுங்கிட்டான். அவனைப் போகச் சொல்ல முடியுமா! அவன் வந்த நேரம், தீபாவளியாப் போச்சு. குழந்தைகளுக்குள்ளே வஞ்சம் செய்யலாமா? பார்க்கிறவுகளுக்கு நான் செய்யறதெல்லாம் கேலியாயிருக்கும். அவுக கேலி செய்தாச் செய்துட்டுப் போகட்டும். எனக்கும் என் குழந்தைகளுக்கும் பகவான் துணை செய்வான்."
அவள் தோசை சுட்டுக் கொடுத்தாள். அவளுடைய குழந்தைகள் புதுத் துணி உடுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆவலினால் அவசர அவசரமாகச் சாப்பிட்டார்கள். தம்பையா கடைசித் தோசையைப் பாதியிலேயே வைத்து விட்டு எழுந்துவிட்டான். அவனால் மேற்கொண்டும் இரண்டு தோசைகள் சாப்பிட முடியும். இருந்தாலும் அவசரம்.
தெருவில் ஜன நடமாட்டம் தொடங்கிவிட்டது. மழையும் பரிபூரணமாக நின்றுவிட்டது. உதயத்தின் ஒளி சல்லாத் துணியைப்போல அவ்வளவு மெல்லியதாக ஊரையும் உலகத்தையும் போர்த்தியது.
புதுத் துணிகளுக்கு மஞ்சள் வைத்துச் செல்லையாவும் உடுத்துக் கொண்டான்; தம்பையாவும் உடுத்துக் கொண்டான். மங்கம்மாளும் பாவாடையும் சட்டையும் போட்டுக் கொண்டாள்.
அவன் கௌபீனத்தோடு நின்றான்.
தாயம்மாளுக்குப் 'பகீர்' என்றது. இத்தனையும் செய்தும் புண்ணியமில்லாமல் போய்விட்டதே என்று கலங்கினாள். இந்த மாதிரியான ஒரு கட்டத்தை அவள் எதிர்பார்க்கவே இல்லை. சிட்டைத் துண்டை எடுத்துக் கொடுப்பதா, கொடுக்காமல் இருப்பதா? அவள் மனதுக்குள்ளே வேதனை மிக்க போராட்டம். மாதக் கணக்கில் ஒரு ரூபாய்த் துண்டு இல்லாமல் அவளுடைய கணவன் பட்ட கஷ்டத்தையும், வீதிவழிப் போவதற்குக் கூசியதையும், "ஒரு துண்டு வாங்க வழியில்லையே!" என்று கணவன் துயரத்துடன் வாய்விட்டுப் புலம்பியதையும் நினைத்துப் பார்த்தாள். இந்தத் துயரத்தின் எதிர்புறத்தில், ஒன்றும் சொல்லாமல், ஒன்றும் செய்யாமல், மெளனமாக நின்று கொண்டிருந்தான் ராஜா.
தாயம்மாளுக்குத் திக்குத் திசை தெரியவில்லை; ராஜாவின் முகத்தை எதற்கோ ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தாள். ராஜாவோ வெகுநேரமாகக் கண்கொட்டாமல் அவளையே பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தான்.
"என்னைச் சோதிக்கத்தான் வந்திருக்கேடா நீ" என்று மனக் கசப்புடன் சொல்வது போலச் சொன்னாள் தாயம்மாள். ஆனால், அவளுக்கும் மனக் கசப்புக்கும் வெகுதூரம். மனதுக்குள் ஏற்பட்ட சிக்கல்களை விடுவிக்கவே இப்படிப்பட்ட ஒரு வாசகத்தை அவள் தூக்கிப் போட்டாளே ஒழிய அவள் சொற்களில் மனக்கசப்பின் நிழல் கூடப் படியவில்லை.
அப்போது மங்கம்மாள் எழுந்துவந்து அம்மாவின் கன்னங்களில் தன் உள்ளங்கைகளை வைத்து, தன் முகத்துக்கு நேராக அவளுடைய முகத்தைத் திருப்பினாள்; அப்புறம் ஏதோ ரகசியத்தைச் சொல்லுவதுபோலச் சொன்னாள்.
"பாவம்! அவனுக்கு அந்தத் துண்டைக்குடு அம்மா!"
குழந்தை இந்த வார்த்தைகளைச் சொல்லி நிறுத்தினாள். ஒரு நிமிஷம் மௌனம் நிலவியது. பிறகு, திடீரென்று தாயம்மாளின் முகம் கோரமாக மாறியது. முந்தானையால் முகத்தை மூடிக் கொண்டு கேவிக் கேவி அழுதாள். அவளுடைய பெருமூச்சும் விம்மலும் வீட்டை அடைத்துக் கொண்டு கேட்டன.
குழந்தைக்கு விஷயம் விளங்கவில்லை. மங்கம்மாள், தான் அப்படிச் சொன்னதர்க்காகத் தான் அம்மா அழுகிறாள் என்று பயந்துவிட்டாள்.
தாய், தன் பலத்தை எல்லாம் பிரயோகித்து அழுகையைத் தொண்டைக் குழியில் அழுத்தினாள், அவள் நெஞ்சு வெடித்துவிடும் போல் விம்மியது. குரலும் அந்த ஒரு நிமிஷத்தில் ஜலதோஷம் பிடித்ததுபோலக் கம்மலாகி விட்டது.
பிறகு தழுதழுத்துக் கொண்டே சொன்னாள்:
"தம்பையா!"
"என்னம்மா!"
"ஹூம், ராஜாவுக்கு அந்தத் துண்டை எடுத்துக்குடு."
வீட்டு முற்றத்தில் காலைவெயில் அடித்துக் கொண்டிருந்தது. அந்தப் பொன்னொளியில் மஞ்சள் பூசிய முகத்துடன் புத்தாடை தரித்துக்கொண்டு நிற்கும் மங்கம்மாள், அப்போது எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள். ஈரம் காய்வதற்கா இருக்கமில்லாதத் 'தொள தொள' என்று சடை போடப் பட்டிருந்ததால், கூந்தல், இரண்டு காதுகளையும், கன்னங்களில் பாதியையும் மறைத்துக் கொண்டிருந்தது. பரவலாகக் கிடக்கும். கூந்தலின் நடுவே இளங்காற்றுப் புகுந்து சிலுசிலுக்கும் போது, சுகமும் கூச்சமும் தாங்க முடியாமல் சிரித்துக் கொண்டே இமைகளைக் குவித்தாள் மங்கம்மாள்.
வெகு நேரமாக, தாயம்மாள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். சந்தர்ப்பவசமாக, அவளுக்கு நேராக மங்கம்மாள் முகத்தைத் திருப்பினாள்.
"என் ராஜாத்தி மகாலக்ஷ்மி மாதிரி இருக்கா!" என்று தன்னை மறந்து இன்பத்துடன் சொல்லிவிட்டாள் தாய். அவ்வளவுதான். குழந்தையின் கையைப் பிடித்து வெகுவேகமாக வீட்டுக்குள்ளே இழுத்துக்கொண்டு வந்து, திருஷ்டிப் பரிகாரமாக அவளுடைய கன்னத்தில் துலாம்பரமாகச் சாந்துப் பொட்டை எடுத்து வைத்தாள்.
அப்புறம் மங்கம்மாள் வீதிக்கு ஓடிவிட்டாள். ராமசாமியின் வீட்டுப் பக்கம் எச்சில் இலைகள் ஏராளமாகக் கிடந்தன. அங்கே நாலைந்து பேர் நின்று பேசிக் கொண்டும், வெற்றிலை பாக்குப் போட்டுத் துப்பிக் கொண்டும் இருந்தார்கள். ராமசாமி நீலநிறமான கால்சட்டையும், அந்த ஊருக்கே புதிய புஷ்கோட்டும் போட்டுக் கொண்டு நின்றான். மங்கம்மாளைப் பார்த்ததும் அவன் பக்கத்தில் ஓடிவந்தான்; மங்கம்மாளும் அவனைப் பார்த்து நடந்தாள். இருவரும் பாதி வழியில் சந்தித்துக் கொண்டனர். சந்தித்த மாத்திரத்தில், மிகவும் சந்தோஷத்துடன் ராமசாமி சொன்னான்...
"எங்க வீட்டுக்கு ராஜா வந்திருக்கார்!"
ஊர்க்காரர்களைப் போல அவனும் தன் அக்காள் புருஷனை ராஜா என்று சொன்னான். ஆனால் அவன் சொன்னதற்குக் காரணம் சந்தோஷம்தானே ஒழிய மங்கம்மாளைப் போட்டிக்கு அழைப்பதற்கு அல்ல. ஆனால், அவளோ வேறுவிதமாக நினைத்து விட்டாள். முதல் நாள் பள்ளிக் கூடத்திலிருந்து வந்தபோது நடந்த போட்டிதான் அவள் ஞாபகத்தில் இருந்தது. அவன் சொன்னதற்குப் பதில் சொல்லி அவனுடைய 'பெருமை'யை மட்டம் தட்டவேண்டும் என்று அவள் மனம் துடித்தது.
அதனால் ஒரு அரை அடி முன்னாள் நகர்ந்து வந்து நின்றாள். யாதொரு திகைப்பும், தயக்கமும் இல்லாமல் ராமசாமியைப் பார்த்து, ரேகை சாஸ்திரியிடம் காட்டுவது போலக் கையை வைத்துக் கொண்டு, மிக மிக ஏளனமாகச் சொன்னாள்.
"ஐயோ! உங்க வீட்டுக்குத்தானா ராஜா வந்திருக்கார்? எங்க வீட்டுக்கும் தான் ராஜா வந்திருக்கார். வேணும்னா வந்து பாரு."
****************
எனக்கு சில்க் சட்டை இருக்கே! உனக்கு இருக்கா! என்று கெட்டிக்காரத் தனமாகக் கேட்டான் ராமசாமி. செல்லையா பதில் சொல்லத் தெரியாமல் விழித்துக் கொண...
மாலை ஐந்து மணி அடிப்பதற்கு முன்பே சைதாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் வந்து உட்கார்ந்து விட்டான் ஸ்ரீனிவாசன். கையில் ஒரு காசுகூடக் கிடையாது. இருந்ததெல்லாம் ஒரு மலிவு விலைப் பவுண்டன்பேனா, ஒரு வேஷ்டி, ஒரு சட்டை, சட்டையில் இரண்டு பிளாஷ்டிக் பித்தான்கள், அன்று மாலைப் பதிப்பாக வெளிவந்த ஒரு தமிழ்த் தினசரி, சந்தேகத் தெளிவுக்காக வாங்கிய ஓர் ஆங்கில தினசரிப் பத்திரிக்கை--இவ்வளவுதான். பிளாட்பாரத்தின் கோடியில் கிடந்த ஒரு பெஞ்சில் தனியாளாக ஒரு மணி நேரத்துக்கு மேலேயே உட்கார்ந்துகொண்டிருந்து விட்டான். இவனுக்கு முன்னும் பின்னும் இரண்டொரு பிரயாணிகளும், ஏகதேசமாக ஒரு ரயில்வே ஊழியரும், ஒரே ஒரு தடவை மட்டும் முதுகுக்குப் பின்புறமாக ஒரு போலீஸ்காரரும் நடந்து சென்றார்கள். அடிக்கடி குறித்த காலத்தில் மின்சார வண்டிகள் வருவதும் புறப்படுவதுமாக இருந்தன.
ஸ்ரீனிவாசன் பெஞ்சில் சாய்ந்துகொண்டு யாரையும் எதையும் பார்க்காமல், வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். விதிவிலக்காக மின்சார வண்டிகளை மட்டும் இரண்டொரு தடவைகள் பார்த்துவிட்டு முகத்தை மேல் நோக்கித் திருப்பிக்கொண்டான். வானத்துக்கும் இவனுக்கும் இடையே வெகுநேரம் வரைக்கும் ஒரு துளி கண்ணீர் திரை போட்டு மறைத்துக் கொண்டிருந்தது. கண்ணுக்குத் தெரியும் வானக் காட்சி மனசைப் போலவே கலங்கிப் போயிருந்தது. துயரத்தின் போது, வெளியிலும் தெளிவில்லை; உள்ளேயும் தெளிவில்லை. தெளிந்து, தீர்மானத்துடன், துணிவுடன் வந்த ஸ்ரீனிவாசனைத் துயரம் திடார் திடார் என்று பொங்கி எழுந்து கலக்கி அலைக்கழித்துக் கொண்டிருந்தது.
பயப்பட வேண்டியதற்கே பயப்படாமல் வந்தாகிவிட்டது. அப்புறம் வேறு எதற்குப் பயப்படுவதிலும் அர்த்தமில்லை. இதனால்தான் டிக்கெட் இல்லாமலும் காசு இல்லாமலும் ஸ்டேஷன் பிளாட்பாரத்துக்கு உள்ளே வேகமாக வந்துவிட்டான். வீட்டுக்கு வெளியே உட்காருவதற்கு அது ஒன்றுதான் அவனுக்கு இடமாகப் பட்டது. வந்து சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, பெஞ்சில் அமர்ந்தான். முன்பின் தெரியாத பிரயாணிகளைத் தவிர வேறு யாரும் இல்லை. இது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
மாலை ஐந்து மணி அடித்தது. இருட்டுவதற்கு இன்னும் ஒன்றரை மணி நேரம் ஆகும். அது வரை அங்கேயே உட்கார்ந்திருப்பது என்ற முடிவு; உட்கார்ந்து கொண்டிருந்தான்.
வேகமாக ரயில் வண்டிகள் வந்து போயின. ஓட்டமும் நடையுமாக வந்து வண்டிகளில் தொற்றிக்கொண்டிருந்தார்கள் பிரயாணிகள். சூழ்நிலை முழுதுமே ஓட்டமும் பரபரப்புமாக இருந்தது. ஆனால் ஓட்டமின்றி சாவதானமாக வேலை செய்துகொண்டிருந்தது கடிகாரம் ஒன்றுதான். அரை மணி கழிந்திருக்கும் என்று ஏறிட்டுப் பார்த்தால், ஐந்து நிமிஷம்கூட ஆகியிராது. இது அவனுடைய துன்பத்தைப் பெரிதாக்கிக் கொண்டிருந்தது. எத்தனைப் பேரைப் பற்றிய நினைவுகள், எத்தனை வருஷத்துச் செய்திகள், எத்தனைவித அனுபவங்கள்-- எல்லாவற்றையும் மாறி மாறி ஒன்றுக்குப் பல தடவையாக நினைத்துப் பார்த்து, பெருமூச்சு விட்டு, சில சமயங்களில் தன்னுணர்வையும் இழந்து, கடைசியில் திரும்பிப் பார்த்தாலும், கடிகாரம் ஒரு சில நிமிஷங்களுக்கு மேல் தாண்டியிராது.
ஒரு விஷயத்தில் தவறு செய்து விட்டோம் என்றே ஸ்ரீனிவாசனுக்குத் தோன்றியது. தெருக்களில் சுற்றி அலைந்திருந்தால், நேரம் வேகமாகக் கழிந்திருக்கும். ஒரு மணி நேரம் கால் போன போக்கில் திரிந்துவிட்டு அப்புறம் ஸ்டேஷனுக்கு வந்திருக்கலாம். எடுத்த எடுப்பிலேயே இங்கே வந்து உட்கார்ந்து, காலத்தை ஓட்ட முடியாமல் அவதிப்படுவதற்குத் தன்னுடைய முட்டாள்தனமே காரணம் என்று நினைத்து வருந்தினான். இனி என்ன செய்வது ? என்ன செய்ய முடியும் ? டிக்கெட் இல்லாமல் ஸ்டேஷனை விட்டு வெளியே போகமுடியாது. எனவே, தானே புகுந்த சிறைக் கூடத்தில், இருக்கவேண்டிய காலத்தை இருந்தே தீர்ப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது.
இப்படிச் சிரமப்பட்டுத் திக்குமுக்காடிக் கொண்டிருந்த ஸ்ரீனிவாசனைத் திடாரென்று ஒருவன் தன் வாய்ச்சொல்லால் தட்டி எழுப்பினான். அவன் ஸ்டேஷனைச் சேர்ந்த ஒரு சிப்பந்தி. அவன் கவனித்த வரையில், மூன்று வண்டிகள் வந்து போயும்கூட ஸ்ரீனிவாசன் ஒரு வண்டியிலும் ஏறாமல் உட்கார்ந்திருந்ததால் அருகில் வந்தான். 'யாரப்பா ? ஏன் இங்கே உட்கார்ந்திருக்கிறாய் ? ' என்று கேட்டான். உடனே, 'எங்கே போகவேண்டும் ? ' என்றும் கேட்டான்.
ஸ்ரீனிவாசனுக்கு உலகப் பிரக்ஞை வந்தது. ஒரு பதிலும் சொல்லாமல் எழுந்து நின்றான்.
'எங்கே போகவேண்டும் ? '-- திரும்பவும் கேட்டான் ரயில்வே சிப்பந்தி.
ஸ்ரீனிவாசன் தன்னைச் சமாளித்துக் கொண்டு, 'எழும்பூருக்கு ' என்றான்.
'சரியாய்ப் போச்சு, போ ' எழும்பூருக்கு அந்தப் பக்கமாகப் போய் நில். இங்கே தாம்பரம் வண்டிதான் நிற்கும் ' என்று சொல்லி ஸ்ரீனிவாசனை அவன் கிளப்பி விட்டான்.
'நல்ல வேளை ' என்று ஸ்ரீனிவாசன் எழுந்து எதிர்ப்பக்கப் பிளாட்பாரத்தை நோக்கி நடந்தான். சிப்பந்தி தன் வேலையைக் க்வனிக்க போய்விடவே, இவன் அந்தப் பிளாட்பாரத்தில் ஒரு மூலையைத் தேடிப் பிடித்து உட்கார்ந்தான். அப்பொழுதிலிருந்துதான் அவனுக்குப் பய உணர்ச்சி தோன்ற ஆரம்பித்தது. அந்த அளவுக்குத் துயர நினைவுகள் குறையலாயின. சில சமயங்களில் பயம் தாழ்ந்து, துயரம் பொங்கும். இந்த இரண்டும் இரண்டு அலைகளாக அவன் மனத்தில் எழுவதும் விழுவதுமாக இருந்தன.
ஒவ்வோர் ஆளைப் பார்க்கும்போதும் ஒரு சந்தேகம், ஒரு பயம் --- அவன் ரயில்வே சிப்பந்தியாக இருக்கலாமோ என்று. அவன் பார்த்துவிட்டால், இவனை முழுக்க முழுக்கச் சந்தேகித்து, 'டிக்கெட் இருக்கிறதா ? ' என்று கேட்பான். 'இல்லை ' என்று பதில் சொன்னால் மறுகணமே ஸ்டேஷன் மாஸ்டர் முன்னிலையில் போய் நிற்கவேண்டி வரும். அப்புறம், தன் மீது குற்றம் சாட்டப்படும். அதைத் தொடர்ந்து வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டு.... அதன்பின் என்ன நடந்தால் என்ன ? வீட்டுக்குத் திரும்பி விட்டால் அப்பாவைப் பார்க்கவேண்டும்; அம்மாவைப் பார்க்கவேண்டும்; தங்கையைப் பார்க்க வேண்டும்; மூவருடைய கண்ணீரையும், கசப்பையும், சிதைந்த கனவையும் பார்க்க வேண்டும். ஒரு மனிதனுக்கு இத்தனையுமே அதிகம். ஆனால் ஸ்ரீனிவாசனோ இவற்றையும் தாண்டி, சுகன்யாவையும் வேறு பார்க்கவேண்டியிருந்தது. அவளைப் பார்ப்பது என்றால் தன் அவமானத்தையே கண்ணெதிரே பார்ப்பது என்றுதான் அர்த்தம். 'உனக்கு இனி உய்வில்லை, வாழ்க்கையில்லை ' என்று சொல்லாமல் சொல்லும் ஒரு கொடிய விதியைக் கண்ணெதிரே காண்பதற்கும் அதற்கும் வித்தியாசம் இல்லை. இவற்றைப் பார்ப்பதைவிட, மரணத்தைப் பார்ப்பது எவ்வளவு சுலபம் ' எவ்வளவு இதமானது '--- இப்படித் தோன்றிவிட்டது அவனுக்கு. இந்த யோசனையுடனேயே ஸ்டேஷனை நோக்கிப் பத்திரிக்கையும் கையுமாக வந்தான். பத்திரிகையில் அன்று மாலை எஸ்.எஸ்.எல்.சி. பரிட்சை முடிவுகள் வெளியாகியிருந்தன. தமிழ் பத்திரிக்கையிலும் அவனுடைய நம்பர் இல்லை; ஆங்கிலப் பத்திரிக்கையிலும் இல்லை.
* * * *
கிருஷ்ணசாமி ஐயங்கார் தம் மகனுடைய எஸ்.எஸ்.எல்.சி. படிப்பை ஒரு கற்பக விருட்சமாகவே கருதியிருந்தார். அவன் படித்துப் பாஸ் பண்ணிவிட்டால், கற்பக விருட்சம் விரும்பியதையெல்லாம் கொடுக்காவிட்டாலும் ஓய்ந்து உட்காருவதற்கு நிழலாவது கொடுக்கும் என்பது அவர் நம்பிக்கை. வாழ்நாளெல்லாம் பட்ட துன்பங்களுக்கு ஒரு முடிவும் உண்டு, தமக்கு ஒரு விடிவுகாலமும் உண்டு என்று அவர் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து, நிகழ்காலத்தைத் தள்ளிக்கொண்டு வந்தார்.
அவருடைய குடும்பம் அப்படி ஒன்றும் பெரியதல்ல. மனைவி, மகன், மகள், அப்புறம் அவர்--இந்த நான்கு பேர்தான். ஏகாங்கியேயானாலும் போதிய வருமானமில்லாவிட்டால், தரித்திரத்திலிருந்து தப்புவது எப்படி ? அவருக்குத் தொழில், பெருமாள் கோவில் பூஜை செய்வது. கோவிலோ அவரைப் போன்றே ஏழ்மை நிலையில் இருந்தது. அந்தப் பகுதியில் வசித்து வந்த ஒரு குறிப்பிட்ட ஜாதியாருக்கு அந்தப் பெருமாள், குலதெய்வம். பூஜித்துக் கொண்டாடவேண்டியவர்களில் பெரும்பாலோர் வசதியான நிலையில் இல்லாததால் தெய்வத்துக்குச் சிற்ப்பும் பூசனையும் இல்லாது போய்விட்டது. பெரும்பாலும் இரண்டொரு பணக்கார வியாபாரிகளின் தயவில்தான் கோவிலும், கோவிலை நம்பிய கிருஷ்ணசாமி ஐய்யங்கார் குடும்பமும் நிலைபெற்று வந்தன. மாதம் ஐம்பது அறுபதுக்குள்ளாகவே வருமானம். இதில் வாடகை, பள்ளிச் செலவு போக மீதி முப்பது முப்பத்தைந்தை வைத்துத்தான் உண்ணவும் உடுத்தவும் வேண்டும். இப்படி வருஷக் கணக்கில் ஜீவனம். பையன் எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் செய்து விட்டு வரட்டும், ஏதாவது ஒரு வழி செய்யலாம் என்று கோவில் பக்தர்களில் ஒருவரான பணக்கார வியாபாரி ஒருவர் ஐய்யங்காரிடம் உறுதியளித்திருந்தார் மிஞ்சிப் போனால் தம் கடையிலேயே தற்காலிகமாக வேலைக்கு வைத்துக்கொண்டு, அவன் டைப்பும் சுருக்கெழுத்தும் படித்தபின் வேறு நல்ல வேலையில் சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்வதாக அவர் சொல்லியிருந்தார். எனவே, முழு நம்பிக்கையோடு காத்திருந்தார் ஐய்யங்கார். மகனுடைய படிப்பின் மீது தம் எதிர்காலச் சுமையைத் தூக்கி வைத்துவிடலாம் என்றே அவர் கோட்டை கட்டினார்.
ஸ்ரீனிவாசனின் தாயார் தன் பங்குக்கும் சுமை ஏற்றத் தவறவில்லை. மகனுடைய படிப்பை அஸ்திவாரமாக கொண்டு அவள் கட்டிய மனக்கோட்டைகள் பல. அவன் உத்தியோகம் பார்த்துச் சம்பாதிப்பதைச் சேர்த்து வைத்து மகளுக்குக் கல்யாணம் பண்ணிவிடவேண்டும்; அப்புறம், இரண்டு அறைகள் உள்ள ஒரு வீட்டைப் பார்த்து வாடகைக்குப் பிடிக்க வேண்டும்; மகனுக்கும் கல்யாணம் ஆகவேண்டும்; பேரன் பேத்தி எடுத்துப் பார்க்கவேண்டும்.....
இப்படிப் பெற்றோர் இருவருமே அந்தக் கற்பக விருட்சத்தின் அடியில் போய்ப் புகலிடம் தேடக் காத்திருந்தனர். இது ஸ்ரீனிவாசனுக்குத் தெரியும். தன்னுள்ளே தான் வளர்க்கும் கற்பகக் கன்று வாடிவிடக் கூடாது என்று அதற்கு அல்லும் பகலும் உரமிட்டு வளர்க்கும் முறையில், அரும்பாடுபட்டுப் படித்தான். செடியை தண்ணீர் விட்டோ, கண்ணீர் விட்டோ, ரத்தத்தைச் சிந்தியோகூட வளர்த்துவிடலாம். ஆனால் செடி முளை விடுவதற்கு ஒரு சாண் அகலக் கொல்லையாவது வேண்டாமா ?
ஸ்ரீனிவாசனுக்கு நிம்மதியாக இருந்து படிக்க வீட்டில் இடமில்லை. ஒட்டுக் குடித்தனமாக இருக்கும் ஒரே அறைதான் வீடு. இதனால் புத்தகமும் கையுமாகப் பெருமாள் கோவிலுக்கே போய்விடுவான். பள்ளிக்கூடம் போகும் வரை படிப்பான். அப்புறம் பள்ளி முடிந்து வந்து இருட்டும் வரையில் அங்கே உட்கார்ந்து படிப்பான். விடுமுறை நாட்களில் பகல் முழுதும் அங்கேதான். கோவிலில் சில சமயங்களில் வழிப்போக்கர்கள் சிலர் தூங்குவார்கள்; பிச்சைக்காரர்கள் குறட்டை விடுவார்கள்; குழந்தைகள் ஓடி விளையாடுவார்கள்; வீண் பேச்சுப் பேசிக்கொண்டிருப்பார்கள் சில ஆசாமிகள்......இந்தச் சூழ்நிலையில் ஸ்ரீனிவாசன் கற்பகக் கன்றை வளர்த்து வந்தான்.
ஆனால் ரத்தத்தை விட்டு வளர்த்த செடியும் பரிதாபகரமாகக் கருகிவிட்டது. இதற்கு யாரை நொந்துகொள்வது ? உலகத்தில் காரணம் தெரியாத துன்பங்களுக்குப் பஞ்சமா என்ன ? தேனினும் இனிய குரல் படைத்திருந்த எவனோ ஒரு பாடகனுக்குத் தொண்டையில் புற்றுநோய் வந்ததாமே, அதற்கு என்ன காரணம் ?
பரீட்சையில் தேறவில்லை என்பது தெரிந்ததும் ஸ்ரீனிவாசனுக்கு இந்த உலகமே காலடியிலிருந்து நழுவிவிட்டது. கடையில் பத்திரிக்கையை வாங்கிப் படித்தவன், ஆவலோடு காத்திருக்கும் பெற்றோர்களை நோக்கி வராமல் ஸ்டேஷனைப் பார்த்து வெறி கொண்டவன் போல் நடந்தான். அப்பொழுது பெற்றோரின் நினைவும், கல்யாணத்துக்குக் காத்திருக்கும் தங்கையின் நினைவும் வந்திருந்தால் வெறும் வேதனையாக மட்டும் இருந்திருக்கும். ஆனால் சுகன்யாவின் முகம் மனக்கண்முன் வந்து நின்று விடவே, வேதனையோடு அவமானமும் கலந்தது. தன்னைத் தானே வெறுத்தான்.
தன்னை ஒரு மனிதப் பிறவி என்று மதிக்கவே அவனால் முடியவில்லை. தான் இந்த உலகத்துக்கு ஒரு களங்கமாக, அசிங்கமாக இருப்பது போலவே அவனுக்குத் தோன்றியது. இந்தக் களங்கத்தைப் போக்கினால்தான் தன் அருவருப்பு உணர்ச்சி நீங்கும். சேற்றிலே நிற்பது போல் அவன் உடம்பில் உயிர் நின்று தத்தளித்தது. சீக்கிரத்தில் இந்தச் சாக்கடையை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று வேகமாக ஸ்டேஷனை நோக்கி வந்தான்.
இருட்டும் வரையில் அங்கே உட்கார்ந்திருக்க வேண்டும்; இருட்டிய பிறகு எழுந்து சிறிது தூரம் நடக்க வேண்டும்; அப்புறம் ஓடும் ரயில் முன்னால் விழுந்து உயிரைப் போக்கிக்கொள்ள வேண்டும். இதுதான் அவன் செய்திருந்த முடிவு.
* * * * * * * * * * *
நேரம் ஆக ஆக ஸ்ரீனிவாசன் பெற்றோரையும், அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையையும், பரிட்சை தேறாமல் போனதையும்கூட மறந்துவிட்டான். அந்த நினைவுகளுடன் சம்பந்தப்பட்ட உணர்ச்சிகளெல்லாம் கோரக்கூத்தாடிவிட்டு ஓய்ந்து விட்டன். மிஞ்சி நின்ற நினைவு, அனைத்தையும்விடச் சக்தி வாய்ந்ததாக இருந்த நினைவு சுகன்யாவைப் பற்றிய நினைவுதான்.
சுகன்யா பரிட்சையில் தேறிவிட்டாள். அவளுடைய நம்பர் பத்திரிக்கையில் இருக்கிறது; இரண்டு பத்திரிக்கைகளிலுமே இருக்கிறது. இதை நினைக்கும்போது அவனுக்கு அவமானமாக இருந்த நிலைமாறி, அவள்மேல் கோபம் கொள்ளும் ஒரு விசித்திரமான நிலையும் ஏற்பட்டது. எதற்காகக் கோபம் ? எதற்காகவுமே கோபம்தான். அவள் ஏன் பரிட்சையில் தேறினாள் ? ஏன் ஒரு பெண்ணாகப் பிறந்தாள் ? எதற்காக எதிர்வீட்டுக்கு அப்பா அம்மாவோடு குடியிருக்க வந்தாள் ? பரிட்சை நெருங்கும் சமயத்தில் ஏன் அடிக்கடி தன்னிடம் வந்து, தெரியாததையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டாள் ? அவள் செய்த காரியங்கள் அனைத்துமே அவனுடைய கோபத்துக்குக் காரணங்களாகிவிட்டன.
சுகன்யா மீது இப்படிக் கோபமும் ஆத்திரமும் பிறக்கும் ஒரு கட்டம் வரும் என்று அவன் எதிர்பார்த்ததே இல்லை. அதனால் இப்போது கோபம் வருவதைக் கண்டு, தனக்கு மூளைக் கோளாறு ஏற்பட்டுவிட்டதோ என்றுகூட ஒரு கணம் பயந்தான். உள்ளமும் உடம்பும் கொதித்தன. தன் நெருப்பு தன்னையே சுட்டது. வெப்புத் தாங்கமுடியாமல், 'சுகன்யா ' ' என்று வாய்விட்டே சொல்லி அனல் வீசும் சுவாசத்தை வெளியே விட்டான். 'சுகன்யா ' எதற்காக நீ எதிர்வீட்டுக்கு வந்தாய் ? ஏன் என்னிடம் வந்து பாடம் படித்தாய் ? எதற்காக நீ பரிட்சையில் பாஸ் பண்ணினாய் ? '
* * *
ஸ்ரீனிவாசன் குடியிருந்த வீட்டுக்கு எதிர்வீடு ஒரு வருஷத்துக்கு முன் காலியாயிற்று. யாரோ ஒரு சர்க்கார் உத்தியோகஸ்தர் மனைவியோடும் மகளோடும் அங்கே குடிவந்தார். மகள் பள்ளிக்கூடம் போகிறவளாக இருந்தாள். எந்தப் பள்ளிக்கூடம், என்ன வகுப்பு என்பவற்றையெல்லாம் சிரத்தை எடுத்துக் கண்டு பிடித்துவிட்டான் ஸ்ரீனிவாசன். தன்னைப் போலவே எஸ்.எஸ்.எல்.சி. படிப்பவள். வயதிலும்கூடத் தனக்குச் சமதையாக இருக்கக்கூடும் என்று நினைத்தான். முதலில் அவனுக்கு இது ஆச்சரியமாகக்கூட இருந்தது. ஏனென்றால் அவன் படிக்கும் வகுப்பில் அவன்தான் அசாதாரணமாக மூத்தவன். இருபது வயதுப் பையன். தனக்கு அடுத்த வயது மாணவன், நான்கு வயது குறைந்தவனாகவே இருந்தான். இடையிடையே பணக்கஷ்டம் வந்து, அந்தந்த வருஷத்துப் படிப்பைப் பாழடித்தது. ஒரு தடவை நோய்வாய்ப்பட்டு மாதக்கணக்கில் கிடந்தான். இத்தனை தடங்கல்களையும் தாண்டவேண்டிய நிர்பந்தத்தினால், இந்த வயதில் இந்த வகுப்புப் படிக்கவேண்டியிருக்கிறது. ஆனால் சுகன்யாவுக்கு என்ன தடங்கல்கள் ஏற்பட்டிருக்கமுடியும் ? வசதியான குடும்பத்தில் பிறந்து ஏகபுத்திரியாக இருக்கும் அவள், இப்போது கல்லூரியில் அல்லவா படிக்கவேண்டும் ? இந்தத் திகைப்பு அவனுக்குப் பல மாதங்கள் வரை நீங்கவில்லை.
சுகன்யா அழகாக இருந்தாள். நிமிர்ந்து பார்த்தாலும் யாரையும் பார்க்காத ஒரு பார்வை. முகத்தில் சிரிப்புக் களையை ஒருநாள்கூட அவன் பார்த்தவனல்ல. எதிர்ப்பட்ட சமயங்களிலெல்லாம் பார்க்காதவள்போல் தன்னைக் கடந்து செல்லுவாள். மிகவும் கர்வம் பிடித்தவளாக இருக்க வேண்டும் என்று நினைத்தான். இது அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அவள் அழகு பிடித்திருந்தது; அவள் எதிர்வீட்டில் குடியிருந்தது பிடித்திருந்தது; ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது அவளைப் பார்ப்பதும் அவனுக்கு பிடித்திருந்தது.
பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் சுகன்யா வீட்டுக்கு ஒரு டியூஷன் வாத்தியார் வர ஆரம்பித்தார். எந்நேரமும் அவள் புத்தகமும் கையுமாக இருந்தபடியால் முன்போல் தினந்தவறாமல் அவளுடைய தரிசனம் கிடைக்கவில்லை. கண்ணாரக் கண்டால், அதைப் பற்றி எண்ணி இன்ப உணர்ச்சி பெறுவது சிறிது நேரமே நீடிக்கும்; காணாத தினத்திலோ. ஏமாற்ற உணர்ச்சி நாளெல்லாம் நீடித்திருக்கும். இதற்காக அவன் படிப்பில் அசிரத்தையாக இருந்துவிடவில்லை. பெருமாள் கோவிலில் உட்கார்ந்து மனப்பாடமாக இருந்த பாடங்களையும்கூடத் திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டுதான் இருந்தான்.
ஒருநாள் மாலையில் நன்றாக இருட்டியதும் புத்தகக் கட்டுடன் வீட்டுக்குத் திரும்பினான் ஸ்ரீனிவாசன். நல்ல பசி. காலையில் சாப்பிட்டது. மத்தியானம் வெறும் காபிதான். வீட்டுக்கு வந்து பார்த்தால் சாப்பாடு இன்னும் தயாராகவில்லை. சோர்ந்து துவண்டு ஒரு மூலையில் படுத்துவிட்டான். சிறிது நேரத்துக்கெல்லாம் எதிர்பாராவிதமாக வீட்டுக்குள்ளே வந்தாள் சுகன்யா.
ஸ்ரீனிவாசனின் தாயார் புரியாமல் விழித்துப் பார்த்தாள். அவனுக்கோ ஒன்றுமே விளங்கவில்லை. சுகன்யா தனது வீட்டுக்கு வருவதா ?
வீட்டுக்குமட்டும் அவள் வரவில்லை; அவன் அருகிலும் வந்தாள். அவள் கையில் ஆங்கிலப் புத்தகம் இருந்தது. அவன் எழுந்தான். குறிப்பிட்ட ஒரு பக்கத்தை திறந்து அவனிடம் காட்டிச் சில சந்தேகங்களைக் கேட்டாள். அவை மிகமிக எளிமையான பகுதிகள், அவனைப் பொறுத்த வரையிலும். சந்தேகங்களைப் போக்கினான்--- நின்றுக்கொண்டேதான். அப்பொழுது அவள் கேட்ட இரண்டொரு கேள்விகள், அவளுடைய கல்வித் தரத்தை எடுத்துக்காட்டுவனபோல் இருந்தன. ஆனால், அதைப்பற்றி அவன் அப்போது நினைக்கவில்லை. அவள் வந்ததும், நின்றதும் சில வார்த்தைகள் பேசிவிட்டுப் போனதும்தான் அவன் மனசில் பதிந்திருந்தன. அவள் தன்னைத் தேடி வந்துவிட்டாள்; தன்னிடம் உதவி கோரி வந்துவிட்டாள். தனக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. இந்தக் காரணங்களெல்லாம் சேர்ந்து, சிறிது நேரத்துக்கு அவன் பசியைக்கூட மறக்கடித்துவிட்டன். தாங்கமுடியாத சந்தோஷம்.
இரவு சாப்பிட்டுப் படுத்த பிறகு, அவள் தனக்கு 'நன்றி ' சொல்லாமலே போனது ஞாபகம் வந்தது. சர்வ சாதாரணமான எளிய பகுதிகளைக்கூடப் புரிந்துகொள்ளாத மோசமான கல்வித்தரம் நினைவுக்கு வந்தது. நிச்சயம், பல வகுப்புக்களில் பெயிலாகியிருப்பாள் என்று நினைத்தான். அவள் தனக்குச் சமமான பிராயத்தில் இந்த வகுப்புப் படிப்பதன் காரணம் இப்போது புலனாகிவிட்டது. அவனுக்கு.
அழகாக இருந்தாலும் புத்திக்கூர்மை இல்லை. அத்துடன் நன்றி உணர்ச்சியும் இல்லை. எது இல்லாமல் போனால்தான் என்ன ? அழகு இருந்தது; தன்னைத் தேடி வருவதில் இன்பானுபவம் இருந்தது. அப்புறம், இல்லாத எதைப்பற்றித்தான் கவலை ?
ஸ்ரீனிவாசன் விழுந்து விழுந்து படிப்பதற்குக் குடும்பத்தின் எதிர்கால ஷேமம் மட்டும் காரணமல்ல; சுகன்யாவின் கண்முன் தான் ஓர் அறிவாளியாக, வீரனாக விளங்க வேண்டுமென்ற வேட்கையும் உண்டாகிவிட்டது.
அந்தப் பெண் இரண்டு வாரங்களுக்குப்பின் மற்றொரு முறையும் வந்தாள். பரீட்சை தொடங்குவதற்கு முன் மேலும் இரண்டு தடவைகள் அவள் வந்துவிட்டாள்.
ஒரு சந்தர்ப்பத்தில்கூட அவள் உட்காரவில்லை. தன் சந்தேகங்களைக் கேட்பதைத் தவிர வேறு எதைப்பற்றியும் பேசவில்லை. 'தாங்க்ஸ் '---அதை உச்சரிக்கக்கூட இல்லை.
ஒருநாள் தெருவில் கண்ணுக்கு எதிரே அவளைப் பார்த்தபோது, பழகிய பெண் என்பதால் ஸ்ரீனிவாசன் இலேசாகப் புன்னகை செய்தான். அவள் பதிலுக்குச் சிரிக்கவுமில்லை; அவனைப் பார்க்கவுமில்லை. கவனியாமலே போய்விட்டாள்.
உரிய நாளில் அவர்கள் இருவரும் பரீட்சை எழுதினார்கள்.
அவள் தேறிவிட்டாள்.
அவன் தேறவில்லை.
* * * *
நன்றாக இருட்டிவிட்டது. ஸ்டேஷனில் ஒன்றுபாக்கியில்லாமல் எல்லா விளக்குகளும் ஏற்றப்பட்டுவிட்டன. தான் குறித்திருந்த நேரமும் வந்துவிட்டது. இனியும் அங்கே உட்கார்ந்திருப்பதில் அர்த்தமில்லை. இவ்வளவு நேரமும், ஸ்டேஷன் சிப்பந்திகளிடம் அகப்படாமல் இருக்கவேண்டுமே என்ற பயத்துடன் இருந்தாகிவிட்டது எப்படியோ தப்பிவிட்டோம். கடைசி நேரத்தில் அகப்பட்டுவிடக்கூடாதே என்று ஸ்ரீனிவாசன் நெரிசல் மிகுந்த ஒரு சமயத்தில் ஸ்டேஷனை விட்டு வெற்றிகரமாக நழுவி வெளியே வந்துவிட்டான்.
வெளிப்புறமாகத் தண்டவாளத்தை ஒட்டிச் செல்லும் நடைபாதையை நோக்கி நடந்தான். சற்று முன்பு கண்ணீர்த் திவலையினால் பரந்த வானம் மங்கியதைப்போல், ரயில்வே சிப்பந்தியிடம் கொண்ட பயத்தினால் மங்கி மறைந்திருந்த மரண பயம் இப்போது முழுமையாக, தெளிவாக எதிரே வந்துவிட்டது.
'சும்மா நடந்து போகவில்லை; சாவதற்காக நடந்து போகிறோம். '
----இதை நினைத்துப் பார்த்தான் ஸ்ரீனிவாசன். நடை நிற்காவிட்டாலும் மனம் ஸ்தம்பித்துவிட்டது. முன்புறம் மரணம்; பின்புறம் வாழ்க்கை. இரண்டுமே நினைக்கமுடியாத பயங்கரங்களாக இருந்தன. எதை ஏற்பது ? எதை உதறுவது ?--- அவனால் முடிவுகட்ட முடியவில்லை. நடந்து செல்லும் கால்களே முடிவுகட்டட்டும் என்று விட்டுவிட்டவனைப்போல் போய்க்கொண்டிருந்தான். அவனுடைய உயிர் அந்தக் கால்களிலேயே தஞ்சம் புகுந்துவிட்டது. அவை விட்டவழி விடட்டும்.....
மாம்பலம் ஸ்டேஷனை நோக்கி நடக்கும்போது, ஒரு நிமிஷம் மரணத்தைப்பற்றிய சிந்தனை; மறுநிமிஷம் வீட்டைப்பற்றிய நினைவு.
ஒரு கட்டத்தில் சாவைப்பற்றி எண்ணாமல், 'சாவுக்குப் பின் என்ன ? ' என்பதைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டான். அந்த சிந்தனை வளர்ந்து கொண்டே போயிற்று.
செத்தபிறகு, தாயும் தந்தையும் தங்கையும் கதறித் துடிப்பார்கள். மூவரில் ஒருவருக்காவது பைத்தியம் பிடிக்கும்; ஒருவருக்குத் தன்னைப்போலவே தற்கொலை எண்ணம் பிறக்கும்; மற்றொருவர், இரண்டையும்விட பயங்கரமான ஒரு நிலையில் அகப்பட்டுக்கொண்டு தத்தளிப்பது நிச்சயம். தான் உயிரோடு இருந்தால், இத்தனையும் நிகழாமல் தடுத்துவிடலாம். வேறு கஷ்டங்கள் ஏற்பட்டால் சமாளிக்கமுடியும். இந்த மாதிரியான எண்ணம் பிறந்த பிறகும்கூட அவன் திரும்பிவிடவில்லை. நடந்து கொண்டுதான் இருந்தான். தான் நினைத்த காரியத்தை ஒரு சில நிமிஷங்களுக்குள் முடித்துவிடும் உறுதியோடும் இருந்தான்.
'வீட்டாரின் தத்தளிப்பையும் பொருட்படுத்தாமல் சாவை அரவணைக்கத் தன்னைத் தூண்டுவது, அவமான உணர்ச்சிதான் என்பதில் என்ன சந்தேகம் ? அந்த உணர்ச்சிக்குக் காரணம், சுகன்யா ' பாஸ் பண்ணிய சுகன்யா ' அந்த சுகன்யாவுக்காகத்தான் சாகப்போகிறோம். '
ஸ்ரீனிவாசன் அப்படியே பிரமை பிடித்தவன்போல் நின்றுவிட்டான்.
அவளுக்காகத்தான் சாவு என்றால், அந்த மரணத்துக்கு என்ன மதிப்பு ? சாகிறவனுக்குத்தான் என்ன மதிப்பு ? அவள் தன்னைக் காதலிக்கவில்லை; தானும் அவளைக் காதலிக்கவில்லை.
அவள் எதில் சிறந்தவள் ?---படிப்பிலா ? நன்றி உணர்ச்சியிலா ? அரிய குணங்களிலா ? அவளைப் போன்ற கர்வியை, மக்குத்தனமானவளை, நன்றி உணர்ச்சியற்றவளை இதுவரை பார்த்ததுகூட இல்லை. அவளிடம் இருப்பதெல்லாம் அழகு ஒன்றுதான். அதை விட்டால், பாஸ் பண்ணிவிட்டாள் என்ற ஒரு பெருமிதம் இருக்கிறது. இந்த இரண்டுக்காகவும் சாவதென்றால், ஊரில் இருக்கிற ஒவ்வொரு அழகிக்காகவும், ஒவ்வொரு பாஸ் பண்ணிய பெண்ணுக்காகவும் சாகவேண்டும்.
அர்த்தமில்லாமல் முட்டாள்தனமாக இந்த முடிவு எடுத்து வந்துவிட்டோம் என்று கருதினான். தன் பிணத்தைப் பார்த்து அவள் அழுவது ஒருபுறம் இருக்கட்டும்; அருவருப்பில்லாமலாவது பிணத்தைப் பார்ப்பாளா ?
தன் முட்டாள்தனத்துக்கு, தன் தலையிலேயே கல்லை எடுத்து ரத்தம் வரும் வரையில் இடித்துக்கொள்ளலாம் போல் இருந்தது.
மிகுந்த ஆவேசத்துடன் கையிலிருந்த பத்திரிக்கைகளைத் துண்டுதுண்டாகக் கிழித்தெறிந்தான் ஸ்ரீனிவாசன். வந்த வழியே அவன் திரும்பிவிட்டான்.
* * * *
கிருஷ்ணசாமி ஐயங்காரும் தெரிந்த கடை ஒன்றில் பத்திரிக்கையை எடுத்துப் பார்த்தார். பையனுடைய நம்பர் வரவில்லை என்று கண்டதும் ரத்த ஓட்டம் நின்று விட்டது. வெகு சிரமப்பட்டு மனத்தைக் கட்டுபடுத்தினார். பல்லைக் கடித்துக்கொண்டு நிதானமாக வீட்டை நோக்கி நடந்து வந்தார். அப்புறம் அரைமணி நேரம் வீடு முழுதுமே மெளனம் நிலவியது. ஆகாயக்கோட்டை கட்டிய ஒவ்வொருவருக்கும் மற்றவருடைய முகத்தைப் பார்க்கவும், பார்த்துப் பேசவும் வெட்கமாக இருந்தது. இடிந்துபோய் ஆளுக்கு ஒரு பக்கம் ஒதுங்கினார்கள்.
அரைமணி நேர மெளனத்துக்குப் பிறகு, வீடு அல்லோகல்லோலப்பட்டது. ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு வராமல் இருப்பது ஏன் ? எங்கே போயிருப்பான் ? எங்கே போனான் ?
ஐயங்கார் திகிலோடு எழுந்து போய் மகனைத் தேடினார். கோவில், பள்ளிக்கூடம், வாசகசாலை, சிநேகிதர்களின் வீடுகள்....அரைமணி நேரம் சுற்றிப் பார்ப்பது; பிறகு வீட்டுக்கு வந்து, 'வந்துவிட்டானா ? ' என்று பார்த்து விட்டு, பழையபடியும் வெளியே போவது; ஆறு தடவை வந்து பார்த்துவிட்டார். ஆறு தடவைகளிலும் வீட்டில் ஆறு இடிகள் விழுந்தன.
இந்தக் கலவரங்கள் எதிர்வீட்டுக்கு எட்டியதும் சுகன்யா வந்தாள். ஸ்ரீனிவாசனின் தாயாரும் தங்கையும் அவளைப் பார்த்து, 'கோ 'வென்று அழுதார்கள். அவளுக்கும் கண்ணீர் வந்துவிட்டது. 'ஒரு வேளை, நம்பர் விட்டுப் போயிருக்கும். நாளை பேப்பரையும் பார்க்கவேண்டும் ' என்று சொல்லி ஆறுதல் அளிக்க முயன்றாள் சுகன்யா.
அப்போது வீட்டில் யாருக்குமே நம்பர்களைப்பற்றிய கவலை இல்லை. நம்பர்கள் நாளை வந்தாலும் வரட்டும், அல்லது வராமலே போகட்டும், ஸ்ரீனிவாசன் வந்தால் போதும் என்ற நிலையில் இருந்தார்கள்.
இதற்கு அந்தப் பெண் என்ன ஆறுதல் அளிக்கமுடியும் ? ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டுத் தன் வீட்டுக்குத் திரும்பிவிட்டாள்.
ஏழாவது தடவையாக அலைந்துவிட்டு வந்த கிருஷ்ணசாமி ஐயங்கார், யாரிடமும் எதுவும் பேசாமல் ஓர் ஓரமாகச் சுவரில் சாய்ந்து உட்கார்ந்து விட்டார். மனைவியும் மகளும் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை.
அப்புறம் அந்த வீட்டுக்குச் சுகன்யாவின் அம்மா வந்தாள். தன் மகள் சாப்பிடாமல் அழுதுகொண்டு படுத்திருக்கிறாள் என்ற செய்தியையும் சொல்லிவிட்டு ஸ்ரீனிவாசனைப் பற்றி விசாரித்தாள்.
மனமில்லாமலும் தெம்பில்லாமலும் கண்ணீரும் கம்பலையுமாக ஐயங்காரின் மனைவி பதில் சொல்லிக்கொண்டிருக்கும் சமயம்.....
ஸ்ரீனிவாசன் வந்துவிட்டான் '
'சீனு ' ' என்று ஒரு பெரிய கூப்பாடு போட்டுவிட்டு, அவனைக் கட்டிக்கொண்டு அழுதாள் தாய். தங்கையும் வந்து, 'எங்கே போனே சீனு ? ' என்று கேட்டுவிட்டுக் கேவி கேவி அழுதாள். ஐயங்கார் நிமிர்ந்து உட்கார்ந்தார். முழங்கால்களைக் கட்டிக்கொண்டு வெறித்த பார்வையோடு மகனையும் மற்றவர்களையும் பார்த்தார்.
அவன் வந்துவிட்ட செய்தியறிந்த சுகன்யா ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து ஓடிவந்தாள். வந்து அவனுடைய குனிந்த தலையை, வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
'சீனு ' ' என்று சுகன்யா அவனை அழைத்தாள். பெயர் சொல்லி அழைத்தாள்.
ஸ்ரீனிவாசன் முகத்தைத் தூக்கிச் சுகன்யாவின் கண்களைப் பார்த்தான்.
அந்த இரு கண்களிலும் கண்ணீர் ததும்பியிருந்தது. கண்ணீரையும் பார்த்தான். அப்போது.... அந்தக் கண்ணீரில் வேறொரு கற்பகக் கன்று தளிர்த்தது.
அவனுடைய கண்ணீருக்கும் ரத்தத்துக்கும் வளராமல் கருகிய கற்பகத்துக்குப் பதில் மற்றொரு கற்பகத்துக்குக் கண்களால் நீர் வார்க்கும் தரும தேவதையைப் பார்ப்பது போலவே சுகன்யாவைப் பார்த்தான் ஸ்ரீனிவாசன்.
* * * *
'சுகன்யா ' உன்னை வெறுத்ததால் நான் சாகாமல் வாழ நினைத்தேன்; இப்போது உன்னுடைய அன்பால் (உன்னிடம் கொண்ட அன்பால் என்று நினைக்கச் சங்கோஜமாக இருந்தது) சாகாமல் வாழ நினைக்கிறேன் ' நீ எப்போதுமே என்னைச் சாகவிடமாட்டாய் ' அப்படித்தானே ? ' ----ஆனந்தக் கண்ணீரைத் தலையணையில் ஒற்றிக் கொண்டான் ஸ்ரீனிவாசன்.
******
மாலை ஐந்து மணி அடிப்பதற்கு முன்பே சைதாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் வந்து உட்கார்ந்து விட்டான் ஸ்ரீனிவாசன். கையில் ஒரு காசுகூடக் கிடையாது. ...
எஸ்.ராமகிருஷ்ணன் - கதாவிலாசம்
கு.அழகிரிசாமி
எனது நண்பனும், ஆங்கிலத்தில் எழுதும் கவிஞனுமான ரஞ்சன் மகோபாத்ரா வந்திருந்தான். அவன் அமெரிக்காவில் ஆங்கில இலக்கியத்தில் ஆய்வு செய்பவன். பல வருடங்களுக்குப் பிறகு சென்னைக்கு வருகிறான். மாநகர வாழ்வும், கடற்கரையும், சாப்பாடும் அவனுக்குத் தன் சொந்த ஊரில் இருப்பது போலவே தோன்றுவதாகச் சொன்னான். நூலகம், சினிமா என இரு வார காலம் கடந்து போன பிறகு, ‘தமிழ்நாட்டில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் என்று ஏதாவது இருந்தால் சொல்லு, போகலாம்!’ என்றான். உடனே மனதில் ஒரு இடம் தோன்றியது!
மறுநாளின் அதிகாலையில், நானும் அவனும் காரில் பயணம் செய்யத் துவங்கினோம். எங்கே செல்கிறோம் என அவன் கேட்கவே இல்லை. நாங்கள் அந்த ஊருக்குள் போய்ச் சேர்ந்தபோது காலை பத்து மணி. சிறிய கிராமம் போன்ற இடத்துக்கு வந்திருக்கிறோமே என்ற தயக்கத்துடன், ‘இங்கே ஏதாவது சோழர்களின் கற்கோவில் இருக்கிறதா?’ என்று கேட்டான். ‘நான் பார்த்து இன்று வரை வியந்தும் பெருமைப்பட்டும் வரும் ஒரு ஊர் இது. நீயே வந்து பார்!’ என்று அழைத்தேன். அது ராமலிங்க வள்ளலார் வாழ்ந்த வடலூர்!
அறுங்கோண வடிவத்துடன் உள்ள அந்த மண்டபம் சுற்றிலும் கம்பி பாய்ச்சப்பட்டிருந்தது. சத்ய ஞான சபை எனப்படும் அந்த மண்டபம் ‘அன்பே கடவுள்!’ என்ற உயர்ந்த கோட்பாட்டைப் பிரதிபலிப்பது!
1871&ல் வள்ளலாரால் துவங்கப்பட்ட அந்த சபையில் உள்ளே நானும் அவனும் நடந்து சென்றோம். புறாக்களின் விம்மும் குரல் எங்கிருந்தோ கேட்டுக்கொண்டே இருந்தது. மிக வயதான ஒருவர் எங்களைப் பார்த்து, ‘அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை’ என்று கூறியபடி கையெடுத்து வணங்கினார். மண்டபத்தின் உள்ளே அணையாத தீபம் ஒன்று எரிந்துகொண்டு இருந்தது. விளக்கின் முன்னால் ஏழு நிறத் திரைகள் இருந்தன. ஒவ்வொரு திரையும் மனிதனின் அஞ்ஞானத்தை குறிப்பதாக, வயதானவர் விளக்கம் சொன்னார்.
சபையின் உள்ளே சிலர் தியானத்தில் லயித்திருந்தனர். பார்வையற்ற ஒரு பெண் சப்பணமிட்டு அமர்ந்தபடி திரு அருட் பாவை முணுமுணுக்கும் குரலில் பாடிக்கொண்டுஇருந் தார். இருவரும் வெளியே வந்தபோது ரஞ்சன், இது போன்ற தியான மண்டபங் களை கொல்கத்தாவில் பார்த்து இருப்பதாகச் சொன்னான். ‘நீ இன்னும் முழுமையாகப் பார்க்கவில்லை. அமைதியாக என்னுடன் வா’ என்று வெளியே அழைத்து வந்தேன். வெளியே வெயில் உச்சிக்கு வந்திருந்தது. ‘நூற்றாண்டு காலமாக பசித்தவர்களுக்கு உணவு அளிக்கும் அறச் சாலையை பார்’ என்று நான் காட்டிய கட்டிடம் ஒரு கோவிலைப் போல மௌனமாக இருந்தது. உள்ளே, மதிய உணவு தயாராகிக்கொண்டு இருந்தது. இந்த அறச்சாலையில் தினமும் ஆயிரம் பேருக்கு மேல் உணவு அருந்துகிறார்கள். ‘நூறு வருடங்கள் கடந்தும் இன்னும் அணையாமல் எரிந்துகொண்டே இருக்கும் அடுப்பு இது!’ என்று காட்டி னேன். நீளமான அடுப்பு அது. அதில் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் சப்தம், ‘உலகில் உள்ள மனிதர்களின் பசியைப் போக்குவது மட்டுமே தனது பெரும்பணி!’ என்று உரத்து சொல்லிக் கொண்டு இருப்பது போலிருந்தது.
ரஞ்சன் அந்த நெருப்பை வியப் போடு பார்த்தான். ‘இரவில்கூட இதை அணைக்க மாட்டார்களா?’ என்று கேட்டான். ‘ஆம், இது எப்போதும் எரிந்துகொண்டே தான் இருக்கும்... பக்கத்தில் வந்து பாருங்கள்’ என்று சொன் னார் சமையல் செய்பவர். ஏதோ ரகசியம் பேசுவது போல நெருப்பின்குரல்கேட் டது. ‘சாதிசமய பேதமின்றி, யாவரும் சமம் என்ற உயர்ந்த எண்ணத்தில் உணவு அளிக்கிறோம். இருந்து நீங்களும் சாப்பிட்டுவிட்டுச் செல்லுங்கள்!’ என்றார் சமையல் செய்பவர்.
வாழை இலை போட்டு வடை பாயசத்துடன் அறுசுவை உணவு படைத் தார்கள். எங்களோடு பந்தி யில் அமர்ந்து சாப்பிட்ட வர்களில் பாதிப்பேர் வயதானவர்கள். ஏதேதோ ஊர்களில் இருந்து வந்து தங்கிவிட்டவர்கள். ஒன்றிரண்டு பண்டாரங்கள், நோயாளிகள், கிராமத்து விவசாயிகள், குழந்தைகள் எனப் பந்தியில் இருநூறு பேருக்கு மேலிருக்கும். அத்தனை சுவையான உணவை வேறு எங்கும் நான் சாப்பிட்டது இல்லை. தைப்பூசம் அன்று அங்கே ஒரு லட்சம் பேருக்கும் மேல் உணவு அளிக்கப்படுமாம். எங்கள் எதிரில் அமர்ந்திருந்த பார்வையற்ற பெண் கைகளைக் குவித்து முதலில் உணவை வணங்கி னாள். பிறகு கொஞ்சம்கொஞ்சமாக எடுத்து சுவைத்துச் சாப்பிட்டாள். அவள் முகத்தில் சாந்தியும் அமைதியும் படிந்திருந்தது. சாப்பிட்டு முடித்ததும் சமையல் செய்தவர்களுக்கும், பரிமாறியவர்களுக்கும் கைகூப்பி நன்றி சொல்லியபடி வெளியே வந்து மர நிழலில் உட்கார்ந்தாள். அவளது வாயிலிருந்து அருட்பா திரும்பவும் கசிந்து வரத் துவங்கியது. ரஞ்சனால் இந்த காட்சியை நம்ப முடியவில்லை. அவளிடம் சென்று, ‘வள்ளலாரின் கவிதைகளுக்கு உங்களுக்கு அர்த்தம் புரிகிறதா?’ என்று கேட்டான். அவள் சிரித்த படியே, ‘அன்புதானே பாடலுக்கு ருசியைத் தருகிறது. சொற்கள் நாக்கில் இருந்து பிறப்பதில்லை. இதயத்திலிருந்து வருகிறது!’ என்று கையை மார்புக்கு நேராகக் காட்டினாள். ரஞ்சன் தலையாட்டியபடி நின்றான்.
Ôஉலகம் முழுவதும் வன்முறையும் அழிவும் பெருகிவரும் வேளையில் மௌனமாக ஒரு கிராமம் எப்படி அன்பைச் செயல்படுத்திக் காட்டிக் கொண்டே இருக்கிறது! நூற்றாண்டு களாக தொடர்ந்து வரும் இந்த அறம், தமிழ் மக்களை எவ்வளவு மாற்றியுள் ளது?’ என்று ரஞ்சன் கேட்டான். நான் அமைதியாக, ‘இங்கு அளிக்கப்படும் உணவு முழுவதும் வள்ளலாரின் அறக்கோட்பாடுகளின் மீது விசுவாசம் கொண்டவர்கள் அளிக்கும் நிதியிலிருந்துதான் சாத்தியமாகிறது. இங்கு சமைப்பவர்கள்கூட ஒரு சேவை யாகத்தான் இதைச் செய்கிறார்கள். உண்மையில் இவர்கள் யாவர் மனதிலும் அன்பும் கருணையுமே நிரம்பியிருக்கிறது!’ என்றேன்.
ரஞ்சன் என் கைகளைப் பிடித்தபடி, ‘சரியான இடத்துக்குதான் என்னை அழைத்து வந்திருக் கிறாய்’ என்றான் உணர்ச்சிப் பெருக்குடன்.
‘உன்னை மகாபலிபுரத்துக்கோ, தஞ்சை பெரிய கோயிலைப் பார்ப்பதற்கோ அழைத்துப் போவதைவிடவும் இங்கே அழைத்து வர விரும்பியதற்குக் காரணம் புரிந்ததா?’ என்றேன். புன்னகைத்தான் ரஞ்சன்.
‘பசியை வெல்வதுதான் மனிதனின் நெடுநாளைய போராட்டம். அதைத்தானே இலக்கியங்கள் பிரதிபலிக்கின்றன. நமது குழந்தைகளை தீம் பார்க்குகளுக்கும், நவநவீன ஷாப்பிங் சென்டர்களுக்கும், ஏரியில் படகு விடுவதற்கும் அழைத்துப் போவதைவிடவும், அவர்கள் பார்க்க வேண்டிய முக்கிய இடம் வடலூர்தான். பள்ளிக்கூடம், கல்வியைக் கற்றுத் தருவதைப் போல, அன்னசாலை அன்பையும் கருணையையும் கற்றுத் தருகிறதில்லையா. அதை நேரில் கண்டால் அவர்களே புரிந்துகொள்வார்கள்!’ என்றேன்.
வீடு திரும்பிய இரவில், ரஞ்சன் என்னிடம் கேட்டான்... ‘தவறாக எடுத்துக்கொள்ளாதே. இப்படி உணவு அளிப்பதன் வழியே இங்கே மதமாற்றம் ஏதாவது செய்ய முயற்சிக்கிறார்களா?’. நான் சிரித்தபடியே சொன்னேன்... ‘இல்லை அவர்கள் மனதை மாற்றுவதற்குத்தான் முயற்சிக்கிறார்கள்!’
ரஞ்சன் அதை ஏற்றுக் கொண்டபடி, ‘கவிஞர்கள் கனவு காணுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு கவிஞனின் கனவு இங்கே நிஜமாகியிருக்கிறது. வள்ளலார் ஒரு யூனிவர்சல் பொயட். கிரேட் ஹியூமன்!’ என்றபடி, தனக்கும் ஏதாவது உதவி செய்ய ஆசை இருக்கிறது என்றான்.
பசியை எதிர்கொள்வது மனிதனின் மகத்தான சவால்! பசியின் முன்பு மனிதன் மிருகம் என்ற பேதமில்லை. பசி மட்டுமே மனிதனைத் தொடர்ந்து இயங்க வைத்துக்கொண்டு இருக்கிறது. பசி அவமானத் தைப் பற்றி கவலைப்படாது. எதை நாம் தேவையற்றது என்று தூக்கியெறி கிறோமோ, அதை உணவாக எடுத்து உண்கிறான் மற்ற வன். பசித்த மனிதனுக்கு உணவைத் தவிர, வேறு கடவுள் கிடையாது!
கு. அழகிரிசாமி, தமிழ்ச் சிறுகதைக்கு புதுப்பொலிவு தந்த எழுத்தாளர். இசையும் இலக்கியமும் கற்றுத் தேர்ந்தவர்; மனித உணர்ச்சி களின் அடியாழங்களைத் தனது எழுத்தில் பதிவு செய்தவர்; பாவைகளைப் போல மனிதர்களை உணர்ச்சி தன் விரல் சொடுக்கும் பக்கமெல்லாம் ஆட்டிவைப்பதைஇவரது கதைகள் வெளிப்படுத்து கின்றன. பசி யைப் பற்றிய இவரது சுயரூபம் என்ற கதை தமிழ் இலக்கியத்தில் எப்போதும் பிரகாசிக்கும் அரிய கதைகளில் ஒன்று. சிறந்த இலக்கியங்கள் யாவும் மனித வீழ்ச்சியைத்தான் கருப்பொருளாகக் கொண்டு இருக்கின்றன. இக்கதையும் வீழ்ச்சி அடைந்த ஒரு மனிதனின் வாழ்க்கைப் பாட்டினைப் பற்றியதுதான்.
கதை வேப்பங்குளம் என்ற கிராமத்தில் நடக்கிறது. மாடசாமித்தேவர் பழம்பெருமைமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தாத்தா வீர சாகசங்கள் செய்து காட்டியவர். வைராக்கியத் துக்குப் பெயர்போனவர். அப்பேர்ப்பட்ட மனிதரின் பேரனான மாடசாமித்தேவரை இப்போது வறுமை பீடித்துக்கொண்டுவிட்டது. வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. கடன் கொடுத்தவனுக்குப் பயந்து தலைமறைவாக அலைய வேண்டியுள்ளது. ஒரு நாள் பசியோடு ஊரைவிட்டு விலகிய பாதையில் நடந்து, பேருந்து நிறுத்தத்தின் முன் உள்ள முருகேசம்பிள்ளையின் பலகாரக் கடையின் முன் வந்து நிற்கிறார். முருகேசம்பிள்ளை, அவர் வந்ததைக் கவனித்ததாகக் காட்டிக்கொள்ளவே இல்லை. மாடசாமித்தேவர் இரண்டு நாளாகப் பட்டினி. முருகேசம்பிள்ளையின் தயவு இருந்தால் சாப்பாடு கிடைக்கும் என்பது போல அவரை நலம் விசாரிக் கிறார். முருகேசம்பிள்ளைக்கு மாடசாமித்தேவருடன் பேசவே பிடிக்கவில்லை. பிடிகொடுக்காமல் பேசுகிறார். காலையிலிருந்து மாலை வரை தேவரும் முருகேசம்பிள்ளை என்ன சொன்னாலும் அதற்கு ஆமாம் போடுவதும், மனதுக்குள்ளாக ‘இந்த நாய்க்கெல்லாம் நாம் ‘ஆமா’ போட்டு வாழ வேண்டியதாகி விட்டதே’ என்று கோபம் கொள்வதுமாகக் காத்துக்கிடக்கிறார்.
இரவு கடையை அடைத்து வைத்தபோது கொஞ்சம் வடையும் இட்லியும் மீதமாகிக் கிடப்பதைக் கவனிக்கிறார். அதைக் கேட்கலாமா வேண்டாமா என்று பசியோடு பார்க்கையில் முருகேசம் பிள்ளை இட்லியை ஒரு கூடைக்குள் போட்டு எடுத்துக் கொண்டு வீட்டுக்கு புறப்படத் தயாராகிறார். இதற்கு மேலும் கேட்காமல் இருந்தால் சரியில்லை என்பது போல, தயக்கத்துடன் மீதமான இட்லியை தனக்குக் கடனாகத் தரும்படி கேட்கிறார் மாடசாமித்தேவர். முருகேசம் பிள்ளை ஆத்திரத்துடன், ‘இதற்குத்தான் காலையிலிருந்து கடையைச் சுற்றி வந்தீரா... உமக்கெல்லாம் கடன் கிடையாது!’ என்றபடி நடக் கிறார். மாடசாமித்தேவரோ, ‘மீதமான இட்லிதானே, தந்தால் என்ன?’ என்று சமாதானம் பேசுகிறார்.
முருகேசம்பிள்ளைக்குக் கோபம் வந்துவிடுகிறது. ‘ஏன்... வீட்டுக்குப் போய் சுடச்சுட தோசை சுட்டுச் சாப்பிடும். உன்னை யாரு வேண்டாம்னு சொன்னது?’ என்று சொல்லவே, மாடசாமித்தேவர் காயமடைகிறார். பேச்சு நீண்டு ஒரு இடத்தில் மாடசாமித்தேவரின் தாத்தாவை முருகேசம்பிள்ளை கேலி செய்ய, அந்த இடத்திலே அவர் மீது பாய்ந்து சண்டை போடுகிறார். இருவரும் கட்டி உருள்கிறார்கள். முருகேசம்பிள்ளை, மாடசாமியை அடித்துப்போட்டு விடுகிறார். பசியால் வலுவிழந்து மாடசாமித் தேவர், ‘இப்படி சண்டைபோட்டுவிட்டோமே, இனி இட்லி கிடைக்காதே’ என்று நினைத்து, ‘ஏதோ பசியில் தெரியாம சண்டை போட்டுட்டேன். மிஞ்சின இட்லியை தந்திருங்க’ என்று கெஞ்சுகிறார். ‘அப்படி உசிரை வளக்கணுமாக்கும். தின்னு தொலை’ என முருகேசம்பிள்ளை கூடையிலிருந்து இட்லியை எடுத்து வீசுகிறார். மாடசாமித்தேவருக்கு திரும்பவும் கோபம் அதிகமாகி, அவர் மீது பாய்ந்து கட்டி உருள்கிறார். இப்போதும் முருகேசம்பிள்ளைக்குத் தான் வெற்றி. அடிபட்டு கீழே விழுந்து கிடந்த மாடசாமித்தேவர் எழுந்துகொள்ளவில்லை. ஆனால், Ôஅடிபட்டாலும் பரவாயில்லை. நாய் எச்சில் பண்டங்களைத் தின்பது போல, அவர் போட்ட மிச்சத்தைத் தின்னாமல் கௌரவமாகத்தானே இருக்கிறோம்’ என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொள்கிறார் என்பதில் முடிகிறது கதை.
பிச்சைக்காரர்களே, ‘இன்று அம்மா பசிக்கிறது’ என்று குரல் தராமல் மௌனமாக கைகளை நீட்டி யாசகம் கேட்பதற்குப் பழகிவிட்ட சூழலில், பசியை அடக்கிக்கொள்வதும், மறைத்து வாழ்வதும்தான் நாகரிகம் என்று கருதப்படுகிறது.
உங்கள் பேருந்தில், மின்சார ரயிலில், அலுவலகங்களில், தெருவில் பசியை அடக்கிக்கொண்ட சிலர் எப்போதுமே கூட வருகிறார்கள். அவர்கள் பசி தங்களது சுயமரியாதையைத் தின்று விடக் கூடாது என்று வைராக்கியமுடன் இருக்கிறார்கள். ஆனாலும் பசி, தன் நூறு கைகளால் அவர்கள் உடலைப் பிசைந்துகொண்டே இருக்கிறது. வெகு அரிதாகவே மனிதன் பசியை வெல்கிறான். பெரும்பாலும் பசிதான் மனிதனை வென்றுவிடுகிறது!
சாகித்ய அகாதமி விருது பெற்ற கு. அழகிரிசாமி 1932&ல் கோவில்பட்டிக்கு அருகில் உள்ள இடைச் செவல் கிராமத்தில் பிறந்தவர். இந்தக் குக்கிராமம் இரண்டு சாகித்ய அகாதமி எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை கொண்டது. கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி என்னும் இக்கிராமத்தின் இரண்டு நண்பர்களும் சாகித்ய அகாதமி விருது பெற்றது பெருமைக்குரியது. பத்திரிகைகளில் பணியாற்றிய கு.அழகிரிசாமி நல்ல மொழிபெயர்ப்பாளரும் கூட. இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் முறையாக இசை கற்றுக் கொண்டவர். ஒன்பது சிறுகதைத் தொகுதிகளும், இலக்கியக் கட்டுரைகள் மூன்றும் வெளியாகியுள்ளன. ராஜா வந்திருக்கிறார். அன்பளிப்பு போன்ற இவரது சிறுகதைத் தொகுதிகள் மிக முக்கியமானவை. மலேஷியாவில் சில காலம் பணியாற்றி உள்ளார் கு.அழகிரிசாமி. இவரது கதைகள் மக்களின் பேச்சு மொழியில் சரளமாகவும் உணர்ச்சிப் பெருக்கோடும் கூடியவை என்பதே அவற்றின் சிறப்பம்சம். எதிர்பாராத நோய்மையின் காரணமாக இளவயதிலேயே மரணமடைந்தபோதும் இன்றும் தமிழ் சிறுகதையுலகுக்கு வழிகாட்டியாகப் பேசப்படும் ஓர் அபூர்வ கலைஞர் கு.அழகிரிசாமி.
*****
எஸ்.ராமகிருஷ்ணன் - கதாவிலாசம் கு.அழகிரிசாமி எனது நண்பனும், ஆங்கிலத்தில் எழுதும் கவிஞனுமான ர ஞ்சன் மகோபாத்ரா வந்திருந்தான். அவன்...
கு. அழகிரிசாமி ''அந்தப் பாதையில் அவளும் நானும் எப்படியோ வந்து சேர்ந்தோம். பிரயாணத்தைத் தொடங்கினோம். ஒரே திசையை நோக்கிப் பக்கம் பக்கமாக நடந்து சென்றோம். இப்படி நடந்து செல்கிறவர்கள் பேசாமல் இருக்க முடியுமா? அறிமுகப்படுத்திக் கொள்ளாமலும் இருக்க முடியுமா? சில மைல் தூரம் சென்ற பிறகு பேசினோம். நான் யார், அவள் யார் என்பவை அறிமுகமாகாவிட்டாலும் அவரவர்களைப் பற்றிய விவரங்களைப் பரஸ்பரம் சொல்லித் தெரிந்து கொண்டோம். பேச்சு துணையோடு எங்கள் நடை தொடர்ந்தது.
'மேலும் சில மைல் தூரம் சென்றபின் பேச்சுத் துணையில் ஒருவகைத் தொடர்பும்ஒரு வகையான ஈடுபாடும் ஏற்பட்டன. ஓர் உறவும் மலர்ந்தது. அப்புறம் அந்த வழிப்பயணத்திலும் அந்த உறவிலும் ஒரு பக்தியும் கவர்ச்சியுமே உண்டாகிவிட்டன. இருவரும் கைகோத்துக் கொள்ளாவிட்டாலும் சற்று நெருங்கி வந்தோம். அந்த நிலையிலேயே நடக்கலானோம்.
'மேலும் சில மைல் தூரம் சென்றோம். ஓரிடத்தில் நான் கிளைப்பாதை வெட்டினேன். அவளிடம் விடை பெற்றுக் கொண்டேன்.'
''நீலா! பம்பாயில் எனக்கு வேலை கிடைத்திருக்கிறது. மாதம் நானூற்றைம்பது ரூபாய் சம்பம்....''.
''அப்படியா! ரொம்ப சந்தோஷம்! ....'' அவள் முகத்தில் தேவைக்கு மிஞ்சிய, நடிப்போ என்று சந்தேகிக்கக் கூடிய, ஒரு மகிழ்ச்சிக் குறி, அனாவசியமான ஒரு பிரகாசம்...
''இன்னும் ஒரு வாரத்தில் பம்பாய்க்குப் பயணம்''
என்று சொன்னேன்.
''ரொம்ப நல்ல சான்ஸ். நிறைய சம்பாதியுங்கள். செளக்கியமாக இருங்கள்''. அவள் அவசரமாகப் பேசினாள். என்னை முந்திக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டாள்.
''உங்கள் வீட்டுக்கும் பயணம் சொல்லிக் கொள்ள வருகிறேன்.''
அதற்கு அவள் ஒன்றும் சொல்லவில்லை. ''நான் போய்விட்டு வருகிறேன்''. என்று மட்டுமே சொல்லிவிட்டு, பஸ்ஸைப் பிடிப்பதற்காகப் போய்விட்டாள்.
''அப்புறம் அவள் வீட்டுக்குப் போனேன். அவளிடமும், அவள் தாயாரிடமும், அவளுடைய தங்கைகளிடமும் சொல்லி விடை பெற்றுக் கொண்டு மறுநாள் பம்பாய்க்குப் புறப்பட்டேன்.
யார் கண்டது? நான் பம்பாய்க்குப் போகாமல், கிளைப்பாதை வெட்டிப் பிரியாமல், அவளுடனேயே என் யாத்திரையைத் தொடர்ந்திருந்தால் இருவருக்குமே பொதுவான ஒரு லட்சி நகரம் எதிர்ப்பட்டிருக்கக்கூடும். இருவருமே அங்கே போய்ச் சேர்ந்திருக்கவும் கூடும். இல்லையென்றால் எங்கள் இருவருக்கும் பொதுவான ஒரு லட்சிய நகரம் இல்லை என்பதாவது ஒரு கட்டத்தில் தெளிவாகியிருக்கும். ஆனால் எந்த முடிவையும் காணாமல், நடுவழியில் பிரிந்துவிட்டேன்.
ஹோட்டல் அறையில் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்த சுந்தரத்துக்கு இரண்டு வருஷங்களுக்கு முந்திய நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துக் கொண்டிருந்தன. பம்பாயிலிருந்து அன்று பிற்பகல் இரண்டரை மணிக்குத்தான் அவன் சென்னைக்குத் திரும்பி வந்திருந்தான். நேரே ஒரு ஹோட்டலுக்குப் போய்க் குளித்துச் சாப்பிட்டான். மாடியில் அவன் எடுத்திருந்த அறைக்குச் சென்று பிரயாணக்களைப்பைப் போக்குவதற்காகப் படுத்துக் கொண்டான்.
நீலாவை - அவள் இப்போதும் சென்னையிலேயே, அதுவும் அதே வீட்டிலேயே இருந்தால் - போய்ப் பார்ப்பதற்கு இன்னும் இரண்டு மணிநேரம் கழிய வேண்டும். ஐந்து மணிக்குத் தான் ஆபீசிலிருந்து அவள் திரும்புவாள். அதுவரையிலும் படுத்திருக்கலாம். முடிந்தால் கொஞ்சம் தூங்கலாம்.
'அன்று பம்பாயில் நானூற்றைம்பது ரூபாய் சம்ளத்தில் வேலை கிடைத்தது தான் பெரிதாகப் போய்விட்டது. அவசரமாக, முன்பின் யோசிக்காமல் கிளைப்பாதை வெட்டிக் கொண்டு பிரிந்தேன். நீலா! நான் போன பிறகு நீ எந்தப் பாதையில் போய்க் கொண்டிருக்கிறாய்? உன் பிரயாணம் இன்னும் தொடர்கிறதா? இல்லையென்றால் எங்காவது ஓரிடத்தில் ஏதோ ஒரு விதத்தில் முடிந்து விடடதா? உன் வீடு திவருவல்லிக்கேணியில் இருக்கிறது. நீ வேலை செய்யும் காரியாலயம் மவுண்ட் ரோடில் இருக்கிறது. இந்த இரண்டு இடங்களிலும் நீ இருப்பாய் என்பது எனக்குத் தெரியும். ஆனால் உன் யாத்திரா மார்க்கம் எங்கே இருக்கிறது? அங்கே நீ எந்த இடத்தில் நிற்கிறாய்?
'அவள் எங்கே நின்றால் என்ன? அதைப் பற்றிக் கவலைப்பட எனக்கு இப்போது என்ன உரிமை இருக்கிறது? கவலைப்பட்டுத்தான் இனி என்ன செய்ய முடியும்?...'
சுந்தரம் இப்போது தன் கல்யாணத்துக்காகத் திருநெல்வேலியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறான். இரண்டு மாத லீவ் எடுத்துக் கொண்டு பம்பாயிலிருந்து வந்திருக்கிறான். அவன் ஊர் போய்ச் சேர்ந்த மறுநாளே கல்யாணம் நிச்சயமாகிவிடும். ஒரு மாதத்தில் கல்யாணம். அப்புறம் ஒரு மாதம் ஊரில் இருந்துவிட்டு பம்பாய்க்குத் திரும்ப வேண்டும்.
தனக்கு மனைவியாக வரப்போகிறவளின் போட்டோவைப் பார்த்தாகிவிட்டது. அவள் அழழு ஸ்வரூபமாக இருந்தாள். நேரில் பார்க்கும்போது அதில் கால்வாசி அழகுடன் தோற்றம் அளித்தாலும், வேண்டாம் என்று உதறிவிட முடியாத ஒரு செளந்தரிய வடிவம். முக்கால்வாசிக் கலைகள் குறைந்தாலும் சந்திரனின் அழகு குன்றிவிடுவதில்லையே! பிறைச் சந்திரனுக்கும் அழகைப் பொறுத்தவரையில் ஒரு பூரணத்துவம் உண்டு அல்லவா? படத்தில் கண்ட அவளுடைய குடும்பப் பெருமைகள், செல்வம், செல்வாக்கு, அப்புறம் அவளுடைய படிப்பு - எல்லாமே தெய்வம் கொடுத்த, அதுவும் கூரையைப் பிய்த்துக் கொண்டு வலிய வந்து கொடுத்த பாக்கியங்களாக இருந்தன. அவளை அவன் மணக்கப் போவது இரண்டும் இரண்டும் நான்கு என்பது போன்ற ஓர் உண்மையாகிவிட்டது.
''எனக்கு ஏன் இனி நீலாவின் யாத்திரா மார்க்கத்தைப் பற்றிய கவலை?'' என்று நினைத்தான் சுந்தரம். சிறிது நேரத்தில் கண்ணயர்ந்து விட்டான்.
இரண்டு வருஷங்களுக்கு முன் திருவல்லிக்கேணியில் ஒரு மாடி அறையில் அவன் ஜாகை வைத்துக்கொண்டு மாதம் இருநூறு ரூபாய்க்குக் குறைவான சம்பளத்தில் ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தங்கியிருந்த வீட்டுக்கு ஐந்து வீடுகள் தள்ளி ஆறாவது வீட்டின் மாடியில் குடியிருந்தாள் நீலா. அவளுக்கு மாதம் நூற்றுப்பத்து ரூபாய் சம்பளத்தில் வேறொரு கம்பெனியில் 'டைப்பிஸ்ட்' வேலை. அவளுடைய தகப்பனார் காலமாகிவிட்டார். தாயாரையும் இரண்டு தங்கைகளையும் அவளே சம்பாதித்துக் காப்பாற்றி வந்தாள்.
சுந்தரம் அந்தத் தெருவுக்கு வந்து ஒரு மாதம் கழிந்ததுமே நீலாவின் வீட்டார் அவனுக்கு அறிமுகம் ஆனார்கள். அவள் வேலை செய்யும் கம்பெனியில் அவனுடைய இலாகாவிலேயே சற்றுப் பெரிய பதவியில் இருந்த ராமச்சத்திரன் என்பவர் நீலா வீட்டாருக்குத் தூரத்து உறவு. அவர்தான் அவளுக்கு வேறொரு கம்¦னியில் வேலை வாங்கிக் கொடுத்தவர். ஒரு விடுமுறை நாளில் குடும்ப சகிதமாக அவர் நீலாவின் வீட்டுக்கு வந்துவிட்டுத் திரும்பிப் போகும்போது சுந்தரம் எதிரே வந்தான். அதே தெருவில்தான் அவனும் ஜாகை வைத்துக் கொண்டிருக்கிறான் என்ற விவரத்தை அவர் அப்போது அறியலானார். நீலாவின் வீட்டாரைப் பற்றி அவர் சொல்ல அன்றுதான் முதல்முதலாக அவன் தெரிந்து கொண்டான்.
மற்றொரு நாள் அவர் நீலாவின் வீட்டுக்கு வந்திருந்த போது அவனும் அவருடன் சென்றான். அது தான் முதல் சந்திப்பு.
இரண்டாவது சந்திப்பு ராமச்சந்திரன் வீட்டில். நீலாவும் அவளுடைய தங்கையும் அங்கு வந்திருந்த சமயம், சுந்தரம் சந்தர்ப்பவசமாக அங்கே போயிருந்தான். இருவரும் பார்த்தார்கள். பேசிக் கொண்டார்கள். அவன் ஐம்பது வார்த்தைகள் பேசியிருப்பான். அவள் ஐந்து வார்த்தைகள். இல்லையென்றால் நான்கு வார்த்தைகள் பேசியிருப்பாள். இது அடக்கமாக அல்லது அலட்சியமா என்பது புரியாத நிலை. என்னவென்று புரிந்து கொள்வதற்கு மேற்கொண்டு பேசிச் சோதனை செய்ய அது இடமும் அல்ல; சந்தர்ப்பமும் அல்ல. இடத்தையும் சந்தர்ப்பத்தையும் மற்றொரு நாளில் அவள் வீட்டிலேயே உண்டு பண்ணிக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தான் சுந்தரம்.
ஒருநாள் அவன் நீலாவின் வீட்டுக்கு யாதொரு காரணத்தையும் சொல்லிக் கொள்ள முடியாதவனாகப் போனான். ராமச்சந்திரனுக்கு 'நண்பன்' என்ற முறையில் அங்கே அவனுக்கு வரவேற்பு இருந்தது. அன்றும் நீலா ஐந்து வார்த்தைகள் தான் பேசினாள். அதிக நேரம் பேசியது அவளுடைய தாயார் தான். அந்த வீட்டில் ஆண்மகனைப் போல் சம்பாதித்துக் குடும்பத்தைக் காப்பாற்றி வரும் நீலா, ஆண்மகனைப் போலவே நடந்து கொண்டாள். கம்பீர்யமான பேச்சு, நிமிர்ந்த பார்வை; மகிழ்ச்சியோ, துக்கமோ சாமான்யத்தில் பிரதிபலிக்க முடியாத ஒரு முகம். அங்கிருந்து அவன் ஜாகைக்குத் திரம்பிய பிறகு, ''இது கர்வமாகவும் இருக்கலாம், அலட்சியமாகவும் இருக்கலாம். இல்லையென்றால், துன்பங்களைச் சகித்துச் சகித்து உணர்ச்சிகளெல்லாம் கூர்முழுங்கி, துடிப்பிழந்து, மனசுக்குள் அவிந்து அடங்கிவிட்டதன் விளைவாகவும் இருக்கலாம்'' - இப்படி சுந்தரம் நினைத்துக் கொண்டான்.
நீலாவுக்கு கல்யாண வயது வந்து ஐந்தாறு வருஷங்களுக்கு மேல் ஆகி விட்டன. அவளுடைய தங்கைகளும் கூடத் திருமண வயதை அடைந்து விட்டார்கள். இரண்டாவது தங்கை பி.யூ.சி. படித்துக் கொண்டிருந்தாள். நீலா கல்யாணம் செய்து கொண்டிருந்தாள். நீலா கல்யாணம் செய்து கொண்டு கணவன் வீட்டுக்குப் போய்விட்டால், குடும்பத்தைக் காப்பாற்ற யாருமே இல்லாமல் போய், எல்லோருடைய கதியுமே நிர்க்கதியாகிவிடும் என்பதனால்தான் அவள் திருமணத்தை பற்றிச் சிந்திக்க யாருக்கும் விருப்பமில்லை; துணிவும் இல்லை. இந்த விவரங்களை ராமச்சந்திரன் மூலம் அறிந்த சுந்தரம் அவள் குடும்பத்தின் நிலைக்காத மிகுந்த அனுதாபம் காட்டினான்.
'நீலாவையே கல்யாணம் செய்து கொண்டு அவள் வீட்டோடு இருந்தால் என்ன?' என்றும் ஒரு நாள் சுந்தரம் நினைத்தான். ஆனால் அதற்குப் பல தடங்கல்கள் இருப்பதாக அவனுக்கு அப்பொழுதே தோன்றியது. மனைவியின் வீட்டில் போய் ஒருவன் வசிப்பது விரும்பத்தகாத விஷயம் என்பது ஒருபுறமிக்க, அவனும் தன் பெற்றோர்களைத் தன் சம்பாத்தியத்தினால் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருந்தான். எனவே நீலா வீட்டாரோடு போய் அவனால் வசிக்கவே முடியாது. அவளும் தன் தாயாரையும் தங்கைகளையும் விட்டுவிட்டு அவன் வீட்டுக்கு வரமுடியாது. அப்படியே இருவரும் தம்பதிகளாகி ஒரு வீட்டில் தனிக் குடித்தனம் ஆரம்பித்தாலும், இருவர் சம்பாத்தியத்தையும் வைத்துக் கொண்டு தன் பெற்றோர்களையும் நீலாவின் வீட்டாரையும், அப்புறம் தங்கள் இருவரையும், ஆக மூன்று குடும்பங்களையும் காப்பாற்றி வர முடியாது. அதனால் அவளை மணந்துகொள்ள நினைப்பது நிறைவேற முடியாத ஓர் ஆசையாகவே இருந்தது.
''இப்போதைய நிலையில் நீலாவை ஒருவன் கல்யாணம் செய்துகொண்டால் அவன்தான் அவள் தாய்க்கும் தங்கைகளுக்கும் எமன்'' என்று ராமச்சந்திரனும் ஒரு சமயம் சொன்னார். எனவே ஒரு குறிக்கோள் இல்லாமலே அவன் நீலா வீட்டாருடன் உறவாடி வந்தான். நிறைய சம்பாதித்தால் எல்லாப் பிரச்சனைகளுக்குமே ஒரு நல்ல முடிவு காணலாம் என்று அவனுக்குத் தோன்றியது. அப்போது, தான் அடைந்த ஒரு பெரிய ஏமாற்றமும், பம்பாயில் இருக்கும் தன் நண்பன் ஒருவன் கொடுத்திருந்த ஒரு மகத்தான நம்பிக்கையும் தினந்தினமும் அவன் நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன.
திருவல்லிக்கேணிக்குச் சுந்தரம் வந்து சேருவதற்கு முன்பே, திருநெல்வேலியில் இருந்தபோதே, அவனுக்கு பம்பாயில் வேலை கிடைப்பதாக இருந்தது. நம்பிக்கையோடு நண்பனுடைய தபாலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் திடீரென்று ஒரு நாள் பெரிய ஏமாற்றத்தை அளிக்கும் அந்தக் கடிதம் வந்து சேர்ந்தது.
''இந்தத் தடவை என் முயற்சி தோற்றுவிட்டது. இதற்காக நான் நம்பிக்கையை அடியோடு இழந்துவிடவில்லை. நீயும் இழக்க வேண்டியதில்லை. அடுத்த வருஷம் இதே சமயத்தில் இதே கம்பெனியில் சில வேலைகள் காலியாகும். நிச்சயமாக உனக்கு இடம் பிடித்து விடுகிறேன்'' என்று பம்பாயிலிருந்த ஜயராமன் எழுதியிருந்தான்.
''அடுத்த வருஷம்'' என்பது ஏமாற்றத்தைப் போக்குவதற்குச் சொல்லும் ஆறுதல் வார்த்தையாகவே அவனுக்குத் தோன்றியது. அவ்வளவுதான். இனி பம்பாய் ஆசையையும் பெரிய சம்பளக் கனவையும் விட்டுவிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஒரு விரக்தியுடன் சென்னையில் குறைந்த சம்பளத்தில் வேலை தேடிக் கொண்டு திருவல்லிக்கேணிக்கு வந்து சேர்ந்தான் சுந்தரம். ஆனால் ஜயராமன் மட்டும் மாதம் தவறாமல் பமபாயிலிருந்து நம்பிக்கையூட்டும் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தான். ஒரு கடிதத்தில் ''இன்னும் மூன்று மாதங்கள் தான். அப்புறம் நீ பம்பாய்க்காரன்! இதை நம்பி நீ எது வேண்டுமானாலும் செய்யலாம். இப்போதே மூட்டையைக் கட்டி வைத்துக் கொண்டு ரயில் ஏறத் தயாராக இரு'' என்று ஜயராமன் எழுதியிருந்ததைப் பார்த்த சுந்தரம்''. அன்று முதல் சென்னையில் ஒரு காலமூ பம்பாயில் ஒரு காலும் வைத்து நடக்கத் தொடங்கினான். ஜயராமனின் கடிதத்தில் கண்ட விவரங்களையெல்லாம் நீலாவிடம் ஒரு நாள் சொன்னான்.
''நீலா! இன்னும் மூன்று மாதங்களில் நான் பம்பாய்க்குப் போய்விடுவேன் போலிருக்கிறது. உங்கள் வீட்டாரின் அன்பை என்னால் என்றென்றைக்கும் மறக்க முடியாது''.
''உங்களுக்கு அப்படி என்ன நாங்கள் செய்துவிட்டோம்? ஒன்றுமே இல்லை. நீங்கள் உங்கள் வீட்டாரின் அன்பை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது''.
''உங்களுக்கு அப்படி என்ன நாங்கச் செய்துவிட்டோம்? ஒன்றுமே இல்லை. நீங்கள் பம்பாய்க்குப் போய்ச் செளக்கியமாய் இருங்கள் என்றாள் நீலா.
''நீங்கள் என்னை மறந்து விடுவீர்கள் இல்லையா?''
இதற்கு நீலா ஒரு பதிலும் சொல்லவில்லை. அவன் வார்த்தைகளைக் கேட்காதவன் போல் வீட்டுக்குள் போனாள்.
தனியே இருந்த சுந்தரத்துக்கு உள்ளத்தில் துயரச் சாயை படர்ந்தது.
'நீலாவைக் கல்யாணம் செய்து கொள்பவன் அவளுடைய தாய்க்கும் தங்கைகளுக்கும் எமன்.' மற்றவர்களின் நன்மைக்காகக் கைக்கு எட்டிக் கனியை மரத்திலேயே விட்டு விட்டு செல்கிறேன்...'
கிளைப்பாதை வெட்டி, விடைபெற்றுக் கொண்டு பம்பாய்க்குப் போயாகி விட்டது. சில நாட்கள் நீடித்த ஏமாற்றமும், ஏக்கமும், பிரிவுத் துயரமும் மறைந்து விட்டன. சம்பாத்தியத்திலேயே கண்ணும் கருத்துமாக இருந்தான். அவனுக்கு நீலாவின் ஞாபகம் இரண்டு வருஷங்களுக்குப் பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் முழு வேகத்துடன் தலை தூக்கியது. சுந்தரம் அப்போது தன் நண்பன் ஜயராமன் வீட்டில் இருந்தான். சுந்தரத்துக்கு இன்னும் இரண்டு மாதங்களில் மனைவியாகப் போகிறவளின் போட்டோவை ஜயராமன் வாங்கிப் பார்த்தான். அவளுடைய குடும்பத்தின் செல்வத்தையும், செல்வாக்கையும் பற்றிச் சுந்தரத்தின் வாய்மொழி மூலம் அறிந்தான். முடிவில் தன் முழுத் திருப்தியைத் தெரிவித்து நல்வாழ்த்துக் கூறினான் ஜயராமன்.
அந்தக் கட்டத்தில் நீலாவைப் பற்றி ஒரு கதை மாதிரி சொல்லத் தொடங்கினன் சுந்தரம்.
கதை பெரிதாக நீளும்போல் இருந்தது. அவ்வளவு நேரம் பொறுமையோடு கேட்டுக் கொண்டிருப்பது என்பது ஜயராமனைப் பொறுத்த வரையில் முடியாத காரியம். அவன் காரியவாதி. நடக்க முடியாத காரியங்களையோ, பயனற்ற வேலைகளையோ அவன் செய்ய மாட்டான் என்பதோ, காதால் கேட்கவும் நினைத்துப் பார்க்கவும் கூட மாட்டான். ஏக்கங்கள், கனவுகள், கற்பனை வாழ்க்கைகள் - இவையெல்லாம் அவனுக்கு அறவே பிடிக்காதவை. அதனால் சுந்தரத்தின் பேச்சில் குறுக்கிட்டு, ''இதையெல்லாம் இப்போது நீ ஏன் சொல்லிக் கொண்டிருக்கிறாய்? அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்வதாக நீ வாக்குறுதி ஏதாவது கொடுத்திருக்கிறாயோ?'' என்று கேட்டான்.
''அப்படியெல்லாம் ஒன்றுமில்லை...'' என்று சுந்தரம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ''அப்புறம் என்ன? அத்தோடு விடு. பத்தாயிரத்தோடு கிளிமாதிரி ஒரு பெண்ணைக் கொடுக்க ஒருவன் வீட்டு வாசலில் வந்து காத்துக் கொண்டு நிற்கிறான். இந்த நேரத்தில் எதற்கு நீலாவையும் லீலாவையும் பற்றிக் கவலை?'' என்றான் ஜயராமன்.
''அப்படி அறவே உதறி விடுகிற ஒரு தொடர்பல்ல இது. வாயால் சொன்னால்தான் வாக்குறுதியா? நான் நினைத்திருந்தால் நாங்கள் இருவருமே தம்பதிகளாகி பம்பாய்க்கும் வந்திருப்போம். ஆனால்...''
''சுந்தரம்! இந்த நேரத்தில் இதைக் கேட்கவே எனக்குப் பிடிக்கவில்லை. உன் கல்யாணம் இவ்வளவு தூரம் நிச்சயமாகும் வரையில் சும்மா இருந்துவிட்டு, இப்போது மெட்ராஸில் பழகிய எவளோ ஒருத்தியை நினைத்து ஏங்குவது உசிதமில்லை. முன்னமேயே 'இந்தக் கல்யாணம் எனக்குச் சம்மதமில்லை' என்று அப்பாவுக்குக் கடிதம் எழுதிவிட்டு, பழைய காதலியைக் கல்யாணம் செய்து கொள்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளை நீ செய்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் இப்போது இப்படியெல்லாம் யோசிப்பது பொறுப்பில்லாத்தனம்; இதில் யோக்கிய பொறுப்பும் கூட இல்லை.''
''நீ எப்பொழுதுமே இப்படித்தான் பேசுவாய். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசி முடிக்கும் விஷயமா இது?ஞ
''இல்லை என்றே வைத்துக் கொள்வோம். அதற்காக இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்கிறாய்? இந்தக் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிவிடப் போகிறாயா?''
''எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஊருக்குப் போவதும் நிச்சயம்; கல்யாணம் செய்து கொள்ளப் போவதும் நிச்சயம். அதைப் பற்றியொல்லாம் சந்தேகமில்லை...''
''அப்படியானால் விஷயம் அத்துடன் முடிந்தது! அப்புறம் என்ன?..... சுந்தரம், நான் வெளியே போக வேண்டும். ஒரு அவசரமான காரியம். சாவகாசமாகப் பார்ப்போம்'' என்று சொல்லிக் கொண்டே ஜயராமன் எழுந்து விட்டான்.
பிறகு நீலாவைப் பற்றி அவன் ஜயராமனோடு பேசவே இல்லை.
ஹோட்டல் அறையில் சுந்தரம் தூங்கியெழுந்தபோது மணி ஐந்த அடித்து விட்டது. நீலா இப்போது ஆபிஸிலிருந்து வீட்டுக்குப் போய்க் கொண்டிருப்பாள் என்று நினைத்துக் கொண்டே முகத்தைக் கழுவி, உடைகளை மாட்டிக் கொண்டு மாடியை விட்டுக் கீழே இறங்கி வந்தான். ஒரு டாக்ஸியைப் பிடித்துக் கொண்டு திருவல்லிக்கேணிக்குப் புறப்பட்டான்.
'விட்டக் குறை என்பது ஒரு ஜன்மத்திலிருந்து மறு ஜன்மத்துக்குத் தொடரும் என்பார்கள். எனக்கோ இந்த ஜன்மத்திலேயே தொடரும் ஒரு விட்ட குறையாக இருக்கிறது நீலாவின் தொடர்பு. இந்தக் குறையை இனி எந்த ஜன்மத்திலும் என்னால் பூர்த்தி செய்ய முடியாது.
'அதிர்ஷ்டவசமாக அவள், உணர்ச்சி வசப்படக்கூடியவள் அல்ல. என் கல்யாணச் செய்தியை அறிந்து ரகசியமாகக் கூட அவள் அழமாட்டாள். கலகலப்பாகத் தான் நடந்து கொள்வாள். வழக்கம்போல் ஐந்து வார்த்தைகள் பேசுவாள். அவளைப் பார்த்தால் எனக்குத்தான் ஒரு வேளை மனக்கஷ்டம் உண்டாகலாம். பாவம் அவளுடைய மெளனத்திலும் அலட்சியப் போக்கிலும் அன்பு துளித்தது என்பது எனக்கல்லவா தெரியும்? இனி அவள் யாரோ? நான் யாரோ? இன்றோடு இந்த உறவுக்கு ஒரு முடிவு ஏற்பட்டுவிடும். நீலாவை என் மனப்பீடத்திலிருந்து நிரந்தரமாக நீக்கி விடுவதற்காகப் போகிறேன். கடைசி முறையாக அவளைப் பார்க்கப் போய்க் கொண்டிருக்கிறேன்''.
டாக்ஸி நீலாவின் வீட்டு வாசலில் போய் நின்றது. சுந்தரம் இறங்கி வீட்டுக்குள் போனான். அவன் போன போது எல்லோருமே வீட்டில் இருந்தார்கள். அவனை அன்போடு வரவேற்றார்கள். நீலா ஐந்து வார்த்தைகள் அல்ல, ஐம்பது வார்த்தைகளுக்கு மேலேயே பேசினாள். அவளுடைய தாயார் அவளை ராஜ மரியாதையோடு வரவேற்றாள். அவளுக்கு ஏதோ ஒரு நம்பிக்கை தளிர்த்திருப்பது போல தோன்றியது. நீலாவின் தங்கைகள் இருவரும் அவனை வைத்த கண்வாங்காமல் அந்நியோந்யமான ஒரு பிரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
''பம்பாய் வாழ்க்கை எப்படி இருக்கிறது?'' என்று கேட்டாள் நீலா.
''நன்றாகத்தான் இருக்கிறது''.
''போய் இரண்டு வருஷங்களாகியும் ஒரு கடிதம் கூட போடவில்லையே?'' என்று கேட்டாள் நீலாவின் தாயார்.
'ராமச்சந்திரனுக்கு எழுதும் ஒவ்வொரு கடிதத்திலும் உங்கள் §க்ஷம லாபங்களை விசாரித்துக் கொண்டுதான் இருந்தோம். உங்களுக்கு என்று நான் தனியாகக் கடிதம் எழுதவில்லை. அது குற்றம் என்றால் மன்னிக்க வேண்டும்.''
''மன்னிக்கவே முடியாது!'' என்று சொல்லிவிட்டு நீலா சிரித்தாள். அவன் உட்பட எல்லோருமே சிரித்தார்கள்.
நீலாவின் பேச்சு அவனுக்கு இன்பகரமான ஓர் அதிர்ச்சியையே அளித்தது.
சிறிது நேரம் ராமச்சந்திரன் வீட்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். நீலாவின் கடைசித் தங்கை உத்தியோகத்துக்கு மனு போட்டிருக்கும் செய்தியையும், அதற்கும் ராமச்சந்திரனின் உதவியையே நம்பிக் கொண்டிருப்பதையும் அவனுக்குத் தெரிவித்தார்கள்.
''மூன்று வருஷங்களுக்கு முன் இவள் மனு போட்டு, உத்தியோகத்துக்கும் போயிருந்தால் கதையே மாறியிருக்கும். நீலா என் மனைவியாகி என்னோடு பம்பாய்க்கு வந்திருப்¡ள். இப்போது காலம் கடந்து விட்டதே என்று ஓரளவுக்கு அவன் வருந்தினான். அடுத்த நிமிஷத்திலேயே தனக்குக் கல்யாணம் நடக்கப் போவதையும் அதற்காகவே தான் பம்பாயிலிருந்து வந்திருப்பதையும் அவன் தெரிவித்தான்.
நீலா அதைக் கேட்டதும் முகத்தில் ஒரு சலனமும் இல்லாமல் அவன் கண்களைக் கூர்ந்து பார்த்தாள். அவளுடைய தாயாரும் ஏறக்குறைய அதே நிலையில் தான் அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனுடைய கல்யாணச் செய்தியைக் கேட்டு மகிழ்ச்சியைக் காட்டிக் கொண்டவர்கள் நீலாவின் தங்ககைள் இருவரும் தான்.
''நிச்சயம் ஆகி விட்டதா சுந்தரம்? எந்த ஊர்ப் பெண்?''
''அவளுக்கும் திருநெல்வேலிதான். நிச்சயம் ஆன மாதிரி தான். அடுத்த மாதம் முகூர்த்தம்...''
''ரொம்ப சந்தோஷம் சுந்தரம்! பெண் வீட்டார் வசதி எப்படி? எவ்வளவு செய்வார்கள்?'' என்று தாயாரே கேட்டாள்.
பத்தாயிரம் ரூபாய் வரதட்சணை கொடுப்பார்கள் என்ற விவரத்தையும், பெண் வீட்டாரின் செல்வநிலையையும் அவன் விரிவாக எடுத்துச் சொன்னான்.
'எங்களால் கல்யாணத்துக்கு வர முடிகிறதோ இல்லையோ, நீ பம்பாய்க்கு மனைவியை அழைத்துக் கொண்டு போகும்போது இங்கே ஒரு நாளாவது வந்து தங்கிவிட்டுப் போக வேண்டும்'' என்றாள் நீலாவின் தாயார்.
அவ்வளவு நேரமும் மெளனமாக உட்கார்ந்திருந்த நீலா திடீரென்று எழுந்து வீட்டிற்குள் போனாள். அவள் அப்படிப் போனது எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்தது.
எல்லோருக்குமே அது ஒரு மர்மமாக இருந்தது. ஒரு நிமிஷம். மெளனமாக இருந்தார்கள்.
சூழ்நிலையை மாற்றும் நோக்கத்துடன், ''பம்பாய்க்குப் போகும்போத கட்டாயம் வரவேண்டும் சுந்தரம்'' என்று நீலாவின் தாயார் மறுபடியும் சொன்னாள்.
''உங்களைப் பார்க்காமலா நான் பம்பாய்க்குப் போவேன்? நீங்கள் அழைக்காவிட்டாலும் நான் மனைவியோடு வருவேன். உங்களை அவளுக்கு அறிமுகப்படுத்தி, 'நான் திருவல்லிக்கேணியில் இருந்தபோது எனக்குத் தாயும், உடன் பிறந்த சகோதரிகளுமாக இருந்தவர்கள்! என்று மகிழ்ச்சிப் பெருக்கோடு அவளுக்குச் சொல்வேன்.''
இதைச் சொல்லும் போது சுந்தரத்துக்கு கண்கள் நனைந்தன. அந்த அம்மாளும் ஒரு பெருமூச்சுடன் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள்.
மேற்கொண்டு பேச எதுவும் இல்லை. நீலாவின் வருகையை எதிர்பார்த்தவாறு அவன் உட்கார்ந்திருந்தான். அதுவரையிலும் அவளுடைய தங்கைகளோடு என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தான்.
நீலா வெளியே வரும்போது உடைமாற்றிக் கொண்டு வந்தாள். வெளியே எங்கோ போகிறவள் போல காணப்பட்டாள்.
''நீலா! எங்கே புறப்பட்டு விட்டாய்?''
''ராமச்சந்திரன் மனைவியைப் பார்க்கப் போகிறேன். ஜவுளிக் கடைக்குப் போகிறாளாம். என்னையும் அழைத்தாள்'' என்று சொல்லிவிட்டு நாற்காலியின் ஓர் ஓரத்தில் உட்கார்ந்தாள். சுந்தரம் எழுந்து போவதற்காகக் காத்திருப்பவள்போல இருந்தது அவள் உட்கார்ந்திருந்த நிலை.
குறிப்பறிந்து சுந்தரம் எழுந்து, ''நானும் ரயிலுக்குப் போகவேண்டும் போய் வரட்டுமா?'' என்று எல்லோரையும் பார்த்துச் சொன்னான்.
''உட்காருங்கள்'' என்றாள் நீலா.
அவன் திகைத்தான்.
''காபி சாப்பிட்டுவிட்டுப் போகலாம்'' என்று சொன்னாள்.
சுந்தரம் அளவிட முடியாத ஒரு மகிழ்ச்சியோடு உட்கார்ந்தான்.
''காபி போடத்தான் அவ்வளவு அவசரமாக உள்ளே எழுந்து போனாயோ?'' என்று சொல்லிவிட்டு அந்த அம்மாள் வீட்டினுள் சென்றாள். அவளைத் தொடர்ந்து நீலாவின் கடைசித் தங்கை சாந்தியும் எழுந்து போனாள்.
''ஒருவன் வீடு தேடி வந்திருக்கும்போது இப்படி நடுவே எழுந்து அவசரமாக வெளியே போக உனக்கு எப்படித்தான் தோன்றுகிறதோ? நீலா நீ என்ன செய்யப்போகிறாய் என்பதை அந்த நிமிஷம் வரையிலும்கூட யாராலும் யூகிக்க முடியாது''.
''நீங்கள் ஏன் எங்களைக் கல்யாணத்துக்கு அழைக்கவில்லை? ஒரு வார்த்தைகூட வாருங்கள் என்று சொல்லவில்லையே!''
''முகூர்த்தம் வைத்ததும் முதல் அழைப்பு உங்களுக்கு அனுப்பாமல் வேறு யாருக்கு அனுப்பப் போகிறேன்? இதைச் சொல்லியா தெரிந்து கொள்ள வேண்டும்'' என்றான் சுந்தரம்.
''ஐயோ! உங்களுக்குத்தான் எங்கள்மேல் எவ்வளவு அன்பு'' என்று சொல்லிவிட்டு நீலா சிரித்தாள். அவளுடைய வார்த்தைகள் அவன் உள்ளத்தில் ஆழமாக தைத்தன.
''ஏன் இப்படிச் சொல்கிறாய் நீலா?''
''உண்மையாகத்தான் சொல்கிறேன். உங்களுடைய அன்பு எங்களைப் பிரமிக்கும்படி செய்கிறது! இவ்வளவு அன்பாக நீங்கள் இருக்கிறீர்கள் என்பது இதுவரையிலும் எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டதே என்றுதான் வருத்தப்படுகிறேன்'' என்றாள் நீலா. உடனே பக்கத்தில் உட்கார்ந்திருந்த தன் தங்கையைப் பார்த்து, ''போய்க் காபி போட்டாகிவிட்டதா என்று பார். நான் அவசரமாகப் போக வேண்டும்'' என்றாள்.
''உன் அவசரத்துக்கு நான் குறுக்கே நிற்கவில்லை. காபி சாப்பிடாவிட்டால் என்ன? இன்னொரு நாள் சாப்பிட்டுக் கொண்டால் போகிறது. நீ எனக்காக ஏன் காத்திருக்கிறாய்?'' என்றான் சுந்தரம்.
பக்கத்தில் வேறு யாரும் இல்லை என்பதை ஒருமுறை திரும்பிப் பார்த்து நிச்சயப்டுத்திக் கொண்டு, ''இவ்வளவு அன்போடு தேடி வந்திருக்கும் உங்களுக்குக் காபி கூடக் கொடுக்காமல் நான் எழுந்து போகலாமா?'' என்றாள். மறுநிமிஷமே, ''நீங்கள் எதற்காக இப்போது இங்கே வந்தீர்கள்?'' என்று கடுமையான குரலில் கேட்டாள் நீலா.
சுந்தரத்துக்கு ரத்த ஓட்டமே நின்றுவிட்டது. எதிர்பாராதவாறு வந்து தன்னை ஒரு ஈட்டி தாக்கியது போல் இருந்தது.
''நீலா, ஏன் இப்படிக் கேட்கிறாய்? நீ பேசுவது எதுவுமே புரியவில்லை''.
''புரியவே வேண்டாம்....'' என்று சொல்லிவிட்டு உள்ளே திரும்பித் தங்கையை அழைத்தாள்.
''சாந்தி! சீக்கிரம் காபியை எடுத்துக் கொண்டு வா எவ்வளவு நேரம்!'' என்று குரல் கொடுத்தாள்.
காபி வந்தது. அவனும் அதை எடுத்துக்குடித்தான். ஆனால் அவன் எதிர்பார்த்தபடி நீலா வெளியே போக எழுந்திருக்கவில்லை. அவனுக்கு எதிரே அவனைப் பார்த்தவாறு உட்கார்ந்து கொண்டுதான் இருந்தாள்.
அப்போது பக்கத்தில் யாரும் இல்லை.
''நான் வந்ததால் உனக்கு மனக் கஷ்டமா நீலா? சொல், உண்மையைச் சொல்.''
அவள் பேசவில்லை.
''என் மேல் ஏதேனும் கோபமா?''அதற்கும் அவள் பதில் சொல்லவில்லை. ஆனால் அவள் உதடுகள் இலேசாகத் துடித்தன.
அப்போது சுந்தரம் தன்னை அறியாமலே அவள் கையைப் பிடித்தான்.
அவ்வளவு தான்; அவன் கையை அவள் முரட்டுத்தனமாக உதறினாள்; உடனே சுற்றும் முற்றும் பார்த்தாள். முகத்தில் ரத்தம் குபீரென்று பாய்ந்தது. முகமெல்லாம் கனலாகச் சிவந்து விட்டது.
''யார் நீ... அயோக்கியன்! மரியாதையாக எழுந்து போய்விடு'' என்று சீறினாள்.
''நீலா! என்னை... என்னை... மன்னிக்க வேண்டும்.....'' அவனுக்கு வாய் குழறியது.
தெருவைக் காட்டி ''வெளியே போ'' என்றாள்.
சுந்தரம் தயங்கினான்.
''போய் விடு!'' என்று கண்டிப்போடு சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டாள்.
ஒன்றும் தோன்றாமல் உட்கார்ந்திருந்தான் சுந்தரம். அவன் உடம்பெல்லாம் மரத்துவிட்டது. உள்ளேயிருந்து யாருமே வெளி வரவில்லை.
தன்னுணர்வு சிறிது மீண்டதும் அந்த இடத்தைவிட்டு எழுந்தான். வெகுவேகமாக வீட்டை விட்டு வெளியேறினான்.
சுந்தரம் அன்றிரவு ரயிலுக்குப் போகவில்லை. ராமச்சந்திரனைப் பார்த்துத் தன் கல்யாணச் செய்தியைச் சொல்லாமல் ஊருக்குப் போகக் கூடாது என்பது வேண்டுமென்று கற்பித்துக் கொண்ட ஒரு போலிக் காரணம். மனம் நிம்மதியை அடியோடு இழந்துவிட்ட அவனால் அன்று ஊருக்குப் போக முடியவில்லை என்பதுதான் உண்மை. நேரிலோ போன் மூலமோ நீலாவிடம் ஒரு வார்த்தை பேசாமல் ஊருக்குப் போக முடியாது என்பது தெளிவாகி விட்டது.
இரவில் சாப்பிட்டும் சாப்பிடாமலும் ஹோட்டல் அறையில் படுத்து விட்டான்.
''நீலா தன் தாயிடமும் தங்கைகளிடமும் என்ன சொல்லியிருப்பாள்? ராமச்சந்திரனின் மனைவியிடம் போய் என்ன கூறியிருப்பாள்? அவர்கள் இனிமேல் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?''
இரவெல்லாம் அவனுக்கு இதே கலவரம்.
''என்றுமில்லாத வகையில் என்னை உபசரித்தாள். என்னோடு பேசி விளையாடினாள். என் அன்பைப் பழிக்கும் போது அவளுடைய அன்பு முழுவதுமே பிரவகித்ததைப் பார்த்தேன். அவளுடைய ஏமாற்றத்தையும் கூடக் கண்டு கொண்டேன். அவளா என்னை இப்படி அவமானப்படுத்தி விரட்டினாள்? ஏன்? நான் கையைத் தொட்ட மாத்திரத்தில் விம்மி அழுவாள் என்று நினைத்தேன். ஆனால் கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாகிவிட்டது. ஏன் இந்த சீற்றம்? எவ்வளவு அவமானகரமான வார்த்தைகள்! என் முட்டாள்தனம் தான் காரணம். அவளுடைய அன்பிலும் அழகிலும் என் மனசைப் பறிகொடுத்து நிதானத்தை இழந்து விட்டேன். நம்பியவளை மோசம் செய்துவிட்டு வேறொருத்தியை மணக்கப் போகிறவன் என்று நினைத்துத்தான் என் மீது ஆத்திரத்தைக் கொட்டினாளா? இல்லை என்றால் எவளையோ மணந்துகொள்ளப் போகிறவன் தன்னைத் தொடுவதா என சீறி விழுந்தாளா? என் இஷ்டத்துக்கெல்லாம் இணங்கக்கூடியவள் என்று அவளை நான் கீழ்த்தரமாகக் கருதி விட்டதாகவே அவள் நினைத்துவிட்டாள். அந்த அவமானத்தை அவளால் தாங்க முடியவில்லை. உண்மையும் அதுதானே? நான் யாரோ ஒருத்திக்குக் கணவனாகப் போகிறவன். ஒரு கன்னிப் பெண்ணைத் தொடுவது அயோக்கியத்தனம் என்று அவள் நினைத்ததில் என்ன தவறு?''.
மறுநாள் அவளிடம் மன்னிப்புக் கேட்காமல் ஊர் திரும்புவதில்லை என்று முடிவு செய்தான் சுந்தரம். இந்த முடிவுதான் அவனுடைய மனக் கலவரங்களைப் போக்கி, அவனுக்குச் சில மணிநேரத் தூக்கத்தையாவது அளித்தது.
மறுநாள் பகல் பதினொன்றரை மணி அடித்தது. அதற்காகக் காத்துக் கொண்டிருந்த சுந்தரம் நீலாவின் ஆபீசுக்குப் போன் பண்ணி அவளை அழைத்தான்.
''நான் சுந்தரம் பேசுகிறேன். ஒரு முக்கியமான விஷயம். போனை வைத்து விடாதே, நீலா!'' என்ற வேண்டுகோளுடன் சுந்தரம் பேச ஆரம்பித்தான்.
''நீலா!
என்னை மன்னிக்க வேண்டும்''.
ஆபீஸில் பத்துப் பேருக்கு நடுவில் நின்று போனில் பேசும் நீலாவுக்கு தர்மசங்கடமாக இருந்தது. மனசில் நினைத்ததை அங்கே பேச முடியுமா? §வ்ணடுமானால் போனை அப்படியே வைத்துவிட்டு வந்துவிடலாம். அவன் திரும்பவும் அழைத்தால்..? நிலைமை இன்னும் மோசமாகும். டெலிபோன் ஆபரேட்டர் பொல்லாத வாயாடி. ஒன்றை ஒன்பதாக்கிப் பேசுவாள். ஓர் ஆண் குரல் திரும்பத் திரும்ப அழைப்பது, அவள் பதில் பேசாமல் கோபத்தோடு போனை வைத்துவிட்டு வருவது.... இது பயங்கரமான நாடகமாகிவிடும்.
''என்னை மன்னிப்பாயா நீலா?'' - சுந்தரம் இதே வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான்.
நிலைமையைச் சமாளிக்கச் சாதாரணக் குரலில், ''என்ன விஷயம்?'' என்று கேட்டாள் நீலா. அவள் ஆபீஸில் உள்ளவர்களுக்காகப் பேசிய வார்த்தைகள் இவை. ஆனால் அவளுடைய குரலில் கோபமோ ஆத்திரமோ இல்லாததைக் கண்டு சுந்தரம் அங்கே மகத்தான ஆறுதலும் ஊக்கமும் அடைந்தான்.
''நான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன் நீலா. என்னை நீ மணப்பூர்வமாக வாழ்த்த வேண்டும். வாழ்த்துவாயா?'' என்று கொஞ்சம் தெளிவுடனேயே பேசத் தொடங்கிறான்.
''வாழ்த்துக்கள்!''
''என் மேல் உனக்கு இன்னமும் கோபம் இருக்கிறதா?''
பதில் இல்லை.
''என்னைத் துரோகி என்று நினைக்கிறாயா?''
பதில் இல்லை.
''என்னை இப்பொழுதும் அயோக்கியன் என்றுதான் நினைக்கிறாயா?''
''சந்தேகமில்லாமல், வேறு என்ன விஷயம்?'' நீலா அவசரப்பட்டாள்.
''என் தவறுதான். நான் அயோக்கியன்தான். என்னை மன்னித்துவிடு. என்னை வாயார வாழ்த்து. நம் இருவரிடையிலும் ஏற்பட்டிருக்கும் இந்தத் தீராத பிரச்சனையை உன் மன்னிப்புத்தான் தீர்க்க முடியும் நீலா!''
நீலா மெளனமாக இருந்தாள்.
''உன்னைப் பொறுத்தவரையிலும பிரச்சனை தீர்ந்து விடாது என்பதை ஒப்புக் கொள்கிறேன். பம்பாயிலிருந்நது வந்து நான் ஒரு பெரும் பிரச்சனையையே உண்டு பண்ணி விட்டேன். உனக்கு நான் செய்த இந்த தீங்கை நினைத்து வருந்துகிறேன் நீலா!''.
அவள் எதுவும் பேசவில்லை.
அவனும் பேசவில்லை.
போன் ரிசீவரை இருவரும் மெளனமாகப் பிடித்துக் கொண்டு நின்றார்கள். அவன் ரிசீவரை வைக்கட்டும் என்று அவள் காத்திருந்தாள். அவனும் அப்படியே காத்திருந்தான். மெளனம் எல்லையில்லாமல் நீண்டது.
''நீலா! விட்ட குறையை நான் தொட்ட குறை இது. மன்னித்துவிடு. மனப்பூர்வமாக என்னை மன்னித்துவிடு. மன்னிக்கிறாயா? 'மன்னிக்கிறேன்' என்று ஒரு வார்த்தை சொல். சொல் சீக்கிரம்.
நீலா அவனை மன்னிக்கவேயில்லை. அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டு மெளனமாகவே நின்றாள்.
ஒரு நிமிஷம் கழிந்தது.
ஆபீஸில் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்காகவே அவள் கடைசி வார்த்தைகளைப் பேசினாள்:
"ஒஹோ.....அப்படியா? ... பரவாயில்லை ...... அது ரொம்பப் பழைய வீடு. எதற்கும் அம்மாவிடம் சொல்கிறேன். அப்புறம் பார்ப்போம்.''
போன் ரிசீவரை அதன் யதாஸ்தானத்தில் வைத்துவிட்டுத் தன் இருப்பிடத்துக்கு வந்து அமர்ந்தாள் நீலா.
*********கு. அழகிரிசாமி ''அந்தப் பாதையில் அவளும் நானும் எப்படியோ வந்து சேர்ந்தோம். பிரயாணத்தைத் தொடங்கினோம். ஒரே திசையை நோக்கிப் பக்கம்...
Bonjour & Welcome
Subscribe & Follow
Popular Posts
Created By Sora Templates | Distributed By Gooyaabi Templates