நிகழாத அற்புதம் சிவராத்திரி நள்ளிரவு ஒளிக்கீற்றொன்று இறங்கிற்று வான்விட்டு திறந்தவெளியில் 16எம்எம்மில் திருவிளையாடல் கண்டு ...
நவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்
நிகழாத அற்புதம்
சிவராத்திரி நள்ளிரவு
ஒளிக்கீற்றொன்று
இறங்கிற்று வான்விட்டு
திறந்தவெளியில் 16எம்எம்மில்
திருவிளையாடல் கண்டு
பரவசத்தில் உறைந்திருந்த மக்கள்
ஏவுகணையோ ஏதோவென்றஞ்சி
அலறி ஓடினர்
வெடியோசை கேட்டதும்
சிதறிப் பறக்கும் கொக்குகளாக
குனித்த புருவமும் கொவ்வைச்செவ்
வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல்
மேனியிற் பால்வெண்ணீறுமாய்ச்
சுற்றிலும் நோக்கினார் சிவனார்
வண்ணத்திரையில் சிவாஜியின் சிம்மகர்ஜனை
நிசப்தத்தை நடுங்கவைத்தது
பக்தர்கள் எங்கே?
துறுதுறுத்த கையை
மார்போடணைத்துக்கொண்டார்
குமிண்சிரிப்பு மறைந்து
ஏமாற்றத்தில் இருண்டது முகம்
மறுகணம்
நிசப்தமான வெடிச்சிரிப்பு
சிவரூபம் ஒளிக்கீற்றாகி மேலெழுந்து மறைந்தது
*
நன்றி: உயிர்மை
நிகழாத அற்புதம் சிவராத்திரி நள்ளிரவு ஒளிக்கீற்றொன்று இறங்கிற்று வான்விட்டு திறந்தவெளியில் 16எம்எம்மில் திருவிளையாடல் கண்டு ...
Created By Sora Templates | Distributed By Gooyaabi Templates