சிட்டி
மீனாக்ஷி அம்மாள் ரொம்பவும் நல்லவள். அவளுடைய மனப்பான்மையில் பொறாமையோ சந்தேகமோ கிடையாது. அன்பு நிறைந்த அவளுடைய சம்பாஷணை அவளை வெகுளி என்றே தோற்றுவிக்கும். விளைவைக் கருதாமல் எதைப் பற்றியும் விஸ்தாரமாகவே பேசிவிடுவாள். சந்தர்ப்பத்திற்கேற்றவாறு பரிபாஷையிலோ, இருபொருளாகவோ பேசும் வழக்கம் அவளிடம் கிடையாது. அந்த அம்மாளைப் பற்றி இவ்வளவு தெரிந்திருந்தும் அவளுடைய வார்த்தைகள் எனக்கு ஏன் குழப்பம் ஏற்படுத்தியது என்பதுதான் எனக்குப் புரியவில்லை. அவள் சொன்னது பொதுவாக இயற்கையாகவே இருக்கலாம். இருந்தாலும் அன்று அந்த நிலையில் லக்ஷ்மண் வீட்டில் விருந்தாளியாக இருந்த எனக்கு அசம்பாவிதமாகவே பட்டது.
லக்ஷ்மண் வீட்டிற்கு நான் வர நேரிட்டதே சந்தர்ப்பங்களின் சூழ்ச்சிதான். சம்பவங்கள் மறந்துவிடலாம், உணர்ச்சிகளை வென்று விடலாம். காலப்போக்கில் இது சாத்தியம் என்று மனிதன் எப்பொழுதுமே தற்பெருமை கொள்கிறான். அதே மனிதன் சம்பவங்களின் கருவியாகவும், உணர்சசிகளின் அடிமையாகவும் மாறுவதை யார் எடுத்துச் சொல்வது? ஞானிகள் முயற்சிக்கலாம். ஆனால் ஞானமே அனுபவத்தின் விளைவுதானே? அனுபவம் அவசியமா. தவிர்க்க முடியாததா என்பதைப் பற்றி ஆராயக்கூட மனிதனுக்கு அவகாசம் இருப்பதில்லை, தன்னுடைய தோல்விகளையே வெற்றியாகக் கொண்டாடி மயக்கமடையும் இயல்பு ஜீவ ஜந்துக்களிடையே அபூர்வப் பிறவியான இந்த மனிதனுக்குத்தான் வாய்த்திருக்கிறது.
கணக்கப் பரிசோதனைக்காக உத்தியோக முறையில் நான் மதுரைக்குச் சென்றபோது அந்த ஆபீஸில் நான் லக்ஷ்மணணை சந்திக்காமல் இருப்பதற்கு எனக்குப் போதிய காரணங்கள் இருந்தன. ஆனால் நாளை அவன் மாமியார் மீனாக்ஷிஅம்மாள் மனம் நொந்து கொள்ளாமல் இருக்க வேண்டுமே? இந்த ஒரு காரணம்தான் நான் அவனைப் பார்த்துப் பேசும்படி செய்தது என்பதை இன்று என்னாலேயே நம்ப முடியவில்லை. மனத்திற்குள் ஒரு மனம் உண்டு. அதன் சேஷ்டைகள் பல என்று சொல்லுகிறார்களே, அதற்கு இது ஒரு உதாரணம் போலும்.
முதல்நாள் நான் அவனைப் பார்த்து அறிமுகம் செய்து கொண்ட போது பொதுவாகத்தான் பேசிக் கொண்டிருந்தோம். என்னைப் பற்றி அதிகமாக நான் சொல்லிக் கொள்ளாமலிருந்தது எனக்கு வியப்பாகத் தான் தோன்றிற்று. மறுநாள் லக்ஷ்மணன் என்னைத் தேடி வந்து வீட்டுக்கு அழைத்த போது நான் சிறிது பின் வாங்கினேன். அவனுடைய மாமியாருக்கும் மனைவிக்கம் என்னை நன்றாக தெரியமென்பதையும், அவர்களுக்கு நான் ஒரு முறையில் உறவினர் என்பதையும் அறிந்து கொண்டு, அவன் நட்பும் சொந்தமும் கொண்டாட ஆரம்பித்து விட்டான்.
மறுத்துப் பயனில்லை என்று தெரிந்து அவனுடன் காப்பி மாத்திரம் சாப்பிட அவன் வீட்டுக்குச் சென்ற நான், அங்கேயே இரண்டொரு நாள் தங்கும்படி ஏற்பட்டதற்கு எனது மன உறுதியின்மையே காரணம் என்பதை நான் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். ஆனாலும் அன்பு ததும்பப் பேசி, அம்மாளின் குணத்தைக் கேவலம் மனஉறுதியுடன் எதிர்த்திருந்தால், சுய மரியாதை ஒன்றுதானே மிஞ்சி இருக்கும்? இல்லை, ஆவலும் மரியாதையும் கலந்த பண்புடன் நடந்து கொண்ட பார்வதியின் வரவேற்பைத்தான் புறக்கணிக்க முடியுமா? அவளுடைய கணவன் லக்ஷ்மணன் தான் கண்டுபிடித்த புதிய நட்பில் கர்மசிரத்தையும் மகிழ்ச்சியும் என் உறுதியைத் தகர்க்கும் முறையிலேயே அமைந்தது.
ஏழு வருஷங்களுக்கு முன் பார்வதி என்னை மணந்திருக்க வேண்டியவள். அநேகமாய்ப் பூர்த்தியான ஏற்பாடுகள் அவளுடைய தந்தையின் மரணத்தினால் தடைப்பட்டன என்ற விவரத்தை அவ்வளவு வெளிப்படையாக, அவ்வளவு சீக்கிரமாக எங்கள் மூவர் முன்னிலையிலும் மீனாக்ஷி அம்மாள் சொல்லியிருக்க வேண்டாம். ஆனால் லக்ஷ்மணன் அதை சாதாரணத் தகவலாகவே பாவித்ததை அறிந்ததும் எனக்கு அவன் மேல் அதிக மதிப்பு ஏற்பட்டது. பார்வதி என்னை மணந்திருந்தால் அதிருஷ்டசாலியாக - ஒரு ஆபீஸர் மனைவியாக வாழ்ந்திருக்கலாம் என்று லக்ஷ்மணன் ஹாஸ்யமாகப் பேசியது எனக்கு சற்று ஆறுதலளித்தது. மனதில் தோன்றம் உணர்ச்சிகளை முகத்தில் காட்டாத பொம்மைத் தோற்றம் படைத்தவள் பார்வதி. சிறுபருவத்தில் அன்று நான் கண்ட அதே பதுமைபோல இன்றும் இருந்தாள். அவள் மனதில் என்ன நினைத்தாளோ என்பதை ஊகிக்க நான் துணியவில்லை.
'என்னுடைய அதிருஷ்டம் அவருக்கு வாய்த்துவிட்டால் ஆபீஸராவது எப்படி?' என்று திரைச் சீலையிடம் பேசாமடந்தை பேசியது போல் அவள் கேட்டது எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.
''ஏண்டியம்மா, உன் அதிர்ஷ்டத்திற்கு என்ன கொறைச்சல்? என்று மீனாக்ஷி அம்மாள் ஆரம்பித்தவுடன் நான் குறுக்கிட்டேன்.
''இன்னும் இரண்டு வருஷத்திற்குள் லக்ஷ்மணன் ஆஃபீஸர் ஆகவேண்டியது தானே!'' என்று சொல்லி உத்தியோக விஷயங்கள் சிலவற்றை விளக்கி, பேச்சின் போக்கை மாற்ற முயன்றேன்.
நான் வேறு பெண்ணை மணக்க நேரிட்டதைப் பற்றி ஆராயத் தொடங்கி விட்டாள். சரியான விவரங்களைக் கொடுத்து, கதையை முடித்து விடுவது என்று தீர்மானித்து நானே விளக்கினேன்.
பார்வதியின் தந்தை காலமானதால் அவளுக்கு சீக்கிரம் விவாகம் நடக்க முடியாத நிலையில் என்னைத் தேடி பல பெண்களின் பெற்றோர்கள் வந்ததையும், அவர்களில் ஒருவர் வெற்றி பெற்றதற்கு
அவர் என்னுடைய பெற்றோர்களுக்கு 'பிள்ளையைப் பெற்றவர்கள்' என்ற முறையில் திருப்தி அளித்ததையும் ஒளிக்காமல் எடுத்துச் சொன்னேன். பார்வதிக்காக நான் காத்திருந்திருக்க வேண்டுமா என்பதைப் பற்றி அப்பொது நான் சிந்திக்கவில்லை. அன்று லக்ஷ்மண் வீட்டில் பேசிக் கொண்டிருந்த போது அப்படி சிந்திக்காமலிருந்தது சரிதானா என்ற ஒரு பிரச்சினை திடீரென்று என் மனதில் தோன்றிற்று. காதலும் வைராக்கியமும் கதைகளுக்குத்தான் பொருந்தும் என்ற நான் வேறு பெண்ணை மணக்க நேரிட்டதைப் பற்றி ஆராயத் தொடங்கி விட்டாள். சரியான விவரங்களைக் கொடுத்து, கதையை முடித்து விடுவது என்று தீர்மானித்து நானே விளக்கினேன். பார்வதியின் தந்தை காலமானதால் அவளுக்கு சீக்கிரம் விவாகம் நடக்க முடியாத நிலையில் என்னைத் தேடி பல பெண்களின் பெற்றோர்கள் வந்ததையும், அவர்களில் ஒருவர் வெற்றி பெற்றதற்கு அவர் என்னுடைய பெற்றோர்களுக்கு 'பிள்ளையைப் பெற்றவர்கள்' என்ற முறையில் திருப்தி அளித்ததையும் ஒளிக்காமல் எடுத்துச்
சொன்னேன். பார்வதிக்காக நான் காத்திருந்திருக்க வேண்டுமா என்பதைப் பற்றி அப்பொது நான் சிந்திக்கவில்லை. அன்று லக்ஷ்மண் வீட்டில் பேசிக் கொண்டிருந்த போது அப்படி சிந்திக்காமலிருந்தது சரிதானா என்ற ஒரு பிரச்சினை திடீரென்று என் மனதில் தோன்றிற்று. காதலும் வைராக்கியமும் கதைகளுக்குத்தான் பொருந்தும் என்ற கொள்கையைக் கொண்ட எனக்கு அம்மாதிரி அப்பொழுது தோன்றியது விசித்திரமாயிருந்தது. பார்வதியைப் பார்த்தேன். பார்க்கக் கூடாதென்று நினைத்தவன்தான், அப்பொழுது அவள் எங்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டி ருந்தாள். அவளும் என்னைப் பார்த்த அந்த நொடி நேரத்தில், ஏதோ ஒரு அறைகூவலை உணர்ந்தேன்; இல்லை. அது என் மனோ பிரமை என்று எனக்கே சொல்லிக் கொண்டேன். விளக்கொளியில் அவளுடைய முகம் வழக்கமான அமைதிக்கு மாறாகத் தோன்றிற்று.
சாப்பாடு முடிந்ததும் நானும் லக்ஷ்மணனும் அவன் அறையில் அமர்ந்து பல விஷயங் களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். காரியாலய அலுவல் முறை நுணுக்கங் களிடையே சொந்த விஷயங்களும் எங்கள் பேச்சுக்குப் பொருளாயின. என்னைப் பற்றி வீட்டில் வந்து சொன்னவுடன் அவனுடைய மாமியார் என்னுடைய பூர்வோத்தரமெல்லாம் எடுத்துச் சொல்லி உறவை விளக்கியத்தைப்
பற்றி சொன்னான். தாய் தந்தையற்ற தனக்கு மீனாக்ஷிஅம்மாள் எவ்வளவு ஆதரவாய் இருந்தாள் என்பதையும் பெருமையாகச் சொல்லிக் கொண்டான்.
பார்வதியின் தந்தை மறைந்த இரண்டு வருஷங்களுக்குப் பிறகு, அவளுக்கு வயதாகிவிட்டது என்ற கவலை மிகுதியினால் அவளைத் தனக்குக் கொடுக்க மீனாக்ஷி அம்மாள் முன் வந்தாள் என்று லக்ஷ்மணன் சொன்னபோது எனக்கு அவன் மீது ஏற்பட்ட மரியாதை இன்னும் அதிகமாயிற்று. பார்வதியைப் பற்றியும் அவன் பாராட்டிப் பேசியபோது அதை நான் மிகவும் ஆவலுடன் ஆமோதிக்க முற்பட்டதை திடீரென்று உணர்ந்து நானே நிறுத்திக் கொண்டேன்.
'இப்பொழுதுதான் தெரிகிறது. தனக்க வரனாகப் பார்க்கப்பட்டவன் நீ என்றால், வெட்கமாயிருக்காதா பார்வதிக்கு...! ஏன் தூக்கம் வந்து விட்டதா?''
தூக்கம் வந்து விட்டதாகப் பாசாங்கு செய்தால் தான் சர்ச்சை முடியும் போலிருந்தது. ஆனால், படுத்த பிறக எனக்குத் தூக்கம் வரவில்லை என்பது என்னுடைய ரகஸ்யமாகத்தானிருக்க வேண்டும்.
மனதில் தோன்றிய பல நினைவுச் சுழல்களுடன் போராடிய களைப்பினாலோ என்னவோ நெடுநேரம் கழித்துத்தான் தூங்கினேன்.
கபடமற்ற தன்மையிலும், நினைத்ததைப் பேசுவதிலும் லக்ஷ்மணனும் மீனாக்ஷி அம்மாளும் போட்டி போட்டது எனக்குப் பலவிதத்திலும் சிரமமாக இருந்தது. மறுநாள் எனக்கு ஓய்வு. லக்ஷ்மணன் மட்டும் ஆஃபீஸுக்குப் போயிருந்தான். நான் பல நண்பர்களைப் போய் சந்திக்க வேண்டும் என்று சொல்லி வெளியேற முயற்சித்தது வீணாயிற்று. அன்பின் அடிப்படையில் தோன்றிய அவர்களுடைய
வற்புறுத்தலை எதிர்க்க சக்தியில்லை.
அன்றுதான் மீனாக்ஷிஅம்மாள் அப்படிப் பேசினாள். என்னுடைய விவாகம், என் மனைவி, குழந்தைகளைப் பற்றி விவரமாகத் தெரிந்து கொள்ள ஆவலுற்றாள். என்னுடைய இரண்டு குழந்தைகளையும் பற்றி நான் சொல்லிக் கொண்டிருந்தபோது பார்வதி மிகவும் ஆர்வத்துடன் கவனித்ததைக் கண்ட அந்த அம்மாள் சொன்னாள்.
''பார்வதிக்கு குழந்தைகள்னா அவ்வளவு பிரியம். எதிர்த்த வீட்டுக் குழந்தை எப்பொழுதும் இங்கேதானிருக்கும்! ஊம்... ஆச்சு, வருஷம் ஏழு ஓடிப் போயிடுத்து.. இருக்காத விரதம் இல்லை. செய்யாத நோம்பில்லெ... ராமேஸ்வரம் கூட போகணும்னுதான்... மாப்பிள்ளெக்கு லீவு கெடைக்கணும்... ஆமா இப்போ ஒன் ஆத்துக்காரி வெறுமனத்தானே இருக்காள்?
கதவோரத்தில் நின்று கொண்டிருந்த பார்வதியின் முகத்தை நான் பார்க்கவில்லை. அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள் என்றதற்காக நான் ஏன் உண்மையை மறைத்தேன் என்று எனக்கே விளங்கவில்லை.
'ஆமாம்' என்று ஒரே வார்த்தையில் பொதுப்படையாக மீனாக்ஷிஅம்மாளுக்கு பதில் அளித்தேன்.
'என்னமோ பாவம்.. அப்படியே இருக்கட்டும்... அவளும் சம்சாரி ஆயிட்டா. பார்வதி வயசுதானே... ஏதோ அவ அப்பா உயிரோடெ இருந்து நிச்சயமானபடியே கலியாணம் நடந்திருந்தா இன்னிக்கி பார்வதியும் ரெண்டு கொழுந்தைகளோடே...'
''ஐயோ, போறமேம்மா... என்ன, அவருக்குத் தான் எப்பிடி இருக்கும், இப்பிடியே பேசிண்டிருந்தா?'
திகைத்து நிமிர்ந்து பார்த்தேன். ஆம், பார்வதிதான் பேசிக் கொண்டிருந்தாள். துணிந்து அவள் முகத்தைப் பார்த்தேன். நான் தான் தலைகுனிந்தேன்.
எதிர்வீட்டுக் குழந்தையின் வருகை ஒரு நல்ல வாய்ப்பாகக் கிடைத்தது. அந்தக் குழந்தையை அருகில் அழைத்துக் கொள்ள முயன்றேன். குழந்தை திமிறிக் கொண்டு பார்வதியிடம் ஓடிற்று. பார்வதியின் உள்ளத்தில் தொனித்த சிரிப்பு அவளுடைய பார்வையில் தெரிந்தது.
''ஏதோ நான் ஒளர்றேன். பைத்தியக்காரி. நீதான் சொல்லப்பா இருக்காதா? ஒடப் பொறந்தான் மாதிரி வந்திருக்கே. பார்வதிக்கு நீதான் ஆசிர்வாதம் பண்ணணும்.''
மீனாக்ஷிஅம்மாளின் பரிசுத்த மனதிற்கு இந்த வார்த்தைக்கள் அத்தாட்சியாக ஒலித்தன. ஆனால், சற்றுமுன் அவள் சொன்னதை பார்வதி ரசிக்கவில்லை என்பது உண்மைதானா என்று அனாவஸ்யமான கேள்வி என் மனதைக் கவ்விற்று.
எழுந்து லக்ஷ்மணன் அறைக்குச் சென்று ஒரு புத்தகத்தை எடுத்தேன். படிக்க முயன்றேன். மனம் குழம்பிக் கிடந்தது. பார்வதி அந்தக் குழந்தையுடன் கொஞ்சுவது லேசாகக் கேட்டுக் கொண்டிருந்தது.
மீண்டும் புத்தகத்தில் ஈடுபட்டேன். அறை கதவருகில் பார்வதி நிற்பது போல்... இல்லை. பார்வதிதான் நின்று கொண்டிருந்தாள், குழந்தையுடன்.
''இந்த மாமாவெக் கேக்கறயா.. இந்த மாமா எங்காத்து மாமா. ஊர்லேர்ந்து வந்திருக்கா. அவாத்துலே ஒரு பாப்பா இருக்கானாம். அவனெ இங்கே அழைச்சுண்டு வரச் சொல்லு, உன்னேடெ விளையாடா?'
இப்படி எதிர்பாராத விதமாய் பார்வதி முகமலர்ச்சியுடன் வந்து பேசியதில் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து நான் விடுபடுவதற்கள் அவள் மீண்டும் சொன்னாள்:
'அம்மா ஒரு அசடு; ஏதாவது பேத்தும். நீங்க ஏதாவது நெனச்சுக்காதீங்கோ.''
''ஏன்? அதனாலென்ன? அம்மா சொன்னதுலெ ஒன்னும்...' எப்படி முடிப்பதென்று தெரியாமல் தயங்கினேன். மீனாக்ஷிஅம்மாளுக்கு பரிந்து பேசுவதால் ஏற்படக்கூடிய விபரீதப் பொருளையும் பார்வதி ஆமோதிப்பதால் நேரும் மரியாதையற்ற நிலைமையையும் நினைத்துத் தவித்தேன்.
அப்பொழுது லக்ஷ்மணன் வந்தது எவ்வளவோ உதவியாயிருந்தது.
''என்ன.. பார்வதி என்ன சொல்கிறாள்? என்னைப் பத்தி ஒண்ணும் புகாரில்லையே? தேவலையே. நேத்தெல்லாம் ஒரேடியா பேசாம இருந்தாள். எனக்குக்கூட நீ என்ன நெனப்பையோன்னு..' என்று லக்ஷ்மண் ஆரம்பித்தான்.
'ஏன்? பார்வதி என்ன எனக்குப் புதுசா? மாமி சொன்ன மாதிரி நான் இப்பொ அவளுக்குத் தமையன் இல்லையா?'' என்றேன்.
பேசத் தெரியாமல் நிலைமையை சமாளிக்க சும்மா பேத்தினேன் என்றுதான் சொல்ல வேண்டும். பார்வதி குழந்தையுடன் உள்ளே சென்று விட்டாள். லக்ஷ்மணன் ஆஃபீஸ் விஷயமாக சில தகவல்களைக் கொடுத்தான். எங்கள் பேச்சு உத்தியோக ரீதியில் வளர்ந்து கொண்டு போயிற்று. அந்தக் குழந்தை ஓடி வந்தாள்.
''மாமா, மாமி கோயிலுக்குப் போகணும்னு சொல்றா. இந்த மாமாவும் வருவாளோல்லியோ?' என்றான் என்னைக் காண்பித்து.
''ஆம்! மறந்தே போய்விட்டேன். போகலாமா கோவிலுக்கு? என் அதிர்ஷ்டம் வீட்டிலும் மீனாக்ஷிஅம்மன், கோவிலிலும் மீனாக்ஷி' என்று சிரித்துக் கொணடே லக்ஷ்மணன் உள்ளே சென்றான்.
கோவிலுக்குள் நுழைந்ததும் தூண்களில் உள்ள உலக பிரசித்தமான சிற்பங்களைப் பார்த்து மகிழ்வதில் நான் சற்று பின் தங்கிவிட்டேன். பொற்றாமரைக் கரையில் சுவர் ஓவியங்களை பார்வதி குழந்தைக்குக் காண்பித்துக் கொண்டிருந்தாள். லக்ஷ்மணன் அங்கு எதிர்ப்பட்ட ஒரு நண்பனுடன் பேசிக் கொண்டிருந்தான். நான் அவர்களை அணுகியபோது பார்வதியின் தோற்றத்தில் காணப்பட்ட பொலிவு எனக்கு ஒரு புதுமையாக இருந்தது. என்னைப் பார்த்ததும் லக்ஷ்மணன், ''பார்வதியும் நீயும் போய்க் கொண்டிருங்கள், இதோ வந்துவிட்டேன்' என்றான்.
பார்வதி என்னைப் பார்த்தாள். அவள் உதடுகளில் ஏதோ புன்முறுவல் போலத் தோன்றிற்றே ஒழிய, பார்வை மிகவும் நிதானமாகவே இருந்தது. லக்ஷ்மணன் சொன்னபடி முன்னோக்கிப் போகத் தயாராயிருந்த அவளைத் தொடர்ந்தேன். இருவரும் அம்மன் சந்நிதியை நெருங்கினோம். அந்தக் குழந்தை பார்வதியைக் கேட்டது. 'ஏம் மாமி, இந்த மாமாவாத்து மாமி எங்கே?''
''நீயே கேளேன் இந்த மாமாவெ..'' என்றாள் பார்வதி.
'ஏன் மாமி, நீங்க பேசமாட்டேளா மாமாவோடெ?''
பார்வதி குலுங்கச் சிரித்தாள்.
''போக்கிரி. நீதானே மொதல்லெ கேட்டே.. பார்த்தேளா, இவளொடெ துடுக்குத்தனத்தெ!' என்றாள் என்னைப் பார்த்து.
''உன்னோடெ பழகுறாளோல்லியோ?...' என்றேன்.
''ஏன்.. நான் துடுக்கா இருக்கேனா?'
''இப்போ எப்படியோ? முந்தி எல்லாம்!'
'ஓஹோ! பழைய கதையைச் சொல்றேளா?'
அவள் கேட்ட மாதிரியில் எனக்கு உற்சாகம் குன்றிவிட்டது. ஆனால் அவள் மட்டும் குதூகலமாகவே இருந்தாள். என் மனைவி, குழந்தைகளைப் பற்றி தன் தாயாரைப் போலவே பல பேர்வாகள் கேட்க ஆரம்பித்தால்...
லக்ஷ்மணண் வரவில்லை. சிறிது நேரம் காத்திருந்து விட்டு சுவாமி சந்நிதிக்கும் போய்விட்டு வரும் போதுதான் அவனை மீண்டும் சந்தித்தோம். அதற்குமுன் நான் அவனைத் தேடிய போதெல்லாம் பார்வதி 'வருவார்' என்று பொதுவாகச் சொன்ன போது அவள் குரலில் தொனித்த அலட்சியம் எனக்குப பிடிக்கவில்லை. தான் எங்களை விட்டுப் பிரிந்து விட்டதைப் பற்றி லக்ஷ்மணனும் அதிகக் கவலைப் படவில்லை. மறுநாள் சினிமாவுக்குப் போகலாம் என்று லக்ஷ்மணன் சொன்னபோது நான் தட்டிக் கழிக்க முயன்றேன்.
''நீ வந்திருக்கேன்னு தானே... வா.. போகலாம்' என்று லக்ஷ்மண் வற்புறுத்திய போது நானும் அவனும் மட்டும் போவதாக நினைத்தேன். பார்வதி கூட வந்ததும், லக்ஷ்மணன் டிக்கட் வாங்கப் போனபோது அவள் என் அருகில் நின்று கொண்டு, அன்றைய படத்தின் கதையை சொல்லிக் கொண்டிருந்த போதும் எனக்கு மிகவும் சங்கடமாகவே இருந்தது. தியேட்டருக்குள் படம் நடக்கும் போது ஒவ்வொரு கட்டத்தையும் பார்வதி எனக்கு விளக்கிக் கொண்டே வந்தாள். அவளுடைய குதூகலமும் முக மலர்ச்சியும் எனக்கு விந்தையாகவே இருந்தது. படத்தில் என் மனம் செல்லவில்லை.
மறுநாள், ஊருக்குப் புறப்பட்டு விடுவதென்று தீர்மானித்தேன்.
லக்ஷ்மணன், மீனாக்ஷிஅம்மாள் இருவருடைய அன்பையும், ஆதரவையும் மீறிக் கொண்டு புறப்படுவது கஷ்டமாய்த் தான் இருந்தது. இருந்தாலும் வந்த காரியம் முடிந்துவிட்டது. சென்னை சேர்ந்து ரிப்போர்ட் எழுத வேண்டுமென்று சொல்லி தப்பித்தேன். மீனாக்ஷிஅம்மாள் வழக்கம் போல் உபசரிப்பை அதிகரித்தாள். நான் என் மனைவி மக்களை அழைத்துக் கொண்டு வந்து ஒரு மாதமாவது தங்க வேண்டுமென்றாள்.
பார்வதி இதை ஆமோதித்ததாகத் தெரிய வில்லை. ஆனால் மிகவும் சந்தோஷத்து டனேயே காணப்பட்டாள். அவளுடைய நடத்தையில், ஒரு விசேஷ பரபரப்பு இருந்தது. அடிக்கடி என் தேவைகளை கவனித்க் கொண்டிருந்தாள். பலமுறை நான் இருக்கும் பக்கம் வந்து பேசுவதற்கு முயன்றாள். லக்ஷ்மணனும் மீனாக்ஷி அம்மாளும் இல்லாத சமயங்களில் இந்த முயற்சியை அவள் மேற் கொண்டதை அறிந்தேன்.
அவளைப் பற்றி எனக்கு ஏற்பட்ட வியப்பு கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பாக மாறும்போல் இருந்தது. கூடிய மட்டும் லக்ஷ்மணன் கூடவே பேசிக்கொண்டிருந்து நாளை கழித்த விட்டேன்.
மாலை ரயிலுக்குப் போவதற்கு வண்டி கொண்டு வருவதற்காக லக்ஷ்மணன் போய்விட்டான். நானும் வருகிறேன் என்று சொன்னதை அவன் கேட்கவில்லை. அன்று மீனாக்ஷிஅம்மாள் அவசரமாக என் குழந்தை களுக்காக செய்த பக்ஷணங்களை பார்வதி கட்டி வைத்துக் கொண்டிருந்தாள். மீனாக்ஷி அம்மாள் ரேழி அறைக்கு வந்து என்னுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
'எல்லாரையும் கேட்டதாகச் சொல்லு. அவளைக் கட்டாயம் அழைச்சுண்டு வா. உடம்பைப் பார்த்துக் கொள்ள சொல்லு என்று வழக்கமான புத்திமதிகளை சொல்லிக் கொண்டிருந்தாள்.
பார்வதி வந்தாள். 'அம்மா, அடுப்பிலே எண்ணெய் தீய போறது' என்றாள். மீனாக்ஷிஅம்மாள் உள்ளே விரைந்தாள்.
பார்வதி என்னைப் பார்த்துக் கொண்டு பாதியிலேயே நின்றாள். அடுப்பிலிருந்த எண்ணெயை அவளே கவனித்திருக்கலாமே என்று எனக்குப் பட்டது. என்னிடம் ஏதோ சொல்லப் போகிறாள் என்று எனக்கு என் மனம் எச்சரித்தது. புறப்படும் சமயத்தில் நாடக ரீதியில் ஒன்றும் நிகழ்ந்து விடக்கூடாது என்ற உறுதியில் நான் எழுந்து வாசலுக்குச் செல்ல முயன்றேன்.
'உட்காருங்களேன்; அவர் வந்துவிடுவார். இப்பொ உங்களோடே கொஞ்சம் பேசணும்'. இந்தத் துணிகரமான சொற்களைக் கேட்டுத் திடுக்கிட்டேன். என் ஆச்சரியம் கோபமாக மாறிற்று. இரண்டு நாட்களாக அடக்கி வைத்திருந்த ஆத்திரம் முழுவதும் வெளிப்பட்டது.
''தெரியும் அம்மா, பார்வதி, ரொம்ப புத்திசாலித்தனமான விஷயம். என்னோடே தனியாப் பேசணும்னு நீ ஆசைப்படுவது ரொம்ப தெளிவாய்த் தெரிகிறது. இவ்வளவு கேவலமான நடத்தையை உன்னிடம் நான் எதிர்பார்க்கவில்லை. நான் இங்கே வந்தது என் தவறு. ஆனால், அன்பை அள்ளிக் கொடுக்கும் உத்தமமான லக்ஷ்மணனுக்கு துரோகம் செய்ய நீ நினைத்தால் அதற்கு என்னை உடந்தையாக்க வேண்டாம். உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளத் தவறியது என் அதிர்ஷ்டம் என்று இப்பொழுது தான் தெரிகிறது. இனிமேல் இந்த வீட்டுப் பக்கம் நான் வரப் போவதில்லை. சீ! ஒரு கல்யாணமான பெண்ணுக்கு இவ்வளவு..'
ரிக்ஷா வரும் சத்தம் கேட்டது. என் வெறுப்பை வார்த்தைகளில் கொட்டிவிட்டு அறையைவிட்டு வெளியேற முயன்றேன். என் திகைப்பு பயமாக மாறும் முறையில் பார்வதி குறுக்கே நின்றாள்.
''எல்லாம் சொல்லியாச்சா? நான் சொல்ல வந்ததை சொல்லிவிடுகிறேன். ரெண்டு நாள் உங்களிடம் ஒன்று சொல்ல நினைத்தது உண்மைதான். அது என்ன தெரியுமா? நான் என் கணவருடன் சந்தோஷமாயிருக்கிறேன். எனக்கு ஒரு குறையுமில்லை என்பதுதான் குழந்தையில்ல என்பது அம்மாவுக்கு குறையாகத்தான் இருக்கும். என் மட்டில் சந்தோஷமாகவே இருக்கிறேன். என்னைப் பற்றி வேறு விதமாக நினைக்க வேண்டாம் என்று சொல்லத்தான் வந்தேன். அதற்குள் என்ன விபரீதப் பேச்சு! புருஷாள் வழக்கந்தானே! கடைசியில் வாக்குக் கொடுத்தீர்களே, இனிமேல் இங்கே வருவதில்லைன்னு அதைக் காப்பாற்றுங்கள்! அதுவே எனக்கு செய்யற பெரிய உபகாரம்!' பழைய பதுமை ரூபத்திலேயே பார்வதி நின்றாள். வார்த்தைகள் ஒலித்தனவே ஒழிய உதடுகூட அசையவில்லை.
நான் ஸ்தம்பித்து நின்றுவிட்டேன். தேவதை போல் தோன்றிய பார்வதியின் காலில் விழுந்து நமஸ்காரம் செய்ய வேண்டுமென்று தோன்றிற்று. என்னுடைய சிறுமையை உணர்ந்து வருந்த நேரம் கிடைக்கவில்லை. வண்டி வந்துவிட்டது. லக்ஷ்மணன் உள்ளே வந்தான். மீனாக்ஷிஅம்மாளிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டேன்.
'கட்டாயம் மாமியையும் குழந்தைகளையும் அழைச்சிண்டு வரணும்' என்று கலகலப்புடன் பார்வதி சொன்னது எனக்கு குழப்பத்தை அதிகரித்தது. வாசலில் ரிக்ஷா காத்துக் கொண்டிருந்தது.
*****
சிட்டி மீனாக்ஷி அம்மாள் ரொம்பவும் நல்லவள். அவளுடைய மனப்பான்மையில் பொறாமையோ சந்தேகமோ கிடையாது. அன்பு நிறைந்த அவளுடைய சம்பாஷணை அவளை வெகுளி என்...
சுருக்கமாக 'கோனார் கம்பெனி' என்று சொல்லப்படும் அய்யனேரி ஜெகநாதன் முதலாளியின் 'கிருஷ்ணா மேச் ஒர்க்ஸ்' என்றால் சுற்றுவட்டாரத்தில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு என்றாலும் பிரதான மான காரணம் பெரிய கம்பெனி, சொந்த லைசென்ஸ், சொந்த லேபில், சொந்த லாரிகளில் ஏற்றி வடமாநிலங்களில் சொந்தமாக விற்பது இவைபோக, தன் கம்பெனியில் வேலை செய்கிறவர்களுக்கு மற்ற கம்பெனிகளைவிட நிறையப் பணம் அட்வான்ஸாகக் கொடுப்பது, கிருஷ்ணா மேச் ஒர்க்ஸில் மருந்து முக்குகிற வேலை என்பது பெரிய ஒசத்தியான வேலை இல்லா விட்டாலும், மோசமான வேலை என்றும் சொல்லிவிட முடியாது. நான்குமுழத் துண்டை மட்டும் இடுப்பில் கட்டிக் கொண்டு மேலெல்லாம் விளக்கெண்ணெய் தடவியதைப் போல் வியர்வை நசநசப்பில், உருகும் மெழுகடுப்பின் வெக்கையில் நின்று தீப்பெட்டிக் கட்டைகளை மெழுகில் தோய்த்து எடுத்து எதிரே நிற்பவனிடம் லாவகமாக விட்டெறிவது கருப்பசாமிக்கு எட்டு வருடமாகக் கைவந்த கலை. 'புது மாப்பிள... கட்டயக் கொஞ்சம் மெதுவா விட்டெறிங்க. இன்னும் நாலு நாள்தான் இருக்கு. பெறகு ஒங்க வீரத்த எங்க காட்டணுமோ அங்க காட்டுங்க.'
'மாடசாமியண்ணே, இன்னும் பத்து நாளைக்குத்தான் அய்யா சுதாரிப்பு... பெறவு கட்டையத் தூக்கக்கூட சீத்துவம் இருக்காது. நிப்பி நடந்து கிட்டப்போய்த்தான் கட்டையக் கையில வாங்கணும்.'
முனியம்மாளின் பேச்சில் சுற்றிலும் உட்கார்ந்திருந்த அத்தனை பெண்களும் முகத்தை அண்ணாந்து வைத்துக் கொண்டு சிரித்தார்கள். அத்தனைபேர் வாயிலும் பான்பராக். ஃபோர்மேன் வேல்சாமியின் கீழுதடு துருத்திக் கொண்டிருந்தது. கணேஷ் போயிலை வாயை இறுக்கிப் பூட்டி இருக்க... உதட்டைக் கடித்துக்கொண்டு சிரித்தான்.
'பொண்ணு பேரு மாரியம்மாளாம்... தெரிமில்ல... இருக்கங்குடி மாரியாத்தா, அப்படியே வெளையாடி விட்ருவா வெளையாடி... கருப்பசாமியெல்லாம் மாரியத்தாளக் கண்டா காத வழிக்கு ஓடணும்.'
வாசலில் கருப்பசாமியின் அய்யாவும் அம்மாவும் தலை காட்டியவுடன் கட்டை எறிவதை நிறுத்திவிட்டு ஓடினான். இடுப்பில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து மேலெல் லாம் வழிந்த வியர்வையைத் துடைத்தான். முதலாளியின் அறையை எட்டிப் பார்த்து விட்டு அய்யாவை நோக்கிக் கையசைத்தான்.
அய்யாவின் கையில் பெரிய எவர்சில்வர் தட்டில் தாம்பூலமும் பழவகைகளும் நடுவே பத்திரிகையும் இருந்தது.
'வாங்க, வாங்க... இதெல்லாம் எதுக்கு? பத்திரிக மட்டும் கொண்டாந்தாப் போதாதா?'
'ஏதோ எங்களால ஏண்டது.'
'சரி, ரொம்ப சந்தோஷம்! அப்ப நம்ம கம்பெனிக்கு புதுசா ஒரு ஆள் வேலைக்கு வருது.'
'நம்ம கம்பெனிக்குத்தான் மொதலாளி வருவா! நம்ம கம்பெனிய விட்டுட்டு வேற எங்க போவா?'
'பரிசம் போடப் போறன்னைக்கு ராத்திரிக்கு வேன் வேணும்னு கருப்பசாமி சொன்னான். எப்பிடி முடிவு பண்ணியிருக்கீக!'
''ராத்திரி போயி பரிசம் போட்டுட்டு, ராத்திரியே நாங்க திரும்பிருவம், காலைல பொண்ணை அழைச்சிட்டு அவங்க இங்க வந்திருவாங்க.'
'அது அவுக பொறுப்பு மொதலாளி. பொண்ணு வேல பாக்கிற கம்பெனி மொதலாளி வேன் தாரம்னு சொல்லியிருக் காராம்!'
'அப்படியா.. அப்பனாச் சரி'
தீப்பெட்டி கம்பெனிகளுக்குத் தேவையான குச்சி மூட்டைகள், அட்டைக் கட்டுகள், பண்டைல்கள் ஆகியவற்றை ஏற்றிச் செல்லும் சின்ன லாரி--மாடல் வேன். மேலே மட்டும் தார்ப்பாயால் மூடப்பட்டிருந்தது. மாப்பிள்ளை யின் அம்மா பரிசப் பெட்டியுடன் வேனின் நடுவில் உட்கார்ந்திருந்தாள். சுற்றிலும் பெண்கள், ஊரில் உள்ள சில முக்கியஸ் தர்கள். மாப்பிள்ளையின் அய்யா, டிரைவரின் பக்கத்தில் உட்கார்ந்து வழிகாட்டிக் கொண்டிருந்தார். கரடுமுரடான பாதையில் வேன் குலுங்கிக் குலுங்கிச் சென்றது. ரோட்டின் இரு பக்கங்களிலும் நீண்டிருந்த வேலிக் கருவேல மரக்கொம்புகள் தார்ப்பாயில் உரசும் போதெல்லாம் பெண்கள் தலையைக் குனிந்து கொண்டார்கள். தூரத்தில் சில தெருவிளக்குகள் எரிவது அரிச்சலாய் தெரிந்து பின்னர் துணிப்பாய்த் தெரிந்தன. வேன் ஊரை நெருங்க நெருங்க ஸ்பீக்கர் அலறும் சத்தம் பெரியதாகிக் கொண்டே வந்தது.
பெண்ணின் வீடு ஊரைவிட்டுத் தனியே உள்ள காலனியில் இருந்தது. முற்றத்தில் நிறையப் பேர் கூடியிருந்தார்கள். ஏழெட்டு டியூப் லைட்டுகள் எரிவது ரொம்ப வெளிச்சமாக இருந்தது. எல்லோருமே இவர்களை எதிர்பார்த்துதான் காத்திருந் தார்கள் போலும். வேனில் வந்தவர்கள் எல்லோரும் கூட்டமாக நடக்க... பரிசப் பெட்டி நடுவீட்டில் இறக்கி வைக்கப்பட்டது. வெளியிலிருந்து ஒரு சத்தம் அதட்டலாகக் கேட்டது.
'என்ன.. இன்னும் உக்காந்துட்டு இருக்கீக? நேரங் காணாதா? வந்தவங்களுக்கு சட்டுப்புட்டுனு சாப்பாட்டப் போடுங்க. வள்ளியம்மா எங்கே போன... ஊரைச் சத்தங்காட்டு, பத்துமணிக்கு கரண்டப் புடுங்குனாலும் புடுங்கியிருவான். பெறவு இருட்டுக்குன்ன கெடத்து சீரழியணும்.'
அந்த அதட்டல் மூலமே தான்தான் இந்த ஊரில் நாட்டாண்மை என்பதை எல்லோருக் கும் காட்டியவர், முற்றத்தில் விரித்திருந்த பாயில் சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டார்.
'எம் மக மாரியம்மாளுக்குப் பரிசம் போடப் போறம் வாங்க. வாங்க.' என்று வீடு தவறாமல் சொல்லிக்கொண்டு தெருவழியே போனாள் வள்ளியம்மாள். முற்றம் நிறைந்து விட்டது. அநேகமாக சாப்பாடும் முடிந்து விட்டது.
பொண்ணோட தாய்மாமன் எங்கய்யா, இங்கவா... இப்பிடி முன்னால வந்து உட்காரு. அங்க நின்னா எப்பிடி? பொண்ணோட அய்யா, மாப்பிள்ளையோட அய்யா ரெண்டுபேரும் இப்பிடி ஓரத்துல வாங்க. யேய் பொம்பளைகளா, இப்ப பேசாம இருக்கப் போறீகளா என்ன.. சலசலன்னு பேசாதிக!'
நாட்டாண்மையின் சத்தம் கூட்டத்தில் பலமாகக் கேட்டுக் கொண்டேயிருந்தது. பரிசப் பெட்டி, பழத்தட்டு, வெற்றிலைக்கட்டு, பரிசச்சேலை எல்லாம் நாட்டாண்மையின் முன்னால் வைக்கப்பட்டன. கூட்டம் வட்டம் சுற்றி நிற்க, வீட்டுக்குள் மணப்பெண்ணும் இன்னும் சில பெண்களும் மட்டுமே இருந்தார்கள். முற்றத்தில் பேசுகின்ற எல்லாப் பேச்சுக்களும் வீட்டுக்குள்ளும் தெளிவாகக் கேட்டன.
'எங்க வள்ளியம்மாளக் காணும்? என்ன வள்ளி.. ஊரு பூராவும் சொல்லிட்டயா? வேற யாரு வீடும் பாக்கியிருக்கா... இப்ப ஆரம்பிக்கலாமா?'
'எல்லா வீடும் சொல்லியாச்சு. இனி நீங்க செய்ற மொறையச் செய்ங்க.'
'எதுக்கும் ஒரு வார்த்த கேட்டுக்கிறணுமில்ல... பெறகு ஏங்கிட்டச் சொல்லல, ஒங்கிட்டச் சொல்லலனு ஆவலாதி வரப்படாதில்ல.'
'அதெல்லாம் சொல்லியாச்சு நீரு ஆரம்பியும்.'
'சரி, பரிசம் எவ்வளவு போடுறீக?'
'பரிசம்.. நாங்க என்ன புதுசாவா போடப் போறம்? ஊரு வழக்கப்படிதான்.'
'ஊரு வழக்கப்படியா! எங்க ஊரு வழக்கம் ஐயாயிரத்து ஒண்ணு'
'எங்க ஊர் வழக்கம் பதினொண்ணு'
'அது ஒங்க ஊர்ல வாங்கிக்கோங்க! பொண்ணு எங்க ஊர் பொண்ணு... எங்க ஊர் வழக்கப்படிதான் நீரு பரிசம் போடணும். எடும் ஐயாயிரத்து ஒண்ணை.. எண்ணி வையும் இப்பிடி..'
'.....'
'என்ன பேச்சுமூச்சுக் காணும்? யார்ட்ட வந்து வண்டிய விடுறீரு? பொண்ண அழைக்க வந்தா, பேசாம சோறு சாப்பிட்டுட்டுப் போவிரா, பரிசம் பதினொண்ணாம்!'
கூட்டம் கெக்கெலி போட்டுச் சிரித்து மகிழ்ந்தது.
மாரியம்மாள் தலைகுனிந்து உட்கார்ந் திருந்தாள். மீண்டும் நாட்டாண்மையின் அதட்டல் பலமாகக் கேட்டது.
'சொல்லுங்கய்யா.. சம்பந்திக ரெண்டு பேரும் இப்பிடி வாய மூடிக்கிட்டு ஒக்காந்திருந்தா எப்பிடி? பரிசம் எவ்வளவுய்யா பேசிக்கிட்டீக!'
'பரிசம் நூத்தியொண்ணு போட்ருவம்'
'நூத்தியொண்ணா.. மாரியம்மா வாரத்துக்கு நானூறு ரூவா சம்பவளம் வாங்குவாயா.. புள்ள வேலைக்காரப் புள்ள... ஒமக்கு யோகம்னு வச்சிக்கோரும்.'
'பொண்ணோட அப்பன் என்னய்யா சொல்றான்?'
'பரிசம் அவுக போடுறதப் போடட்டும்.'
'அப்பச் சரி. பரிசம் நூத்தியொண்ணு'
'ம்..வேற சீருசெனத்தி என்ன பேசிக்கிட்டீக?'
'பொண்ணுக்கு கம்மல்-மூக்குத்தி மட்டும் தான். பவுனு கிவுனு எல்லாங் கெடையாது. இன்னக்கி லேசா சொல்லீறலாம். பெறகு போடணுமில்ல?'
'சரி வேற ரொக்கம் ஏதும் உண்டா?'
'அதெல்லாம் கெடையாது, நாங்க பேசிக்கிறல.'
'சரி, பையனுக்கு தலத்தீபாவளிக்கு என்ன செய்யப் போறீக?'
'தலத்தீபாவளிக்கு வேட்டி துண்டுதான். மோதிரமெல்லாங் கெடையாது. வசதி இருந்தா நாங்களா செய்வம். ஆனா பேச்சுக் கிடையாது!'
'அது ஒங்க பிரியம்!'
'சரி, அப்ப பரிசம் வெளம்பிரலாமா? வேற எதும் கேக்கிறதுனா கேளுங்க.'
எல்லாப் பேச்சுகளையும் கேட்டுக்கொண்டு மாரியம்மாள் பொம்மையாக உட்கார்ந்தி ருந்தாள். பெண்கள் கசமுசவென்று பேசிக் கொண்டிருந்தார்கள். நாட்டாண்மை ஒவ்வொரு பொருளாக வெளியே எடுத்து வைத்தார். பரிசச் சேலையை எடுத்து தாம்பூலத்தின் மேல் வைத்தார்.
'இம்புட்டுப் புள்ளையிலிருந்து இன்னக்கு வரைக்கி கருமருந்தத்தின்ன புள்ளைய படுபாவி, கம்மல் - மூக்குத்தியோட அனுப்பறான்.'
'அதுக்கென்ன செய்ய முடியும்? இவ ஒருத்திதான் வேல செய்யிற வயது. மத்ததெல்லாம் நண்டும் நசுங்கலுமா இருக்கு. அவுக அப்பன் என்ன செய்வான்?'
'இந்தக் கம்மல்-மூக்குத்திகூட கம்பெனியில அட்வான்ஸ் வாங்கி அவளாச் செஞ்சது... இல்லன்னா அதுங் கெடையாது!'
'மாரியம்மா வேலைக்காரப்புள்ள! விடிஞ்சு போனா, அடஞ்சுதான் வருவா. மத்த புள்ளக மாதிரி வாய்கூடப் பேசமாட்டா. அப்புராணிப் புள்ள.'
'பொட்டக் கழுதயாப் பெறக்கவே கூடாதுக்கா.. இனி அங்கேயும் போயி கருமருந்தத் தின்னுதான் சீரழியணும்!'
'அட்வான்ஸ் ரூபாகூட இனியும் மூவாயிரம் பாக்கிருக்குனு பேசிக்கிட்டாக.'
'யே, பொம்பளைகளா, இப்ப பேசாம இருக்கப் போறீகளா என்ன? ஓலப்பாயில நாயி மோண்டாப்ல... சலசலன்னு என்னதான் பேசுவீகளோ?'
மீண்டும் நாட்டாண்மையின் கூப்பாட்டில் கூட்டம் அமைதியானது. மாரியம்மாள் மட்டும் பொம்மையாக வீட்டுக்குள் உட்கார்ந் திருந்தாள். 'சரி, அப்ப, பரிசம் வெளம் பிரலாமா, வேற எதும் கேக்கணுமின்னா சம்பந்திக கேட்டுக்கோங்க!'
பெண்ணின் அய்யா வேகமாக எழுந்து மாரியம்மாளிடம் போனார். இவர் ஏதோ கேட்க மாரியம்மாள் தலையாட்டினாள். வேகமாக வந்து உட்கார்ந்து நாட்டாண்மை யிடம் ஏதோ சொன்னார்.
'இதுக்குத்தான் திரும்பத் திரும்பக் கேட்டுகிறது! பொண்ணு வேலைபாத்த கம்பெனியில அட்வான்ஸ் ரூவா மூவாயிரம் பாக்கியிருக்காம். அத மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஏத்துக்கிறனும்னு சொல்றாரு.'
'அப்ப பொண்ணுக்கு நாங்க ரொக்கம் குடுக்கணுமிங்காரா?'
'அது ஒங்கபாடு. அவரு சொல்லிட்டாரு. ஒங்களுக்கு முடியுமா முடியாதானு மட்டும் சொல்லுங்க!'
'நீரென்ன கையிலருந்தா எண்ணப் போறீரு? அங்க போயி கம்பெனிக்குத்தானே போகப் போறா.. அந்தக் கம்பெனில வாங்கி அவ குடுப்பா.. பெறவு அவ வேலைசெஞ்சு கழிப்பா..!'
'கிழிப்பா! நல்லாயிருக்கே ஒம்ம பேச்சு.. அவ வாங்கி எங்கிட்டக் கொடுப்பா.. ஒங்க கடன நீங்கதான் தீக்கணும். இன்னக்கு அட்வான்ஸ் வாங்கிக் குடும்பீரு... பெறகு நாளைக்கி சம்பளத்தக் கேப்பீரு.. நாங்க பொண்ணக் கூட்டிட்டுப் போயி சட்டி எடுத்திட்டுப் போகவா?'
'சரி முடியாதுனு சொல்லிட்டிகள்ள, அந்த மானிக்கு அந்தப் பேச்ச விடுங்க.'
கூட்டத்தில் ஒரு சத்தத்தைக் காணோம். அத்தனை பேச்சுகளையும் கேட்டுக் கொண்டு மாரியம்மாள் பொம்மையாக உட்கார்ந் திருந்தாள். நாட்டாண்மை பரிசம் விளம்பினார்.
'ஓகோ ஒறவுமுறையாரே, தோட்லாம்பட்டி கருப்பையா மகன் கருப்பசாமி, திட்டங்குளம் பேச்சிமுத்து மக மாரியம்மாளுக்கு பரிசம் போட வந்திருக்கான்.'
'அப்பிடியா என்னென்ன கொண்டாந் திக்கான்?'
'ஏழு கெட்டு வெத்தல வந்திருக்கு.'
'யே...ம்'
'ஏழாயிரம் பாக்கு வந்திருக்கு.'
'பெறவு?'
'ஏழு வண்டி பழவர்க்கம் வந்திருக்கு.'
'யேம்... ம்'
'மஞ்சளும் குங்குமமும் வந்திருக்கு.'
'பெறவு என்ன வந்திருக்கு.'
'எட்டுக் கூடையில பூ வந்திருக்கு?'
'யே.. ம்.'
'எட்டூரு ஆளும் எட்டு வண்டியும் வந்திருக்கு.'
'யே...ம்... அம்புட்டுத்தானா வேற ஒண்ணும் வரலையா?'
'பத்தாயிரம் ரூவாய்க்குக் காஞ்சிபுரம் பட்டும், பட்டுப் பாவாடையும், பட்டு ரவிக்கையும், பத்தாயிரத்தி ஒண்ணு பரிசப் பணமும் வந்திருக்கப்பா.'
'யே...ம். அதச் சொல்லும்.'
பரிசச் சேலை இருந்த தட்டை எடுத்து பெண்ணின் தாய் மாமனிடம் கொடுத்தார் மாப்பிள்ளையின் அய்யா. கூட்டத்தில் எல்லோரும் தொட்டுக் கும்பீட்டு கடேசியாய் வீட்டுக்குள் போனது. வாசலை மறைத்து இரண்டு மூன்று பெண்கள் நின்று கொண்டார்கள். ஒருத்தி ஓடிப்போய் ஜன்னலைப் பூட்டினாள். கூட்டம் பழைய படியும் கசாமுசா வென்று பேச ஆரம்பித்தது. பேச்சோடு பேச்சாக நாட்டாண்மை கேட்டார்:
'தாலி கட்டுக்கு பெண்ண அழைச்சிட்டுப் போறதுக்கு என்ன ஏற்பாடு?'
'பொண்ணு வேல செய்யிற கம்பெனி மொதலாளி வேன் தாரம்னு சொல்லியிருக் காராம். அதனால மாப்ள வீட்லருந்து வண்டி வர வேண்டாம்னு சொன்னாக.'
'அப்படியா, அப்பனா நல்லதாப் போச்சு! காலைல இங்க இருந்தே கெளம்பி வந்துரலாம். ஒங்கள எதிர்பாக்க வேண்டிய தில்லை!'
'கம்பெனி மொதலாளிக்கு ரொம்ப வருத்தம், புள்ள வேலக்காரப்புள்ள, கைச்சூட்டிகையான புள்ள, ஒரு நாளைக்குக்கூட வீட்ல இருக்க மாட்டா. கம்பெனியிலேயே வேலையில் இவதான் ஃபர்ஸ்ட். போனஸும் இவதான் ரொம்ப வாங்குவா.'
'அங்கயும் கம்பெனி பெரிய கம்பெனி - கப்பல் போல. வேல செய்யத்தான் கெதி வேணும். மொதலாளியும் தங்கமான மனுசரு!'
சில பெண்கள் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார்கள். எதற்காகவோ காத்திருப்பது போல் கூட்டம் மெளனமாக இருந்தது. நாட்டாண்மை மீண்டும் அதட்டல் போட்டார்.
'என்ன... பொம்பளகளா இன்னுமா சேல கெட்றா?'
'முடிஞ்சது... முடிஞ்சது ஆரம்பிங்க.'
'ஓகோ ஒறவுமொறையாரே.. தோட்னாம்பட்டி கருப்பையா மகன் கருப்பசாமி, திட்டங்குளம் பேச்சிமுத்து மக மாரியம்மாளுக்கு மஞ்சனை வைக்கான்.. மஞ்சனை வைக்கான்!'
'அப்பிடிச் செய்.. அப்பிடிச் செய்.. அப்பிடிச் செய்'
'கொலவ போடுங்க பொம்பளைகளா.. வேடிக்க பாக்க மட்டும் வந்திருங்க, வாயத் தொறந்துறாதிக.'
'இப்ப உள்ள கொமரிக எவளுக்கு கொலவ போடத் தெரியும்!'
மாரியம்மாள் பரிசச்சேலை கட்டி பொம்மை யாக முற்றத்துக்கு நடந்து வந்தாள். கும்பிட்டு எழுந்தாள். பொம்மையாக வீட்டுக்குள் போய்விட்டாள். வெற்றிலை பாக்கு, பூ, சந்தனம், சாக்லெட் வாங்கக் கூட்டம் முண்டியடித்தது. கூட்டம் போட்ட சத்தத்தில் வேன் கிளம்பிப் போன சத்தம் மெதுவாகக் கேட்டது.
கல்யாணம் முடிந்த மூன்றாம் நாள் மாரியம்மாள் புதுக் கம்பெனிக்குள் புகுந்தாள். தான் ஊரில் வேலை பார்த்த கம்பெனியைவிடப் பெரிய கம்பெனி. நிறையப் பெண்கள் வரிசை வரிசையா, சுவரில் எங்கே திரும்பினாலும் ஸ்பீக்கர். தான் புகுந்தவீடு மிகப் பெரிய வீடு என்று நினைத்துக் கொண்டாள். பலகையில் உட்கார்ந்து முன்னால் தீப்பெட்டிக் கட்டையைப் படுக்க வைத்துக் கிளிப்பைப் கழட்டி இரண்டு சக்கைகளில் குச்சிகளை உருவி பெட்டியில் அடைத்தாள். ஒவ்வொரு சக்கையை உருவும்போதும் தன் கை நிறையப் போட்டிருந்த கண்ணாடி வளையல்கள் சிலுக் சிலுக்கென்று சத்தம் எழுப்பியது எரிச்சலாக இருந்தது. கைக்கு இரண்டு வளையல்களை மட்டும் விட்டுவிட்டு மீதியைக் கழட்டிச் சுவரோரம் வைத்தாள். குச்சியை உருவுவதற் காக குனிந்தபொது கழுத்தில் புதிதாக தொங்கிய மஞ்சள் கயிறு உஞ்சலாடியது. அதை எடுத்து முன் ஜாக்கெட்டுக்குள் இறுக்கித் திணித்துவிட்டுத் தலைநிமிர்ந்தாள். எதிரே கணக்கப்பிள்ளை நின்றுக் கொண்டிருந்தார்.
'என்ன.. கருப்பசாமி கல்யாணமாகி மூணு நாளாகுது. இன்னும் ஒம் பொண்டாட்டி கையில வளையல் அப்பிடியே அலுங்காமக் கெடக்கு!' பெண்கள் எல்லோரும் சிரித்தார்கள். மாரியம்மாளால் சிரிக்க முடியவில்லை. திரையிட்ட கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வாசலைப் பார்த்தாள். மாரியம்மாளின் மாமனார் முதலாளியின் ரூமுக்குள் போய்க்கொண்டு இருந்தார். அட்வான்ஸ் பணம் வாங்குவதற்காக!
****
சோ. தர்மன் சுருக்கமாக 'கோனார் கம்பெனி' என்று சொல்லப்படும் அய்யனேரி ஜெகநாதன் முதலாளியின் 'கிருஷ்ணா மேச் ஒர்க்ஸ்' என்றால் சுற்...
பெருமாள் முருகன்
என்னக்கா அடுப்புல பொவையுது ? '
'காப்பித்தண்ணி வாத்தியாரு '
'அப்படியே எனக்கும் ஒரு கிளாசு குடுக்கா '
'கட்டல்ல உக்காரு வாரேன் '
'பாலூத்தீட்டு வந்தாச்சா ? '
'இப்பத்தான் வந்தன். எந்தப் பாலிருக்குது. சனியனுவ ஆனையாட்டம் தீனிதான் திங்குவ. குர்குர்ரென்னு கறக்குதா. இந்த ஈத்தோட எருமய வித்துப்புடறேன் '
'ஆமா. வித்துப்புட்டு வேறொண்ணு நல்லதா வாங்கிக்குங்க.... அட அட... வெள்ளாட்டுக்குட்டி ஊட்டுக்குள்ள போவுது பாருக்கா. '
'உஸ்... உஸாய்... இதுவ இப்பத்தான் மனசன ஒரு பக்கம் நிக்க உடுதா. காட்டுல போயில் மேயறது. ஊட்லதான் கொட்டி வச்சிருக்குதாமா ? '
'குட்டிவ தாம் பெருசாயிருச்சே ஏக்கா குடுத்திர்றீங்களா ? '
'இப்ப என்ன. இன்னுரு எட்டுக்கு இருக்கட்டும் வாத்தியாரு. '
'ரண்டும் கெடாக்குட்டிவ தான. ஒடையடுச்சு உட்டாச்சா. '
'ஆரு ஒடையடிச்சா. சும்மாத்தான் திரியுதுவ '
'ம்க்கும். அப்ப இது தானக்கா தரணம். இன்னமே வெச்சிருந்தா குட்டி ஒடஞ்சு போய்ராது. வெள்ளாட்டு மேல உழுந்துதுன்னா அவ்வளவுதான். நஞ்சு போயிரும். சொல்லுக்கா பாப்பம் '
'இங்க எந்த வெள்ளாட்டு மேல போயி உழுவுது. அவுத்துடறம். மேஞ்சதியும் புடிச்சுக் கட்டிப்புடறம். இருக்கட்டும் '
'மேச்சலுக்குப் போறப்ப பாத்துக்கிட்டேவா இருப்பீங்க ? ரண்டுதரம் வெள்ளாட்டு மேல உழுந்துதுன்னா ஒரு நூறு ரூவா போயிரும். '
'எங்க போவுது வாத்யாரு. இன்னம் வெள்ளாட்டுல பாலூட்டுதுவ '
'வெள்ளாடு பயராயிருச்சா ? '
'அதென்னமோ இந்த ஈத்து இன்னம் பயராவக் காணாம் '
'அப்ப வெள்ளாட்டையும் சேத்திக் குடுத்தர்ரது ? செனையோட வேற ஒண்ணு வாங்கிக்கலாமில்ல ? '
'ம்... இன்னொரு மாசங் கழிச்சுத்தான் பயராவட்டுமே. நாலு ஈத்தாச்சு. எப்பேர்ப்பட்ட வம்சம். இது மாதிரி வருமா வெள்ளாடு ? '
'அப்ப வெச்சிருங்க. குட்டிய வித்துப்புட்டா சீக்கிரம் பயரயிரும். இன்னம் பாலூட்டிக்கிட்டிருந்தா எப்படி பயராவும் ? '
'பாலூட்டப் பாலூட்டவே பயராயிரும். இந்த ஈத்துத்தான் என்னமோ இன்னுங் காணாம் '
'அத்தப்ப கவுண்ட்ரூட்டு வெள்ளாடு இப்படித்தான் பயராவாதயே கெடந்துது. குட்டிய வித்தொடன நாலே நாளுல பயராயிடுச்சுக்கா '
'கல்லாக்காட்டு அத்தப்ப கவுண்ட்ரூட்டுதா ? '
'ஆமாக்கா. அந்தக்கா கூட பாலூட்டற குட்டிய எங்க விக்கிறதுன்னுது. நாந்தாஞ் சொல்ச்லி வாங்கினே '
'ம்.. செரி பாரு இந்தக் குட்டிவளத்தான். எவ்வளவு வருமுன்னு பாப்பம் '
'நேத்துப் பையன் மேய்க்கும்போது புடுச்சுப் பாத்தன்; குட்டிவ பரவாயில்ல. ஒரு அளவுக்குப் 'புடி ' இருக்குது. வெலச் சொல்லுங்க '
'நானென்னத்தச் சொல்றது. நீ கேளு வாத்யாரே '
'அதெப்டாக்கா. நீ சொல்லாத நாங் கேக்கறது. ஒரு வெலச் சொன்னா, படிஞ்சா மேல கேக்கலாம் '
'செரி தொளாயரம் குடு '
'என்னக்கா இது. குடுக்கற மாதிரி சொல்லுங்க. ரண்டும் பூங்குட்டிவ. பாலூட்டற குட்டிவள இந்த வெலைக்கு வாங்கி நா மொதலு பண்ண வேண்டாமா ? '
'அந்த வெலைன்னா குடுக்கறது. இல்லன்னா எட்டுக்கு இருக்கட்டும் '
'இன்னொரு எட்டுக்கு வெச்சிருந்தா மட்டும் எவ்வளவு வந்தரப் போவுது ? செரி. ஒரு குட்டி நல்லா முறுக்கம். ஒண்ணு அந்த அளவுக்கு வராது. கொஞ்சம் உடும். ரண்டுஞ் சேந்து ஏழ்நூறுக்குத் தாக்கா போவும் '
'என்ன வாத்யாரு. கறி கிலோ நாப்பது ரூவா சொல்ற. குட்டிய மட்டும் இப்பிடிக் கேக்கற '
'ஆமாக்கா, குட்டி அஞ்சஞ்சு கிலோத்தான் வரும். தோலு, தல, கொடலு.. இப்படித்தான் சேத்து மொதலு பண்ணோணும். அதும் நாளைக்கு ஞாயித்துக்கெழம. வர்றவங்களுக்கு இல்லைன்னு சொல்லக்கூடாதுன்னு பாக்கறன். ஒரு இருவத்தஞ்சு சேத்தி வெச்சுக் குடுங்க '
'எட்நூத்தி அம்பதுக்குக் கம்மி வராது வாத்யாரே. ஆனா இல்ல. நாட்றாயன், மணி ஆராச்சும் வருவாங்க '
'பத்து ரூவா எச்சுக்க்கம்மி. கையில காச வாங்கிக்கலாம். அவுங்களுக்கெல்லாம் குடுத்தா ஒரு மாசம் ரண்டுமாசம் இழுத்தடிப்பாங்க. நம்மகிட்ட அந்த வேலயே வேண்டாம். கையில காச வாங்கிக்கங்க '
'அதான் சொல்லிப்புட்டன். அதுக்குங் கம்மின்னா இல்ல வாத்யாரு '
'பாதிப்பணம் இப்பவே வாங்கிக்குங்க. நாளைக்குக் காத்தால பாதி. நம்மகிட்ட பாக்கிகீக்கிங்கற பேச்சே இல்ல. ஒடச்சுச் சொல்லுக்கா. எட்நூறுக்குக் கீழ வாக்கா '
'கீழ மேலங்கற பேச்சே வேண்டாம். செரியா எட்நூறு குடுத்துரு. இப்ப ஒரு பேச்சு சொல்லிப்புட்டு பணத்துக்கு அப்பறம் வா. இப்பறம் வான்னு இழுத்தடிக்கக் கூடாது ஆமா '
'ஏக்கா எப்பவாச்சும் நா அப்படிச் செஞ்சிருக்கறனா. சொன்னாச் சொன்னதுதான். சந்தேகம். கையில காசக் குடுத்துட்டுக் குட்டிய புடிச்சுக்கறேன். போதுமா. ஒரே வெல எழுநூத்தி அம்பது. அதுக்கு மேல போவாதுக்கா. புடி காச '
'இல்ல வாத்யாரு. இருக்கட்டும். அவுங்கப்பன் வந்தா சண்டக்கட்டுவாரு. இந்த வெலக்கா குடுத்தீனு '
'எனக்குன்னு சொன்னா மாமன் ஒண்ணுஞ் சொல்ல மாட்டாரு. இன்னக்கி நேத்தா பழக்கம். எத்தன வருசத்துப் பழக்கம். புடாக்கா காச '
'இன்னொரு இருவத்தஞ்சு சேத்திக் குடு வாத்யாரு. கைல பணம் வந்தாத்தான் குட்டிய குடுப்பன் ஆமா '
'எங்காசு எங்கீக்கா போயிருது. உங்கூட்ல இருக்கறாப்பல. செரி, பத்து ரூவா சேத்தி. அரவது புடிக்கா '
'எப்படியும் எட்நூறுக்குப் போவும். வெலய உட்டுத்தான் குடுத்துட்டன் '
'இன்னம் பத்து நாளைக்கு வெச்சிருந்து ரண்டு மூனுபடி சோளம் வெச்சா அது பணமில்லையா, எல்லாஞ் செரியாப் போயிரும். இந்தாக்கா மும்பணம் பத்து ரூவா. முன்னூறு ரூவா போயில் இப்பவே பையன் கிட்டக் குடுத்தனுப்பறன் '
'குடுத்துடு வாத்யாரே. அது இதுன்னு சாக்குச் சொல்லக்கூடாது ஆமா '
'இப்பவே குட்டியப் புடிச்சோரன். நாளைக்குக் கறிக்கு இதுதான். பணத்தப் பத்தி கவலைப்படாதீங்க. இப்பவே போயிப் பையங்கிட்ட குடுத்தனுப்பறன். மீதி ஞாயித்துக்கெழம தாரன். புடாங்க குட்டிய '
***
திருச்செங்கோடு சிறுகதைத்தொகுதி
***
Thinnai 2000 February 13
பெருமாள் முருகன் என்னக்கா அடுப்புல பொவையுது ? ' 'காப்பித்தண்ணி வாத்தியாரு ' 'அப்படியே எனக்கும் ஒரு கிளாசு குடுக்கா ' ...
சி. மணி
தப்பிவிட்டேன் என்று விழித்தேன்.
சுற்றும்முற்றும் பார்த்தேன். மேலே
வானம்; நான்கு பக்கமும் பூவிருள்
கூரை, சுவர்கள் எதுவும் இல்லை.
எல்லாப் பக்கமும் வழிகள் தெரிந்தன.
வெட்டவெளிதான் இது, அறை அல்ல
என்று சிலகணம் துள்ளியது என்மனம்.
மேற்கே நடந்தேன் இடித்தது ஒருசுவர்
தெற்கே நடந்தேன் இடித்தது ஒருசுவர்
வடக்கே நடந்தேன் இடித்தது ஒருசுவர்
கிழக்கே நடந்தேன் இடித்தது ஒருசுவர்
எழும்பிக் குதித்தேன் இடித்தது கூரை.
சி. மணி அறைவெளி தப்பிவிட்டேன் என்று விழித்தேன். சுற்றும்முற்றும் பார்த்தேன். மேலே வானம்; நான்கு பக்கமும் பூவிருள் கூரை, சுவர்கள் எது...
ச.தமிழ்ச்செல்வன்
| இதுதான் ‘சசி’ இயக்கி தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க யதார்த்த படமாகப் பாராட்டப்படுகிற ‘பூ’ திரைப்படத்தின் கதை. 25 ஆண்டுகளுக்கு முன் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய சிறுகதையை அதன் சாரம் கெடாமல் மெருகேற்றி திரைக்கதையாக்கி உயிர் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சசி. வட்டார வழக்கில் எழுதப்பட்டிருக்கிற இக்கதை படிப்பவர் மனதை இன்றும் தைக்கும். ‘இளம் வெயிலும் மிதமான காற்றும் இசைவான கடலலையும் எல்லோருக்கும் வாய்க்க நாம் கதை எழுதுவதுதான் ஒரே வழி’ என்கிற ச.தமிழ்ச்செல்வன், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இப்போது பத்தமடையில் வாழ்கிறார். |
மாரியம்மாளின் ஆத்தாளுக்கு முதலில் திகைப்பாயிருந்தது. இந்த வேகாத வெயில்ல இந்தக் கழுத ஏன் இப்படி தவிச்சுப் போயி ஓடியாந்திருக்கு என்று புரியவில்லை.
‘‘ஓம் மாப்பிள்ளை வல்லியாடி’’ என்று கேட்டதுக்கு ‘பொறு பொறு’ங்கிற மாதிரி கையைக் காமிச்சிட்டு விறுவிறுன்னு உள்ள போயி ரெண்டு செம்பு தண்ணியை கடக்குக் கடக்குன்னு குடிச்சிட்டு ‘ஸ்… ஆத்தாடி’ன்னு உட்கார்ந்தாள்.
‘‘ஓம் மாப்பள்ளை வல்லியாடி?’’
‘‘அவரு… ராத்திரி பொங்க வைக்கிற நேரத்துக்கு வருவாராம். இந்நியேரமே வந்தா அவுக யேவாரம் கெட்டுப் போயிருமாம்.’’
‘‘சரி… அப்பன்னா நீ சித்த வெயில் தாழக் கிளம்பி வாறது… தீயாப் பொசுக்குற இந்த வெயில்ல ஓடியாராட்டா என்ன…’’
‘‘ஆமா. அது சரி… பொங்கலுக்கு மச்சான் அவுக வந்திருக்காகளாமில்ல…’’
ஆத்தாளுக்கு இப்ப விளங்கியது.
அவளுடைய மச்சான் – ஆத்தாளின் ஒரே தம்பியின் மகன் தங்கராசு இன்னிக்கி நடக்கிற காளியம்மங்கோயில் பொங்கலுக்காக டவுனிலிருந்து வந்திருக்கான். அது தெரிஞ்சுதான் கழுத இப்படி ஓடியாந்திருக்கு.
‘‘மதியம் கஞ்சி குடிச்சிட்டு கிளம்பினியாட்டி’’ என்று கேட்டதுக்கு கழுத ‘இல்லை’ யென்கவும் ஆத்தா கஞ்சி ஊத்தி முன்னால் வைத்து குடிக்கச் சொன்னாள்.
உடம்பெல்லாம் காய்ஞ்சு போயி காதுல கழுத்தில ஒண்ணுமேயில்லாம கருத்துப் போன அவளைப் பார்க்கப் பார்க்க ஆத்தாளுக்குக் கண்ணீர்தான் மாலை மாலையாக வந்தது. தங்கராசு மச்சானுக்குத்தான் மாரியம்மா என்று சின்னப் பிள்ளையிலேயே எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். கள்ளன் – போலீஸ் விளையாட்டிலிருந்து காட்டிலே கள்ளிப்பழம் பிடுங்கப் போகிற வரைக்கும் ரெண்டு பேரும் எந்நேரமும் ஒண்ணாவேதான் அலைவார்கள். கடைசிக்கி இப்படி ஆகிப்போச்சே என்று ஆத்தாளுக்கு ரொம்ப வருத்தம். எப்படியெல்லாமோ மகளை வச்சிப் பாக்கணுமின்னு ஆசைப்பட்டிருந்தாள்.
பேச்சை மாற்றுவதற்காக ‘‘அண்ணன் எங்கத்தா’’ என்று கேட்டாள். ‘‘நீங்க ரெண்டு பேரும் வருவீக, அரிசிச் சோறு காச்சணும்னிட்டு அரிசி பருப்பு வாங்கியாறம்னு டவுனுக்கு போனான்.’’ கஞ்சியைக் குடித்துவிட்டு சீனியம்மாளைப் பார்க்க விரைந்தாள் மாரி. சீனியம்மள்தான் மச்சான் வந்திருக்கிற சேதியை டவுணுக்கு தீப்பெட்டி ஒட்டப் போன பிள்ளைகள் மூலம் மாரியம்மாளுக்குச் சொல்லிவிட்டது. சேதி கேள்விப்பட்டதிலிருந்தே அவள் ஒரு நிலையில் இல்லை. உடனே ஊருக்குப் போகணுமென்று ஒத்தக்காலில் நின்றாள். ஆனால், அவள் புருஷன் உடனே அனுப்பி விடவில்லை. நாளைக் கழிச்சுப் பொங்கலுக்கு இன்னைக்கே என்ன ஊரு என்று சொல்லிவிட்டான். அவ அடிக்கடி ஊருக்கு ஊருக்குன்னு கிளம்பறது அவனுக்கு வள்ளுசாப் பிடிக்கவில்லை. அவ ஊரு இந்தா மூணு மைலுக்குள்ளே இருக்குங்கிறதுக்காக ஒன்ரவாட்டம் ஊருக்குப் போனா எப்படி? அவ போறதப் பத்திகூட ஒண்ணுமில்ல. போற வட்டமெல்லாம் கடையிலேருந்து பருப்பு, வெல்லம் அது இதுன்னு தூக்கிட்டு வேற போயிர்றா. இந்தச் சின்ன ஊர்லே யேவாரம் ஓடுறதே பெரிய பாடா இருக்கு. இப்ப கோயில் கொடைக்குப் போணுமின்னு நிக்கா என்று வயிறு எரிந்தான். ஆனாலும், ஒரேடியாக அவளிடம் முகத்தை முறிச்சுப் பேச அவனுக்கு முடியாது. அப்பிடி இப்பிடியென்று ரெண்டு புலப்பம் புலம்பி அனுப்பி வைப்பான்.
இதைப் பத்தியெல்லாம் மாரிக்கு கவலை கிடையாது. அவளுக்கு நினைத்தால் ஊருக்குப் போயிறணும். அதுவும் மச்சான் அவுக வந்திருக்கும்போது எப்பிடி இங்க நிற்க முடியும்?
அவ பிறந்து வளர்ந்ததே தங்கராசுக்காத்தான் என்கிற மாதிரி யல்லவா வளர்ந்தாள். அவள் நாலாப்புப் படிக்கிறபோது தங்கராசின் அப்பாவுக்கு புதுக்கோட்டைக்கு மாற்றலாகி குடும்பத்தோடு கிளம்பியபோது அவள் போட்ட கூப்பாட்டை இன்னைக்கும் கூட கிழவிகள் சொல்லிச் சிரிப்பார்கள். நானும் கூட வருவேன் என்று தெருவில் புரண்டு கையைக் காலை உதறி ஒரே கூப்பாடு. அதைச் சொல்லிச் சொல்லி பொம்பிள்ளைகள் அவளிடம், ‘‘என்னட்டி ஒம் புருசங்காரன் என்னைக்கு வாரானாம்’’ என்று கேலி பேசுவார்கள். ஆனால், அவள் அதையெல்லாம் கேலியாக நினைக்கவில்லை. நிசத்துக்குத்தான் கேட்கிறார்கள் என்று நம்புவாள். ஊர்ப் பிள்ளைகளெல்லாம் கம்மாய் தண்ணியில் குதியாளம் போடும்போது இவள் மட்டும் கம்மாய் பக்கமே போக மாட்டாள். சும்மாத் தண்ணியிலே குதிச்சா சொறிபிடித்து மேலெல்லாம் வங்கு வத்தும். டவுன்ல படிக்கிற மச்சானுக்குப் பிடிக்காது. அதேபோல கஞ்சியக் குடிச்சி வகுறு வச்சிப்போயி மச்சான் ‘ஒன்னைக் கட்ட மாட்டேன்’னு சொல்லிட்டா என்னாகுறது? சும்மா மச்சான் மச்சான் என்று சொல்லிக்கொண்டிருந்தவள் பெரிய மனுஷியானதும் மச்சானைப் பத்தி நினைக்கவே வெட்கமும் கூச்சமுமாயிருந்தது. கொஞ்ச நாளைக்கி. வெறும் மச்சானைப் பத்தின நினைப்போடு அப்புறம் கனாக்களும் வந்து மனசைப் படபடக்க வைத்தன. டவுனுக்கு தீப்பெட்டி ஒட்டப் போகையிலும் வரையிலும், ஓட்டும்போதும் மச்சானின் நினைப்பு இருந்துகொண்டே இருக்கும்.
பஞ்சத்திலே பேதி வந்து அவ அய்யா மட்டும் சாகாம இருந்திருந்தா மச்சானுக்குப் பொருத்தமா அவளும் படிச்சிருப்பா. அது ஒரு குறை மட்டும் அவ மனசிலே இருந்து கொண்டிருந்தது. அதுவும் போயிருச்சு மச்சான் ஒரு தடவை அவுக தங்கச்சி கோமதி கலியாணத்துக்கு பத்திரிகை வைக்க வந்தபோது. எந்த வித்தியாசமும் பாராம ஆத்தாளோடவும் அண்ணனோடவும் ரொம்பப் பிரியமா பேசிக்கிட்டிருந்த மச்சானை கதவு இடுக்கு வழியாப் பாத்துப் பாத்து பூரிச்சுப் போனா மாரியம்மா.
மச்சானைப் பத்தின ஒவ்வொரு சேதியையும் சேர்த்துச் சேர்த்து மனசுக்குள்ளே பூட்டி வச்சிக்கிட்டா. வருஷம் ஓடினாலும் பஞ்சம் வந்தாலும் அய்யா செத்துப் போயி வயித்துப் பாட்டுக்கே கஷ்டம் வந்தாலும் அவனைப் பத்தின நினைப்பு மட்டும் மாறவே இல்லை. அதனாலேதான் தங்கராசு அவளுக்கில்லை என்று ஆன பிறகும்கூட அவளால் அண்ணனையும் ஆத்தாளையும் போலத் துப்புரவாக வெறுத்துவிட முடியவில்லை.
அவளுக்கு நல்லா ஞாபகம் இருக்கு, மாமனும் அத்தையும் வந்தது. தங்கராசு மச்சான் கலியாணத்துக்கு பரிசம் போடத்தான் மாமனும் அத்தையும் வருவாகன்னு இருந்தபோது, வேற இடத்திலே பொண்ணையும் பாத்து பத்திரிகையும் வச்சிட்டு சும்மாவும் போகாம மாமா அண்ணங்கிட்டே, ‘‘கலியாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னக்கூட்டியே வந்திரணும்பா. கோமதி கலியாணத்தை முடிச்சு வச்ச மாதிரி வேலைகளையும் பொறுப்பா இருந்து நீதான் பாத்துக் கணுமப்பா’’ என்று வேறு சொல்லிவிட்டுப் போனார். அவுக அங்கிட்டுப் போகவும் ஆத்தாளிடம் வந்து அண்ணன் ‘தங்கு தங்’கென்று குதித்தான். ‘‘என்னய என்ன சுத்தக் கேணப்பயனு நெனச்சுட்டாகளா’’ என்று. ‘கோமதி கலியா ணத்துக்கு எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு அண்ணன் செய்தான்னு சொன்னா அது நாளக்கி நம்ம தங்கச்சி வந்து வாழப் போற வீடு, நாம வந்து ஒத்தாசை செய்யாட்டா யாரு செய்வா என்று நினைத்து செய்தது. ஆனா, இப்படி நகைநட்டுக்கு ஆசைப்பட்டு மாமா அந்நியத்தில போவாகன்னு யாரு கண்டது. என்ன மாமானும் மச்சானும்.’ என்று வெறுத்துவிட்டது அவனுக்கு.ஆனால், அண்ணன் ஏறிக்கொண்டு பேசியபோது ஆத்தா பதிலுக்கு கூப்பாடுதான் போட்டாள்.
‘‘என்னடா குதிக்கே? படிச்சு உத்தியோகம் பாக்குற மாப் பிள்ளை தீப்பெட்டியாபீசுக்கு போயிட்டு வந்து வீச்ச மெடுத்துப் போயிக் கெடக்கிற கழுதயக் கட்டுவான்னு நீ நெனச்சுக்கிட்டா அவுக என்னடா செய்வாக’’ என்று ஆத்திரமாகப் பேசினாள். அப்படி அப்போதைக்குப் பேசினாலும் அன்னைக்கு ராத்திரி செத்துபோன அய்யாவிடம் முறையீடு செய்து சத்தம் போட்டு ஒப்பாரி வைத்தாள். ‘‘ஏ… என் ராசாவே… என்ன ஆண்டாரே! இப்பிடி விட்டுப் போனீரே… மணவடையிலே வந்து முறைமாப்பிள்ளை நானிருக்க எவன் இவ கழுத்தில தாலி கட்டுவான்னு சொல்லி என்னச் சிறையெடுத்து வந்தீரே… இப்பிடி நிர்க்கதியா நிக்க விடவா சிறையெடுத்தீர் ஐயாவே… தம்பீ தம்பீன்னு பேகொண்டு போயி அலைஞ்சேனே… அவனைத் தூக்கி வளத்தேனே… என் ராசாவே… எனக்குப் பூமியிலே ஆருமில்லாமப் போயிட்டாகளே…’’
பக்கத்துப் பொம்பிளைகளெல்லாம் வைதார்கள், ‘‘என்ன இவளும் பொம்பளதான… அப்பயும் இப்படியா ஒப்பாரி வச்சு அழுவாக’’ என்று.
பிறகு அண்ணன் வந்து, ‘‘இப்பம் நீ சும்மாருக்கியா என்ன வேணுங்கு’’ என்று அரட்டவும்தான் ஒப்பாரியை நிப்பாட்டினாள்.
மறுநாள் அண்ணன், ‘‘தங்கராசு கலியாணத்துக்கு ஒருத்தரும் போகப்புடாது’’ன்னு சொன்னபோது மறுபேச்சுப் பேசாமல் ஆத்தாளும் சரியென்று சொல்லிவிட்டாள்.
‘அவனுக்கும் நமக்கும் இனிமே என்ன இருக்கு’ என்று சொல்லிவிட்டாள்.
ஆனால், மாரியம்மா அப்படியெல்லாம் ஆகவிடவில்லை. பலவாறு அண்ணனிடமும் ஆத்தாளிடமும் சொல்லிப் பார்த்தாள். ஒன்றும் மசியாமல் போக, கடைசியில்…
‘நீங்க யாரும் மச்சான் கலியாணத்துக்குப் போகலைன்னா நான் நாண்டுக்கிட்டுச் செத்துருவேன்’ என்று ஒரு போடு போட்டதும் சரியென்று அண்ணன் மட்டும் கலியாணத்துக்குப் போய்வந்தான். எம்புட்டோ கேட்டுப்பாத்தும் கலியாணச் சேதி எதையும் அவன் மாரியம்மாளுக்கோ ஆத்தாளுக்கோ சொல்லவில்லை.
‘எல்லாம் முடிஞ்சது’ என்பதோடு நிறுத்திக்கொண்டான்.
தன் பிரியமான மச்சானின் கல்யாணம் எப்பிடியெல்லாம் நடந்திருக்கும் என்று மாரியம்மாள் தினமும் பலவாறாக தீப்பெட்டி ஒட்டியபடிக்கே நினைத்து நினைத்துப் பார்ப்பாள்.
‘எங்கிட்டு இருந்தாலும் நல்லாருக்கட்டும்’ என்று கண் நிறைய, மனசு துடிக்க வேண்டிக்கொள்வாள்.
தங்கராசு கலியாணத்துக்குப் போய்விட்டு வந்த அண்ணன் சும்மா இருக்கவில்லை. அலைஞ்சு பெறக்கி இவளுக்கு மாவில்பட்டியிலேயே அய்யா வழியில் சொந்தமான பையனை மாப்பிளை பார்த்துவிட்டான். சின்ன வயசிலே நாகலாபுரத்து நாடார் ஒருத்தர் கடையில் சம்பளத்துக்கு இருக்க மெட்ராசுக்குப் போய் வந்த பையன். மாரியம் மாளோட நாலு பவுன் நகையை வித்து மாவில்பட்டியிலேயே ஒரு கடையையும் வைத்துக் கொடுத்துவிட்டான்.
இத்தனைக்குப் பிறகும், கோவில் கொடைக்கு மச்சான் வந்திருக்காகன்னு தெரிஞ்சதும் உடனே பாக்கணுமின்னு ஓடியாந்துட்டா. அவுக எப்படி இருக்காக? அந்த அக்கா எப்படி இருக்காக? மச்சானும் அந்த அக்காளும் நல்லா பிரியமா இருக்காகளான்னு பாக்கணும் அவளுக்கு.
ஆனா, வந்த உடனேயே மச்சானையும் அந்த அக்கா ளையும் பார்க்கக் கிளம்பிவிடவில்லை. மத்தியான நேரம், சாப்புட்டு சித்த கண்ணசந்திருப்பாக என்று இருந்துவிட்டு சாயந்தி ரமாகப் போனாள்.
கட்டிலில் படுத்தவாக்கில் பாட்டையாவுடன் பேசிக் கொண்டிருந்தான் மச்சான்.
‘‘குடும்புடுறேன் மச்சான்’’
என்று மனசு படபடக்கச் சொல்லிவிட்டு உள்ளே போனாள். தங்கராசின் அப்பத்தாளும் அந்த அக்காளும் அடுப்படியில் வேலையாக இருந்தார்கள். பொன்னாத்தா இவளைப் பிரியத்துடன் வரவேற்றாள். அந்த அக்கா ரொம்ப லட்சணமாக இருந்தார்கள். நகைநட்டு ரொம்ப போட்ருப் பாகன்னு பாத்தா அப்படி ஒண்ணும் காணம். கழட்டி வச்சிருப்பாக என்று நினைத்துக்கொண்டாள். ரொம்ப பிரியம் நிறைந்த பார்வையுடன் அந்த அக்காளுடன் வாஞ்சையோடு பேசினாள் மாரியம்மா.
‘பேசிக்கிட்டிருங்க, இந்தா வாரே’ன்னு பொன்னாத்தா கடைக்கு ஏதோ வாங்கப் போகவும் மாரியம்மா அந்த அக்காளிடம் இன்னும் நெருங்கி கிட்ட உட்கார்ந்து கொண்டு கைகளைப் பாசத்துடன் பற்றிக் கொண்டாள். ரகசியமான, அதே சமயம் ரொம்பப் பிரியம் பொங்கிய குரலில், ‘‘யக்கா… மாசமாயிருக்கிகளா’’ என்று ஆர்வத்துடன் கேட்டாள்.
பட்டென்று அந்த அக்கா ஒரு நெடிப்புடன்,
‘‘ஆம, அது ஒண்ணுக்குத்தான் கேடு இப்பம்’’
என்று சொல்லிவிட்டாள். மாரியம்மாளுக்குத் தாங்க முடிய வில்லை. அதைச் சொல்லும்போது லேசான சிரிப்புடன்தான் அந்த அக்கா சொன்னாலும் அந்த வார்த்தைகளில் ஏறியிருந்த வெறுப்பும் சூடும் அவளால் தாங்க முடியாததாக, இதுநாள் வரையிலும் அவள் கண்டிராததாக இருந்தது. ஒரு ஏனத்தைக் கழுவுகிற சாக்கில் வீட்டின் பின்புறம் போய் உடைந்து வருகிற மனசை அடக்கிக் கொண்டாள். உள்ளே மச்சான் அவுக பேச்சுக்குரல் கேட்டது.
‘‘மாரியம்மா போயிட்டாளா’’ என்று உள்ளே வந்த மச்சான் அந்த அக்காளிடம்’’ ‘‘காப்பி குடிச்சிட்டியா ஜானு’’ என்று பிரியமாகக் கேட்டதும் படக்குனு அந்த அக்கா,
‘‘ஆஹாகாகா… ரொம்பவும் அக்கறைப்பட்டுக் குப்புற விழுந்துறாதிக…’’ என்று சொல்லிவிட்டது.
ரொம்ப மெதுவான தொண்டையிலே பேசினாலும் அந்தக் குரல் இறுகிப்போய் வெறுப்பில் வெந்து கொதிக்கிறதாய் இருந்தது.
வெளியே நின்றிருந்த மாரியம்மாளுக்கு தலையை வலிக்கிற மாதிரியும் காய்ச்சல் வர்ற மாதிரியும் படபடன்னு வந்து. கழுவின ஏனத்தை அப்படியே வைத்துவிட்டு பின்புறமாகவே விறுவிறுவென்று வீட்டுக்கு வந்து படுத்துக்கொண்டாள்.
ஆத்தாளும் அண்ணனும் கேட்டதுக்கு ‘மண்டையடிக்கி’ என்று சொல்லிவிட்டாள்.
சிறு வயசில் கள்ளிப்பழம் பிடுங்கப் போய் நேரங்கழித்து வரும்போது வழியில் தேடி வந்த மாமாவிடம் மாட்டிக் கொண்டு முழித்த தங்கராசின் பாவமான முகம் நினைப்பில் வந்து உறுத்தியது. தண்ணியைத் தண்ணியைக் குடித்தும் அடங்காமல் நெஞ்சு எரிகிற மாதிரியிருந்தது. அந்த அக்காளின் வீட்டில் நகைநட்டு குறையாகப் போட்டதுக்காக தங்கராசின் அம்மா ரொம்ப கொடுமைப்படுத்துகிறாளாம் என்று சீனியம்மா சொன்னதும், அந்த அக்காள் கொடும் வெறுப்பாகப் பேசினதும் நினைப்பில் வந்து இம்சைப் படுத்தியது.
எல்லாத்துக்கும் மேலே அந்த வார்த்தைகளது வெறுப்பின் ஆழம், தாங்க முடியாத வேதனையைத் தந்தது. ராத்திரி ஊரோடு கோயில் வாசலில் பொங்கல் வைக்கப் போயிருந்தபோது இவ மட்டும் படுத்தே கிடந்தாள். ஒவ்வொன்றாக சிறுவயதில் அவனோடு பழகினது… அய்யாவைப் பத்தி… ஆத்தாளைப் பத்தி… அண்ணனைப் பத்தி… எல்லோரும் படுகிற பாட்டைப் பத்தி… அந்த அக்காளைப் பத்தி நினைக்கக்கூட பெருந்துன்பமாயிருந்தது. குமுறிக்கொண்டு வந்தது மனசு.
ராத்திரி நேரங்கழித்து அவ புருஷன் வந்தான். ரெண்டு நாளாய் நல்ல யேவாரம் என்றும் தேங்காய் மட்டுமே முப்பத்திரெண்டு காய் வித்திருக்கு என்றும் பொரிகடலைதான் கடைசியில் கேட்டவுகளுக்கு இல்லையென்று சொல்ல வேண்டியதாப் போச்சு என்றும் உற்சாகமாக ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தான். திடீரென்று இவள் ஏதுமே பேசாமல் ஊமையாக இருப்பதைக் கண்டு எரிச்சலடைந்து, ‘‘ஏ நாயி, நாம் பாட்டுக்கு கத்திக்கிட்டிருக்கேன். நீ என்ன கல்லுக்கணக்கா இருக்கே’’
என்று முடியைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கினான்.
உடனே அணை உடைத்துக் கொண்டதுபோல ஏங்கி அழ ஆரம்பித்தாள். அவன் பதறிப்போய் தெரியாமல் தலையைப் பிடித்துவிட்டேன் என்று சொல்லி, தப்புத்தான் தப்புத்தான் என்று திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்தான். அவள் அழுகை நிற்கவில்லை. மேலும் மேலும் ஏக்கமும் பெருமூச்சம் வெடிப்பும் நடுக்கமுமாய் அழுகை பெருகிக் கொண்டு வந்தது.
ஏதோ தான் பேசிவிட்டதற்காகத்தான் அவள் இப்படி அழுகிறாள் என்று நினைத்துக்கொண்டு ரொம்ப நேரத்துக்கு அவளை வீணே தேற்றிக் கொண்டிருந்தான் அவன்.
*****
நன்றி : ஆம்பல்
ச.தமிழ்ச்செல்வன் இதுதான் ‘சசி’ இயக்கி தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க யதார்த்த படமாகப் பாராட்டப்படுகிற ‘பூ’ திர...
விக்ரமாதித்யன் நம்பி
அப்பா திரும்பத்திரும்பச் சொன்னார்கள். அம்மாவுக்குத் திருநெல்வேலியை விட்டுவர இஷ்டமே இல்லை. ஆனால், அப்பா எப்பொழுதுமே தான் நினைத்ததைச் சாதித்துவிடுவார்கள். இப்பொழுதும் அப்படித்தான் ஆயிற்று. அம்மா மனசை மெல்லமெல்லக் கரைத்து விட்டிருந்தார்கள். கல்லிடைக்குறிச்சியில் வீடு பார்த்து வைத்திருந்தார்கள். அம்மாவை வந்து பார்க்கச் சொன்னார்கள். திருநெல்வேலியில் இனிமேல் இருக்கமுடியாது என்று சின்னப்பிள்ளைக்குச் சொல்வதுபோல எடுத்துச் சொன்னார்கள்.
சைக்கிள்கடையை விற்றாயிற்று. ஏழு மரக்கால் விதைப்பாட்டையும் விலைபேசிக் கொடுத்தாயிற்று. வேறே ஒன்றுமில்லை. அப்பா சிங்கப்பட்டி ஜமீன்தாரிடம் செக்ரட்டரியாகச் சேர்ந்துவிட்டிருந்தார்கள். கமலா சித்தியை விடவில்லை. சிங்கம்பட்டியிலேயே வீடெடுத்து இருந்தார்கள். இவ்வளவுக்குப் பிறகும் அம்மாவை ஏன் கூப்பிடவேண்டும். பிள்ளைகளை ஏன் தேடவேண்டும்.
அம்மா எதற்கும் கலங்கவில்லை. மாமாவை சைக்கிள் கடையிலிருந்து அனுப்பும்போதும் ஒன்றும் சொல்லவில்லை. கூடவே இருந்த அம்மா ஆச்சியை ஊருக்கு அனுப்பிவைக்கும்போதும் கவலைப்படவில்லை. தங்கச்சி காந்தி, வயிற்றில் கட்டிவந்து ஆப்பரேஷன் பண்ணிக் குணமாகாமல், செத்தபோதும் பெரிதாகக் கலவரப்படவில்லை. அவள் பாட்டுக்கு இருந்துகொண்டாள்.
அம்மாவின் பேச்சுதான் குறைந்துவிட்டது. அவள் எப்போதுமே அதிகம் பேசுகிறவள் இல்லைதான். ஆனால், இப்பொழுதெல்லாம் எண்ணித்தான் பேசுகிறாள். உள்ளுக்குள் என்னவோ தீர்க்கமாக முடிவெடுத்திருக்கிறாள் போல. அப்பாவைப் பற்றி என்ன நினைக்கிறாள் என்று தெரியவில்லை. அக்காவிடமும் இவனிடமும் முன்னைவிடவும் அதிகம் பிரியமாக இருக்கிறாள். தம்பியைக் கீழேயே விடுவதில்லை, தொட்டியில் போட்டிருக்கிற நேரம் தவிர.
சம்சாரி வந்துதான் சொன்னான்: 'தாயி .... ஐயா இப்டி செஞ்சிட்டாகளே. நயினாகுளத்துப் பத்த யாராவது விப்பாகளா... இவுக இந்தமாதிரி பண்ணிட்டாகளே... '
அம்மா எதுவும் சொல்லவில்லை. வீட்டினுள் போய் டிரங்க் பெட்டியில் இருந்து ஒரு வெளுத்த வேஷ்டியும் சட்டையும் எடுத்துக் கொண்டுவந்து கொடுத்தாள். மாடக்குழியிலிருந்து ஒரு ஐந்து ரூபாய்த் தாளை எடுத்துவந்து, 'பிள்ளையளுக்குப் பண்டம் வாங்கிக் குடு ' என்று கொடுத்தாள். 'இரண்டு இட்லி சாப்பிட்டுட்டுப் போ ' என்று இலையில் பொதிந்து கொண்டு வந்தாள்.
பக்கத்துவீட்டு அத்தை வந்து கேட்டாள் : 'என்ன மதினி, சைக்கிள் கடைய வித்தாச்சாம்லா.. இவுக சொன்னாக. '
'ம்... பாக்க ஆளில்லல்லா... கொடுத்திற வேண்டியதுதானே.. ' என்று மட்டும் சொல்லிவிட்டு, ' பெரியவன் மதுரயிலதான இருக்கான்.. வரவே காணோம் ' என்று விசாரித்துவிட்டு வீட்டினுள் வந்துவிட்டாள்.
* * *
கல்யாணியா பிள்ளை வளவு கிழக்கு பார்த்து இருந்தது. காம்பவுண்டில் தெற்கு பார்த்த முதல் வீடு அவரது. தெற்கு வரிசையில் முதலில் இரண்டு சிறு வீடுகள். மூன்றாவதாக கொஞ்சம் பெரியவீடு. தென்மேற்கு மூலையில் இரண்டு குச்சுகள். கல்லிடைக்குறிச்சியில் கல்யாணியா பிள்ளை காம்பவுண்ட் என்றால் யாருக்கும் தெரியும். பரம்பரைப் பணக்காரர். சாப்பாட்டுக்கு வயல் இருந்தது. நெல் வந்துவிடும். வாடகைப்பணம் மேல்செலவுக்குத்தான். பெரியவன் சூரியநாராயணன் அக்கா ஒட்ட. எட்டு படித்துக்கொண்டிருந்தான். சின்னவன் நாலு. இரண்டே பையன்கள். கல்யாணியா பிள்ளை நிரம்ப சாது. கொஞ்சம் காது கேட்காது. அதனாலோ என்னவோ யாரிடமும் தேவையில்லாமல் பேச்சுக் கொடுக்கமாட்டார். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்துகொள்வார்.
அம்மா ஒரு நல்லநாள் பார்த்து வந்து பால் காய்ச்சிவிட்டுத் திரும்பினாள். அன்றைக்கு அப்பா வீட்டிலேயே இருந்தார்கள். வளவு முழுக்க வந்திருந்தது. எல்லோருக்கும் தம்ளரில் பாலை எடுத்துக் கொடுக்கையில் அம்மா முகத்தில் தனி சந்தோஷம் தெரிந்தது. நிரம்ப காலத்துக்குப் பிறகு இப்பொழுதுதான் தெளிச்சியே வந்திருந்தது.
மத்தியானச் சாப்பாட்டுக்கு அவியல், கோஸ் பொரியல், மாங்காய்ப் பச்சடியெல்லாம் வைத்திருந்தாள். அப்பா வீட்டுக்கு வராததிலிருந்து அனேகமாக ஒரு சோறு, ஒருகுழம்பு, ஒரு கறி என்றாகியிருந்தது. வருஷப்பிறப்பு, கார்த்திகை, பொங்கல், பிள்ளையார் சதுர்த்தி, சரஸ்வதிபூஜை இப்படி விசேஷ நாள்கள் கூட சாதாரணமாகவே கழிந்தன. அன்றைக்குத்தான் பாயாசம் வைக்கத் தோன்றியிருக்கிறது. வளவிலும் சாப்பிட அழைத்திருந்தது.
* * *
அக்காவை திலகர் வித்யாலயாவில் சேர்த்திருந்தது. இவன் கவர்மெண்ட்ஸ்கூல். அந்த வருஷம் அக்கா கட்டுரைப்போட்டியிலும் பேச்சுப் போட்டியிலும் முதல் பரிசு வாங்கினாள். அப்பா வாரத்தில் இரண்டு நாளோ மூன்று நாளோ வந்து கொண்டிருந்தார்கள். சிவா எங்கே, பெரியவன எங்கே என்றுதான் விசாரிப்பார்கள். நெஸ்டில் இருக்கா என்று கேட்பார்கள். அம்மா ஒற்றைவார்த்தையில் பதில் சொல்வாள். தம்பியை மடியில் போட்டுக்கொண்டு கொஞ்சுவார்கள். அவன் தூங்கிக் கொண்டிருந்தால் தொட்டிலில் போய்ப் பார்த்துவிட்டுத்தான் வந்து உட்காருவார்கள்.
வெளியில் அரண்மனை கார் நிற்கும். உடனே புறப்பட்டுவிடுவார்கள். திருநெல்வேலிக்கு ஏதாவது வேலியாகப் போய்விட்டு வரப் பிந்தினால், கடைசி பஸ் பிடித்து வந்து, மணிமுத்தாறு பஸ் இல்லையென்றால், வீட்டுக்கு வருவார்கள். அம்பாசமுத்திரத்தில் எதுவும் ஜோலியாக வருகையில் இறங்கி வந்து பார்த்துவிட்டுப் போவார்கள்.
அம்மா வருவதெல்லாம் வரட்டும் என்கிற மாதிரியே இருந்து கொண்டாள். எல்லாம் நன்றாகவே நடந்துகொண்டிருந்தது. ஒரு குறையும் இல்லை, அப்பா வீட்டில் தங்காத குறையைத் தவிர. அப்பா எப்பொழுது வருவார்கள், எப்பொழுது போவார்கள், எப்பொழுது இருப்பார்கள் என்று சொல்லமுடியாது. அம்மா, அக்காவைப் பள்ளிக்கூடம் அனுப்பிவைப்பதிலும், தம்பிக்கு நெஸ்டிக் கரைத்துக் கொடுப்பதிலும், சமையல் செய்வதிலுமாக இருந்தாள். சாயங்காலம் விளக்கு பூஜை செய்வாள். இடையில் சிறிது காலம் விட்டிருந்தாள்.
காலைக்கு வழக்கமாக இட்லிக்குப் போட்டிருக்கும். மத்தியானம் சுடுசோறு. இராத்திரி பழையது. எப்பொழுதும் சுண்டக்கறி இருக்கும். நார்த்தங்காய் ஊறுகாய், மல்லித் துவையல் இருக்கும். இந்தப்பக்கத்தில் பிரண்டை கிடைக்கும். அம்மா கைபாகத்தில் எல்லாமே ருசியாயிருக்கும். சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் முறுக்கோ தட்டையோ கிளாஸ்கோ பிஸ்கெட் டின்னிலிருந்து எடுத்துத் தருவாள். சமயங்கள் சீனிக்கிழங்கு அவித்து வைத்திருப்பாள். அவள் என்ன சாப்பிடுகிறாள், எப்பொழுது சாப்பிடுகிறாள் என்பதுதான் தெரியமாட்டேனென்கிறது.
அப்பா வந்து வாடகை கொடுத்துவிடுவார்கள். சுப்பையா மூப்பனார் கடையிலிருந்து மளிகை சாமான் வந்துவிடும். பாலுக்கும் தயிருக்கும் அம்மா கையில் கொடுத்துவிடுவார்கள். வீட்டரிசி சமையல்தான். மொத்தமாக நெல் வாங்கிப் போட்டிருந்தது. அப்பா சாயங்கால வாக்கில் வீட்டில் இருந்தால் உள்ளூர் டூரிங் டாக்கீஸ் கூட்டிக்கொண்டு போவார்கள். புதுப்படம் போட்டிருந்தால் அம்பை கல்யாணிக்கோ கிருஷ்ணாவுக்கோ புறப்பட்டுவிடுவார்கள். அக்கா முன்னேயே சினிமாப்பாட்டு முணுமுணுத்துக் கொண்டிருப்பாள். இப்பொழுதெல்லாம் முழுசாகப் படிக்க ஆரம்பித்திருந்தாள். 'தங்கமலை ரகசியத்தில் வரும், அமுதை பொழியும் நிலவே, நீ அருகில் வராததோடு ' பாட்டை அடிக்கடி பாடுவாள். 'கணவனே கண்கண்ட தெய்வத் 'தில் அஞ்சலிதேவி பாடும் தாலாட்டு, 'அன்பில் மலர்ந்த நல்ரோஜா, கண்வளராய் என் ராஜா ' பாட்டுப் பாடித்தான் தொட்டிலாட்டிவிடுவாள். அக்கா பாடிப்பாடி இவனுக்கும் மனசிலாகி இருந்தது.
அப்பா வரும்பொழுது அரண்மனையிலிருந்து ஆனந்த விகடன், குமுதம், கல்கி படிக்க எடுத்துக்கொண்டு வருவார்கள். இவன், 'மகாவம்சம் ', 'தில்லானா மோகனாம்பாள் ' இப்படி கதை படிக்க ஆரம்பித்திருந்தான். 'பிராட்வே, வெலிங்டன், ராக்ஸி மற்றும் தமிழகமெங்கும் ' என்று வரும் சினிமா விளம்பாரங்களைத் தனியே 'கட் ' பண்ணி எடுத்துச் சேகரிக்கப் பழகியிருந்தான்.
கன்னடியன் கால்வாயில் வருஷம் பூராவும் தண்ணீர் வரும், கோடைக்காலம் தவிர. நல்ல ஓட்டம் இருக்கும் அதில். அம்மாதான் கூட்டிக்கொண்டு போவாள், காலையில். அங்கேதான் இவன் நீச்சல் படித்துக்கொண்டது. அக்காதான் கற்றுக்கொடுத்தது. தோண்டியைக் கவிழ்த்துப்போட்டு, அதைப் பிடித்துக்கொண்டே எப்படியோ அவள் நீச்சல் படித்துக்கொண்டாள்.
திருநெல்வேலி மாதிரியே இங்கேயும் இவர்களையும் அம்மாவையும் பார்த்துவிட்டு, 'இப்டி கட்டிகட்டியா பிள்ளையள வச்சுட்டு, அந்த மலையாளத்தா மாய்கையில அலையுதாகள, அண்ணாச்சி ' என்று தெரிந்தவர்கள் வருத்தப்பட்டுப் பேசுவார்கள். ராஜாவும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டு விட்டுவிட்டார்கள்.
பெண்குழந்தைக்கு ஒன்றரை வயது நடக்கிறது என்று அம்மைக்குத் தெரியும். ஆனால், அவள் எதுவும் கேட்பது இல்லை. கேட்கக்கூடாது என்கிறமாதிரியே இருந்துகொண்டாள். அவளாக எதையும் பேசுவது இல்லை. அப்பாவும் அம்மாவிடம் பேசுவது குறைந்துவிட்டது. வீட்டுக்கு என்னவும் வேணுமா. எல்லாம் இருக்கா. வரட்டுமா. செலவுக்குப் பணம் வச்சிருக்கியா. இப்படித்தான் இருக்கும் அப்பா பேசுவது.
* * *
வளவுக்கு எதிரே மேற்கே பார்த்து இருந்தது, கல்யாணியா பிள்ளை தம்பி சைலப்பன் வீடு. சாலைக்கு அந்தப்புறம் தனி வீடு. சைலப்பன், அண்ணனுக்கு நேர் எதிரானவர். கொஞ்சம் அடர்துடியான மனுஷன். அண்ணனைவிடக் குள்ளம். கட்டு குட்டென்று இருப்பார். இலட்சணமான முகம். சுருட்டை முடி. சற்று கறுப்புதான். நல்ல சதைவைத்து தொந்தியும் தொப்பையுமாக இருந்ததால் அப்படித் தோன்றாது. மடிப்புக் கலையாத வேஷ்டி -- சட்டையில்தான் வருவார். கையில் மோதிரம், வாட்ச் எல்லாம் கிடக்கும். எப்பொழுதும் தோரணயாகத்தான் தெரிவார்.
சைலப்பன் சரியான வாடாவழி. மனைவியை இவர்தான் பிறந்தவீட்டுக்கு அனுப்பிவைத்துவிட்டாரா, இல்லை அவர்களாகவே போய் விட்டார்களா தெரியவில்லை. வைப்பாட்டியோடுதான் அந்த வீட்டில் இருந்து கொண்டிருந்தார். இருபத்துநாலு மணி நேரமும் போதையில்தான் இருப்பார். மகன்தான் பிரியாணியோ புரோட்டாவா வாங்கிக்கொண்டு வருவான். ஒரே பையன். சூட்டிகையானவன். இவன் வயதுதான் அவனுக்கும்.
சைலப்பன் வீட்டுக்கதவு எப்போதும் அடைத்தே கிடக்கும் என்ன என்றே புரியவில்லை. பிள்ளைமாரில் இப்படி இருப்பது கிடையாது. எதற்காக இந்த மனுஷன் இரவும் பகலும் குடிக்கிறார். ஏன் பொண்டாட்டியை விட்டுவிட்டு இது மாதிரி வைப்பாட்டியை வீட்டிலேயே கொண்டு வந்து வைத்திருக்கிறார். பெற்ற பிள்ளையை எப்படி வேலைக்காரன் போல நடத்த முடிகிறது. எங்கேயாவது வெளியூருக்கோ சினிமாவுக்கோ போகையில் தவிர அவளை யாரும் பார்க்க முடியாது. வெளியே வரவேமாட்டாள் அவள். வரத் தேவையும் இல்லை.
எவ்வளவு சொத்து. கல்லிடைக்குறிச்சி ஊரிலேயே பெரிய பணக்காரர்கள். கன்னடியன் கால் பாசனம். பூவுக்கு இரு போகம். சைலப்பன் நினைத்தாலும் குடித்து அழிக்க முடியாத சொத்து.
ஏதாவது விஷயம் இருந்தால்தான் அண்ணனைப் பார்க்க வருவார். வெளியில் நின்றே கூப்பிட்டுப் பேசிவிட்டுப் போய்விடுவார். இல்லையென்றால் அண்ணன் மகனிடம் சொல்லிவிடுவார். வீட்டுக்குள் போகமட்டார். எந்த வம்புக்கும் போகிற ஆளுமில்லை. இருக்கிறது, குடிக்கிறார். என்னவோ மனைவியோடு ஆகவில்லை, வைப்பாட்டியோடு வாழ்கிறார். என்ன, இப்படி வெளிப்படையாக யாரும் இருக்கமாட்டார்கள். பையன்தான் பாவம். அவன் ஏன் இந்த அப்பாவோடேயே இருந்துகொண்டான். அம்மாவைத் தேடாதா.
சதாசிவம் சனி, ஞாயிறில் எல்லோருடனும் சேர்ந்து விளையாடுவான். முக்கியமாக, லென்ஸ் வைத்து, வேஷ்டியைத் திரைபோலக்கட்டி எங்கிருந்தோ ஃபிலிம் சுருள் கொண்டு வந்து சினிமா போடுவான். கல்யாணியா பிள்ளை மகன் சூரி என்கிற சூர்யநாராயணன், இவன், அக்கா, வளவில் உள்ள சின்னப்பிள்ளைகள் எல்லோரும் கூடியிருந்து பார்க்கிறது. திடாரென்று சைலப்பன் கூப்பிடும் சத்தம் கேட்டு ஓடியே போவான். பிறகு சூரிதான் ஆப்பரேட்டர். சூரியை எல்லோருக்கும் பிடிக்கும். அவனுக்கு சிங்கப்பல். பார்க்க அழகாக இருக்கும். மிதந்த விழிகள் சுழலச்சுழலச் சிரித்துச் சிரித்துப் பேசுவான். சித்தப்பா மகன் சதாசிவத்திடம் நிரம்பவே ஒட்டுதலாக இருப்பான். எல்லோரிடமும் பிரியமாகப் பழகுவான்.
* * *
அப்பா காலையில் வந்திருந்தார்கள். இராமநாதபுரம் போய்விட்டு வருகிறார்களாம், ராஜாவோடு. மத்தியான வண்டிக்கு மெட்ராஸ் போகிறார்கள். நாலு நாள் ஆகும். சொல்லிவிட்டுப் போகத்தான் இங்கேயே இறங்கிக்கொண்டேன் என்று பொதுவாகச் சொன்னார்கள். இவனுக்கு ஞாபகமாக 'அம்புலிமாமா ' வும் 'கண்ணனும் ' வாங்கிக்கொண்டு வந்திருந்தது சந்தோஷமாக இருந்தது. அக்காவுக்கு அவள் கேட்டமாதிரியே கொலுசு.
பிரயாண அலுப்போ என்ன்வோ குளித்துச் சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் படுத்து தூங்கினார்கள். அம்பாசமுத்திரம் தாலுகா ஆபீஸில் ஏதோ வேலை இருக்கிறது என்று சிறிது நேரத்திலேயே எழுந்து முகம் கழுவிவிட்டு புறப்பட்டுவிட்டார்கள்.
சாயங்கால வாக்கில் செட்டிபிள்ளைமார் தெருவிலிருந்து செண்பகம் பெரியம்மை வந்திருந்தாள். 'கொழுந்தன் எப்படி இருக்காக, நீ ஏன் இப்டி மெலிஞ்சி போயிட்டே இருக்கே. பிள்ளையளப் பாத்துதான் ஆறுதலடையணும். அவுக எப்டியும் இருந்துட்டுப் போறாக. சும்மா வீட்லயே அடைஞ்சு கிடக்காத. மனசுதான் உளையும். பிள்ளையளுக்கு அரை பரீட்சை லீவு விட்டதும் ஒரு பத்துநாள் சங்கரன் கோயில் அக்கா வீட்டுக்குப் போயி இருந்துட்டு வா.... ' என்று தைரியம் சொன்னாள்.
'போணும் அக்கா. இவளுக்கு ஸ்பெஷல் கிளாஸ் வச்சிருக்காங்க, அதான் பாக்கன்.... ' என்று இயல்பாகச் சொன்னாள்.
* * *
விளக்கு பூஜை முடிந்ததும், 'சாப்பிடுறீங்களா.... ' என்று கேட்ட அம்மை இவனுக்கும் அக்காவுக்கும் பழையது எடுத்துவைத்தாள். மத்தியானம் வைத்த புளிட்ட கறி இருந்தது. வடகமும் சீனியரைக்காய் வற்றலும் வறுத்து ஒரு தட்டில் எடுத்துக் கொண்டு வந்தாள். தம்பி தூங்கி விட்டிருந்தான்.
அம்மா ஏனங்களை ஒழித்து அங்ஙணத்தில் போட்டுக் கழுவிவிட்டு வந்து படுக்கை விரித்துக் கொடுத்தாள். அக்காவும் இவனும் படுத்த சிறிது நேரத்தில் வாசலில் என்னவோ பேச்சு சத்தம் கேட்டது. அக்காவுக்குப் பக்கத்தில் படுத்திருந்த அம்மா எழுந்து உட்கார்ந்து கொண்டாள். இவனுக்கு இன்னும் தூக்கம் வரவில்லை. சிம்னி விளக்கு வெளிச்சத்தில் அம்மா முகம் பளிச்சிட்டது. ஏதோ யோசனையில் இருக்கிற மாதிரி இருந்தது.
அக்கா தூங்கி விட்டாள். இவன் விழித்திருப்பதைப் பார்த்த அம்மா, 'நீ தூங்குல.... ஏன் முழிச்சிட்டிருக்க.... ' என்று கேட்டுவிட்டு படுத்துக்கொண்டாள்.
வெளியே சைலப்பன் சத்தம் போட்டுக்க்கொண்டிருந்தார். குரல் ஓங்கி ஒலித்தது. 'இவன் என்ன பெரிய புடுங்கின்னு நினைச்சுக்கிட்டு இருக்கானோ. இவன் பாட்டுக்கு வர்றான், போறான். சூட்டும் கோட்டும் போட்டுக்கிட்டு கார்ல வந்து இறங்கினாப்பில இவனே ஜமீன்தாராயிடுவானா. திருநவேலிக்காரனப் பத்தித் தெரியாதாக்கும் எனக்கு. அன்னிக்கு நா வாரேன், இவன் மதியாமப் போறான். தம்பி, நமஸ்காரம்னு இரண்டு வார்த்த பேசினா என்ன குறைஞ்சு போவான். கார்ல போற பவிசா. எப்ப வருவான் அவன். இன்னிக்கு அவனப் பாத்து இதக் கேட்காம இந்த இடத்தவிட்டுப் போமாட்டேன். அவனுக்கு வச்சுக்கிடுதேன் வரிச.... '
சைலப்பனின் சலம்பல் சப்தம் கேட்டு கல்யாணியா பிள்ளை வந்துவிட்டார், தம்பியிடம் என்னவோ நல்லவார்த்தை சொல்லி சமாதானப்படுத்திக் கொண்டிருந்தது கேட்டது. பக்கத்துவீட்டு சித்தியும் எழுந்திருந்து வந்துவிட்டாள். 'நீங்க இப்ப வீட்டுக்குப் போய்த் தூங்குங்க... அவுக வந்தபிறகு கேட்டுக்கிடுவோம். அந்த அக்கா பயப்படப் போகுது. பிள்ளையள் எந்திரிச்சிடக்கூடாதுல்ல... நாளைக்கு விசாரிப்போம். அண்ணாச்சி என்ன இதுன்னு குழம்பிப் போயி நிக்காக பாத்தீகள்ல.. எழுந்திரிங்க முதல்ல... ' என்று பையச் சொல்லிக்கொண்டிருந்ததும் கேட்டது.
'நா எதுக்குப் போணும்... எனக்குக் கேட்டாதான் தீரும். மதினிகிட்ட கேக்கேன்... அவுக சொல்லட்டும் ' என்று வந்து கதவைத் தட்டினார்.
கல்யாணியா பிள்ளை பதறியடித்துக்கொண்டு ஓடி வந்திருப்பார் போல. 'என் குடியக் கெடுத்திராதடா... மானம் மரியாதைக்கு பயந்து வாழ்ந்துட்டுருக்கேன். என்ன இப்படில்லாம் படுத்தாத. வந்துரு. நாளைக்கு அவங்க முகத்தில என்னன்னு முழிப்பேன். பேவரத்து வர்றீயே... நா என்ன செய்யட்டும் ' என்று தழுதழுத்த குரலில் புலம்பிக்கொண்டே வந்து தம்பியை எப்படியோ கூட்டிக்கொண்டு போய்விட்டார்.
அம்மா எழுந்து 'லைட் 'டைப் போட்டு, ஒரு தம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு, கதவை மெல்லத் திறந்து ஒருக்களித்தபடியே பார்த்துவிட்டு யாரும் இல்லை என்று தெரிந்துகொண்டு வந்து படுத்துக்கொண்டாள். நிரம்பவும் கலவரப்பட்டுவிட்டாள். தூங்கவில்லை. இவனுக்கு எப்பொழுது தூக்கம் வந்தது என்று தெரியவில்லை.
* * * *
அப்பா மெட்ராஸ் போய்விட்டு நேரே இங்கே வீட்டுக்குத்தான் வந்து இறங்கினார்கள். மூன்றுமுறை தட்டுகிற சப்தம் கேட்டு அம்மை போய்க் கதவைத் திறந்தாள். 'என்ன லட்சுமி... ' என்று வழக்கம்போலக் கூப்பிட்டுக்கொண்டே வந்தார்கள்.
'லட்சுமியோ கொட்சுமியோ எல்லாம் இருக்கட்டும்... முதல்ல வேற வீடு பாருங்க. நான் இங்க இருக்கமுடியாது. நீங்க பாட்டுக்குகொண்டாந்து விட்டுட்டுப் போயிருங்க. எவனாவது குடிகாரப்பய வந்து கதவத் தட்டிட்டு நிக்கான். நா அர்த்தராத்திரில இந்தப் பிள்ளைகளையும் வச்சுக்கிட்டு என்ன செய்வேன். துணைக்கு யார் இருக்கா. உடனே வீடு மாறணும். இல்ல, நாங்க திருநவேலிக்கே போயிர்றோம் ' என்று படபடத்தாள்.
'என்ன நடந்தது லட்சுமி... தலையும் இல்லாம வாலும் இல்லாம பேசினா எனக்கு என்ன புரியும்.. சொல்லு, என்ன விஷயம். ' அப்பா கேட்டார்கள். அம்மா கண்கலங்கியபடியே சொன்னாள்.
'சரி.. வேற வீடு பார்த்துப் போயிருவோம்... நீ தைரியமா இரு. நான் திருநவேலி வரைக்கும் போயிட்டு வந்துர்றேன் ' என்று குளித்துவிட்டுப் புறப்பட்டுவிட்டார்கள். சாப்பிடக்கூட இல்லை.
* * *
அந்திக் கருக்கல். இருட்டு இறங்கிக் கொண்டிருந்தது. அக்காவுக்கு சடைபின்னிவிட்டு, அம்மா விளக்குப் பொருத்திக் கொண்டிருந்தாள். அப்பாவும் சங்கரன் மாமாவும் வந்தார்கள்.
'எப்படி இருக்க அக்கா... என் மருமகள எங்க ' என்று விசாரித்துக்கொண்டே வீட்டுக்குள் வந்தான் சங்கரன் மாமா.
'நீ எங்க வந்த... பிள்ளையள் நல்லா இருக்காங்களா. கொழுந்தியா எப்டி இருக்கா... '
அம்மா வெள்ளந்தியாகக் கேட்டாள்.
'அத்தான் வந்தாக...கூடவே வந்துட்டேன் ' சாதாரணமாகச் சொன்னான் சங்கரன் மாமா.
அம்மை அப்பாவுக்கும் சங்கரன் மாமாவுக்கும் காபி போட அடுக்களைக்குப் போனாள்.
'சங்கரா, போலாமா... ' என்று அப்பா வெளியே கூட்டிக்கொண்டு போனார்கள்.
* * *
சங்கரன் மாமா, அப்பாவுக்கு ஒன்றுவிட்ட அண்ணன் நெல்லையப்பபிள்ளை மச்சினன். லயன் கம்பெனியில் டிரைவர். துடியாய் இருப்பான்.நல்ல கறுப்பு. வளத்தியும் குறைச்சல்தான். முகத் தீர்க்கம். திருநெல்வேலியில் இருக்கும்போது அப்பாவைத் தேடிவருவான். 'அத்தான் இருக்காகளா, அக்கா... ' என்று கேட்டுக்கொண்டே வருவான். அப்பாதான் இரண்டு முறை அவன் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள். அந்த அத்தையும் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு இரண்டு, மூன்று தடவை வந்திருக்கிறார்கள்.
சங்கரன் மாமாவை வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும். அம்மைகூட சங்கரா என்று இயல்பாகப் பேசுவாள். கூடப் பிறந்த அக்காவிடம் எவ்வளவு பிரியமாக இருப்பானோ அவ்வளவு பிரியமாக இருப்பான் அவனும்.
நெல்லையப்பபிள்ளை பெரியப்பாவை விடவும் அப்பாவிடம்தான் பற்றுதலாக இருந்தான், சங்கரன் மாமா. அப்பாவுக்கு இருக்கும் செழிப்பு, தோரணை, கை தாராளம் எல்லாம் ஈர்த்திருக்கும் போல.
* * * *
அம்மா காபி போட்டு எடுத்துக்கொண்டு வந்தாள். இரண்டு சிறுதட்டில் கொஞ்சம் அல்வாவும் மிக்சரும் எடுத்து வைத்திருந்தாள். அக்காவும் டியூஷன் முடிந்து வந்துவிட்டாள். 'அப்பாவும் சங்கரன் மாமாவும் வெளிய நிப்பாங்க... பாத்துக் கூட்டிட்டு வா. காபி ஆறிறப் போகுது ' என்று அம்மை இவனிடம் சொல்லி அனுப்பிவைத்தாள்.
வெளியே கூட்டமாய் இருந்தது ரோட்டில். சைலப்பன் வீட்டுமுன் நிறையபேர் நின்றிருந்தார்கள். இவன் ஏறிட்டு மாடியைப் பார்த்தான். அப்பாவும் சங்கரன் மாமாவும் சைலப்பனை அடித்து இறக்கிக் கொண்டிருந்தார்கள். சட்டை கிழிபட்டிருந்தது. திரும்பத் திரும்ப செவிட்டிலேயே அறைந்து கொண்டிருந்தான் சங்கரன் மாமா. அவன் முகத்தைப் பார்க்கவே பயமாக இருந்தது. சரமாரியாக அடித்துக் கொண்டிருந்தார்கள், அப்பா. சைலப்பன் முகத்திலேயே குத்து விழுந்துகொண்டிருந்தது.
சைலப்பன் கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டிருந்தார். 'விட்டிருங்க அண்ணாச்சி.. விட்டிருங்க அண்ணாச்சி ' என்று கேவிக்கேவி அழுதுகொண்டே மன்றாடினார்.
'மன்னிச்சிருங்க அண்ணாச்சி.. மன்னிச்சிருங்க அண்ணாச்சி.. என்று மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பாவின் பாதங்களைத் தொட்டுக் கும்பிட்டபடியே இருந்தார்.
'இறங்குடா நாயே.... ' என்று நெட்டித் தள்ளிய அப்பாவின் குரல் அதிர்ந்தது.
'வாய மூடுறா.... ' என்று பிடரியைப் பிடித்துத் தள்ளினான் சங்கரன் மாமா.
பின்னாடியே ஒரு பெண் தடதடவென்று இறங்கிவந்து அப்பாவின் காலில் விழுந்தாள்.
'அவரக் கொன்னுராதீங்க... நல்லா இருப்பீங்க.. விட்டுருங்க ஐயா.... ' என்று வேண்டிக் கொண்டாள்.
'எழுந்திரிடி... ' என்று முடியைப் பற்றி இழுத்து ஒதுக்கிவிட்டான் சங்கரன் மாமா.
தடுமாறிக் கீழே விழுந்த சைலப்பனை எட்டி மிதித்துக் கொத்தாகப் பிடித்துத் தூக்கினான்.
கூட்டம் சற்று ஒதுங்கி வழிவிட்டது.
சைலப்பனால் நிற்க முடியவில்லை. துவண்டு சரிந்து விடுவார்போல இருந்தது. சங்கரன் மாமா இடது புறமும் அப்பா வலதுபுறமுமாக ஏந்தி அணைத்து இழுத்துக்கொண்டு வந்தார்கள்.
'குடிச்சா என்ன வேணாலும் பேசலாமாடா... எங்க வந்து நின்னு பேசுறோம்னு தெரியாம போயிருமோ... சங்கக் கடிச்சு ரத்தத்தக் குடிச்சுருவன். நான் வீட்ல இல்லேன்னா செத்துப்போனேன்னு அர்த்தமா... தீ வச்சுக் கொளுத்திப் போடுவேன்.. கொளுத்தி... ' அப்பா முகம் சிவக்க ஓங்கிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
கல்யாணியா பிள்ளை எதிர் வந்து நின்று அப்பா கையைப் பிடித்துக்கொண்டு, 'எனக்காக விட்ருங்க, தம்பி..என்னமோ குடிச்சுட்டு உளறிட்டான்... அன்னிக்கே பயந்துட்டிருந்தேன்... கெளரவமான குடும்பம் நாங்க... இப்டி ஊர்கூடி வேடிக்க பார்க்கும்படி ஆயிப்போச்சே... நான் மன்னிப்புக் கேட்டுக்கிடுதேன், தம்பி அவனுக்காக. போதும், விட்ருங்க. செல்லமா வளந்தவன்... இப்டி சீரழியுதானே... மனசு தாங்கல ' என்று புலம்பினார்.
' நீங்க போங்க அண்ணாச்சி... அவன ஒண்ணும் செஞ்சுரமாட்டோம்... அனுப்பிச்சிடறோம் ' என்று சொல்லி விட்டார்கள்.
வீட்டுக் கதவு சாத்தியிருந்தது.
'லட்சுமி... லட்சுமி.. கதவத் திற ' என்ற அப்பாவின் சத்தத்தைக் கேட்டுக் கதவை ஒருக்களிக்கத் திறந்தாள்.
'என்ன இதுல்லாம்... ' என்று பதறியபடியே தார்சாவில் காலடியெடுத்து வைத்தாள்.
'மன்னிச்சுருங்க மதினி ' என்று சாஷ்டாங்கமாகக் காலில் விழுந்தார் சைலப்பன்.
சடாரென்று கால்களைப் பின்னுக்கு இழுத்துக் கொண்ட அம்மை வீட்டுக்குள் போய்விட்டாள்.
'செறுக்கியுள்ள, ஓடுல... ' என்று சங்கரன் மாமா எழுப்பிப் பிடரியைப் பிடித்துத் தள்ளிவிட்டான்.
வேஷ்டியைக் கையில் பிடித்துக்கொண்டே தளர்ந்த நடை நடந்துபோனார், சைலப்பன். கல்யாணியா பிள்ளை ஓடிவந்து கைலாகு கொடுத்துக் கூட்டிக்கொண்டு போனார்.
* * *
விக்ரமாதித்யன் நம்பி அப்பா திரும்பத்திரும்பச் சொன்னார்கள். அம்மாவுக்குத் திருநெல்வேலியை விட்டுவர இஷ்டமே இல்லை. ஆனால், அப்பா எப்பொழுதுமே தான்...
ஜெயமோகன்
எம்.ஏ. ரஹ்மான் தயாரித்த பஷீர் த மான் ஆவணப்படம் பார்த்துவிட்டு இறங்கிய ரசிகர்களில் ஒருவர் 'படம் எப்படி?' என்று கேட்கப்பட்டபோது "நல்ல படம். ஆனால், ஹீரோ சரியில்லை. மோகன்லால் நடித்திருக்கலாம்"
1
நூற்றாண்டு காணும் எந்த ஓர் எழுத்தாளனும் வேறு வழியில்லாமல் தொன்மமாக ஆகிவிட்டிருப்பான். பஷீரைப் பொறுத்தவரை அவர் வாழும்போதே அப்படி ஆகிவிட்டவர். அதற்கு அகக் காரணம் என்பது பஷீரின் ஆக்கங்களே. அவை முழுக்க முழுக்க அவரது குரலில் ஒலிப்பவை. பஷீரின் எப்போதைக்கும் உரிய பேசுபொருள் அவரேதான். 'வினீதனாய சரித்ரகாரன்' (பணிவுள்ள வரலாற்றாசிரியன்) எல்லாக் கதைகளிலும் தன் இளம் புன்னகையுடன் வந்து நின்று பேச ஆரம்பிக்கிறான். "அன்று காலைச் சூரியன் கிழக்கு வானத்தில் வந்து நின்று கீழே ஸ்தலத்தை நோக்கினான். வேறு விசேஷம் ஒன்றுமில்லை. எல்லாம் வழக்கம்போல" (ஸ்தலத்தே பிரதான திவ்யன்) என்று கதையைச் சொல்ல ஆரம்பிப்பவனே அவன்தான். பஷீர் எழுத்தாளரே அல்ல, கதை சொல்லி. பஷீரின் குரலில் அல்லாமல் அவரது கதைகளை நாம் நினைவுகூரவே முடிவதில்லை. வாசகன் பஷீரைத் தொடர்ந்து பார்த்தபடியே இருக்கிறான். பஷீர் திருடனாக, நாடோடியாக, சமையற்காரராக, கைஜோசியக்காரராக மாறுவேடமிட்டு அவன் முன்வந்துகொண்டே இருக்கிறார். மெல்ல மெல்ல அவன் நெஞ்சில் ஒரு படிமமாக ஆகி நாள்கள் செல்லச் செல்லத் தொன்ம வடிவம் ஆகிறார்.
பஷீரின் இந்தத் தொன்மத் தன்மையைக் கண்டுபிடித்த வணிகர் என டொமினிக் சாக்கோ கிழக்கேமுறியைச் சொல்ல வேண்டும். கேரள இலக்கியச் சூழலில் எழுபதுகளில் பஷீர் கிட்டத்தட்ட மறைந்தே போயிருந்த ஒரு காலகட்டம் இருந்தது எனச் சொன்னால் இன்று மலையாளிகளே நம்ப மாட்டார்கள். எழுபதுகளில் கேரளத்தில் இடதுசாரித் தீவிரவாதம் இலக்கியத்தை மூழ்கடித்தது. அதன் வீழ்ச்சி உடனடியாக இருத்தலிய அலையை உருவாக்கியது. இந்த மனநிலைகள் பஷீரைப் பொருட்படுத்துவன அல்ல. இவை அரசியலை மையமாக்கியவை. பஷீர் ஓர் 'அரசியலற்ற' பிராந்தியத்தில் நின்று எழுதிக்கொண்டிருந்தார். தன் அலைச்சலையும் குடும்பச் சூழல்களையும் வைத்து எளிய நகைச்சுவைக் கதைகளை எழுதும் ஒரு பழைய எழுத்தாளராக பஷீர் நோக்கப்பட்டார். தகழி ஓரளவுக்கு இக்காலகட்டத்திலும் கவனிக்கப்பட்டமைக்கு அவரது இடதுசாரித்தனம் காரணம். பி. கேசவதேவ் மேடை மேடையாகப் போய் கர்ஜனை செய்து தன்மீது மேலோட்டமான கவனத்தை ஈர்த்தார். உறூப் (பி.சி. குட்டிகிருஷ்ணன்), காரூர் நீலகண்டபிள்ளை ஆகியோர் மறக்கப்பட்டனர். பஷீர் பொருட்படுத்தப்படவில்லை.
இக்காலகட்டத்தில்தான் சாகித்ய பிரவர்த்தக சஹஹரண சங்கம் (இலக்கியவாதிகள் கூட்டுறவுச் சங்கம்) என்ற மாபெரும் பிரசுர நிறுவனம் அதன் தூண்களில் ஒருவராக இருந்த டி.சி. கிழக்கேமுறியை வெளியேற்றியது. அவர் டி.சி. புக்ஸ் என்ற இந்திய மொழிகளில் இன்று மிகப்பெரிய பிரசுர நிறுவனமாக விளங்கும் அமைப்பைத் தொடங்கினார். பஷீரின் நூல்களை வெளியிட ஆரம்பித்தார். பஷீரின் நூல்களை ஒரு ரூபாய் விலையில் சிறுசிறு பிரசுரங்களாக வெளியிட்டார் டி.சி. இவற்றைக் கேரளம் முழுக்க வழக்கத்துக்கு மாறான கடைகளில் வைத்து விற்றார். இந்நூல்களில் பஷீர் குறித்த அறிமுகக் குறிப்பு விரிவாகவே இருக்கும். இன்றுவரை கிட்டத்தட்ட அதே வரிகள் அவரது நூலறிமுகங்களில் தொடர்கின்றன. பஷீரின் நாடோடி + புரட்சிக்காரன் + சூஃபி படிமத்தை இவை கட்டமைத்தன. அவர் செய்த பதினாறுக்கும் மேற்பட்ட தொழில்கள் அவற்றில் பட்டியலிடப்பட்டிருக்கும். அன்றைய இருத்தலியல் அலை, இலக்கியம் வாசித்துப் பழகிய மேநிலைக் குழுவுக்கு உரியதாகவே இருந்தது. மசக்கிய கப்பையைச் சாளைமீன் சேர்த்து, குழைத்து உண்ணும் சாதாரண மக்களுக்கு ஏது இருத்தலியம்? டி.சி. கிழக்கேமுறி வழியாக பஷீர் அம்மக்களை நேரடியாகச் சென்று சேர்ந்தார். அவர்களைச் சிரிக்க வைத்தார். அவரது அழியாத இலக்கிய இடம் இவ்வாறாக உருவானதேயாகும்.
பஷீரைப் புரிந்துகொள்ள அக்கால நவீனத்துவத் திறனாய்வாளர்களால் இயலவில்லை என்பதை இப்போது வாசிக்கும்போது தெரிந்துகொள்ள முடிகிறது. கேரள வாசகர்களில் மிகப்பெரும்பான்மையினர் நுண்ணிய இலக்கிய ஆக்கங்களை உள்வாங்கும் திறனற்றவர்கள் என்பதே என் அவதானிப்பாகும். பல்வேறு அரசியலியக்கங்களால் இலக்கியக் களத்தில் கொண்டுவந்து கொட்டப்படும் பெரும் தொகையினர் இவர்கள். அதிகமாகப் பேசப்படுவதை வாசிப்பார்கள், மேலே தட்டுப்படும் கருத்துகளை எடுத்துக்கொள்வார்கள். ஆகவே, கேரள இலக்கிய விவாதங்களில் இலக்கியத்தின் மேல்தளத்து அரசியலே எப்போதும் இலக்கியம் என்ற தோரணையில் பேசப்படுகிறது. சீரிய இலக்கிய வாசகர்கள் தமிழகத்தின் அளவே இருப்பார்கள். அவர்களை இந்த லட்சக்கணக்கான பேர் கொண்ட திரை முற்றிலும் மறைத்துவிடுகிறது.
ஆகவே, இயல்பாகப் பொதுவாசகர்கள் பஷீரைப் புரிந்துகொண்டார்கள், கொள்கிறார்கள் என நான் எண்ணவில்லை. பஷீரை அவர்கள் புரிந்துகொண்டிருந்தார்கள் என்றால் பஷீருக்குச் சமானமான உலகத்தில் இயங்கிய காரூர் நீலகண்டபிள்ளை, பட்டத்துவிளை கருணாகரன், விகேஎன் போன்றவர்கள் மேல் அதேயளவுக்கு ஆழ்ந்த கவனம் இருந்திருக்கும், அப்படி இல்லை. பஷீர் கேரளம் முழுக்க எளிய வாசகர் நடுவே ஆழமான நேரடிப் பாதிப்பைச் செலுத்த ஆரம்பித்த பின்னரே இந்தப் பெரும்பான்மையினரான அரசியல் வாசகர்கள் அவரை அணுகினர். அவரது 'சூஃபி' படிமத்தைத் தாங்களும் ஏற்றுக்கொண்டு பேச ஆரம்பித்தனர். பஷீர் கேரளத்தின் நவீன இலக்கியத் தொன்மமாக மாறியது இவ்வாறுதான்.
எண்பதுகளின் தொடக்கத்தில் இந்தத் தொன்மமயமாதல் அதன் முழுவீச்சில் நடந்த காலகட்டத்தில் தான் நான் கேரளத்தில் இருந்தேன். தொடர்ச்சியான பத்திரிகைக் கட்டுரைகள் மூலமே இது நிகழ்ந்தது. பஷீரின் போப்பூரில் உள்ள வீடு, மங்கோஸ்டைன் மரம், சாய்வு நாற்காலி, கட்டன் சாயா, பீடி, மூக்குக் கண்ணாடி என வர்ணனைசெய்யும் கட்டுரைகள் மாதத்துக்கு மூன்று வீதம் வெளியிடப்பட்டன. இக்காலகட்டத்தில் பஷீர் அவரது முதுமையை எய்திக் கால, இட போதத்தை இழந்து கோர்வையில்லாமல் பேசுபவராக ஆனார். அதை ஞானமொழிகளாக ஆக்கும் கற்பனை வளம் இதழியலாளர்களுக்கு இருந்தது. இத்தகைய கட்டுரைகளைப் பற்றி அப்போதே பலரும் கிண்டல்செய்து எழுதியிருக்கிறார்கள். கட்டுரையாளர் கோழிக்கோட்டில் இருந்து கிளம்பும்போதே தொடங்கிவிடும் கட்டுரைகள் விரிவான வர்ணனைக்குப் பின் பஷீர் சொல்லும் உதிரி வரிகளுக்குத் தத்துவ அர்த்தம் அளித்துக் கற்பனாவாதச் சொற்களில் முடியும். 'போப்பூர் சுல்தான்' 'மலையாளத்தின்றெ சூஃபி' போன்ற சொல்லாட்சிகள் உருவாகிச் சலித்து ஒருகட்டத்தில் எம். கங்காதரன் போன்ற திறனாய்வாளர்கள் இச்சொற்களை மலையாளத்தில் தடைசெய்ய வேண்டும் என்று சொல்லும் அளவுக்குச் சென்றது.
இதேயளவுக்கு ஓவியர் நம்பூதிரி வரைந்த பஷீரைப் பற்றிய கோட்டோவியங்களும் பங்களிப்பாற்றின. அவை பஷீர் ஒருவரல்ல, ஏராளமான ஆளுமைகளின் தொகை என்ற சித்திரத்தை உருவாக்கி இன்றுவரை நிலைநிறுத்தியிருக்கின்றன. எம்.ஏ. ரஹ்மான் தயாரித்த பஷீர் த மான் ஆவணப்படத்துக்காக வரையப்பட்டவை இவை.
பஷீர் மலையாள இலக்கியத்தின் வாழும் தொன்மமாக ஆன பின்னர் அதிலிருந்து அவரது கதைகளுக்குள் சென்று அர்த்தம்கொள்ளும் போக்கு வாசகர்கள் நடுவே உருவாயிற்று. பஷீரின் கதாபாத்திரங்களைத் தேடி நிருபர்கள் காமிராக்களுடன் சென்றார்கள். பாத்துமாவிடமே அவரது ஆட்டைப் பற்றிக் கேட்டுக் கட்டுரைகள் எழுதினார்கள். மெல்ல மெல்ல நாம் இன்று காணும் 'மூலவிக்ரஹ'த் தன்மை பஷீருக்கு உருவாயிற்று. இப்போது நூற்றாண்டுக் கொண்டாட்டங்களில் அது உச்சமடைந்திருக்கிறது. பஷீரைக் கொண்டாட அவரைப் படிக்கவே வேண்டியதில்லை என்கிற அளவுக்கு.
இது பஷீரை அணுகுவதற்கு மிகப் பெரிய தடைகளை உருவாக்கும் அம்சம் என்று சொல்ல வேண்டியதில்லை. சென்ற காலங்களில் பஷீர் பற்றி உற்சாகமாகப் பேசிய பல மலையாள வாசகர்களிடம் விவாதித்திருக்கிறேன். பஷீரின் ஒரு சொல்லாட்சியைக்கூட அவர்களால் நினைவுகூர்ந்து சொல்ல முடியவில்லை. அவர்கள் அத்தனை பேருமே அவர் சூஃபி என்றும் சிரிக்கும் கலகக்காரர் என்றும் சொன்னார்கள். அந்த முடிவுக்கு எப்படி வந்துசேர்ந்தீர்கள் என்று கேட்டபோது பஷீரின் கதைகளுக்கு உருவக வாசிப்புக் கொடுத்து, கோட்பாட்டு விளக்கம் அளிக்கத் தொடங்கினார்கள். அதைவிடப் பஷீர் நூல்கள் மேல் சாணியடிக்கலாம். அவர்கள் எவருமே பஷீரை அறிந்தவர்களல்ல என்றே எண்ணுகிறேன்.
இன்றைய மலையாளப் பொதுவாசகன் படைப்பில் அரசியல் நம்பிக்கைகள் மற்றும் கோட்பாடுகளை மட்டுமே எடுக்கத் தெரிந்தவன். அவனால் பஷீரை அணுகவே முடியாது. அவன் பஷீர் பற்றி வைக்கும் விளக்கங்களையே வாசிக்கிறான். அதனால்தான் பஷீர் பற்றிக் கடந்த இருபதாண்டுகளில் ஒரு புதிய வாசிப்புகூட மலையாளத்தில் நிகழவில்லை. ஒரே விதிவிலக்கு, கல்பற்றா நாராயணன் எழுதிய "ஏதிலையும் மதுரிக்குந்ந காடுகளில்..." என்னும் கட்டுரை. அது பஷீரை ஒரு நடையியலாளராக (ஷிtஹ்றீவீst) மட்டுமே அணுகி அவரது சொல் விளையாட்டுகளை நோக்கி நம்மைக் கொண்டுசெல்கிறது.
2
பஷீரின் கதைகள் வலுவான மையக்கரு கொண்டவை அல்ல. திட்ட வட்டமான கதைக்கட்டு மானம் உடையனவல்ல. ஆழமுள்ள கதைமாந்தரும் அவர்கள் சுமக்கும் மதிப்பீடுகளும் அம்மதிப்பீடுகள் மோதும் நாடகீயத் தருணங்களும் அவற்றில் இல்லை. புனைவுத் தருணங்கள் கவித்துவத் தரிசனத்தின் ஒளியுடனோ தத்துவ தரிசனத்தின் உக்கிரம் கொண்டோ வெளிப்படுவதில்லை. நாம் எந்த அம்சங்களினால் தல்ஸ்தோயை, தஸ்தயேவ்ஸ்கியை, மாப்பஸானை, தாமஸ் மன்னை இலக்கிய மேதை என்கிறோமோ அந்தக் கூறுகளைப் பஷீரில் காண முடியாது. பஷீரில் என்ன இருக்கிறது, வெறும் சுயபுராணமும் அசட்டு நகைச்சுவையும் எட்டாம் கிளாஸ்தரத்து மலையாளமுந்தானே என ஒரு விமரிசனக் குரல் எழுந்தது மலையாளத்தில் (உப்பூப்பான்றே குழியானகள் என்ற நூல். கெ. ரகுநாதன்). வழக்கமான ஒரு வாசகன் பஷீரைப் பார்த்தால் என்ன கிடைக்குமோ அதுதான் அந்நூலாசிரியருக்கும் கிடைத்தது. அவருக்குப் பொருட் படுத்தும்படியான ஒரு பதில் அங்கே சொல்லப்படவில்லை.
பஷீரின் ஆக்கங்கள் அவற்றின் மொழிநடையால் மட்டுமே பேரிலக்கியங்களாகின்றன. தன் நாற்பது வயதுவரை 'அனல் கக்கும்' இலக்கியங்களையே எழுதி வந்ததாகவும் ஒரு கட்டத்தில் அவற்றையெல்லாம் துணிந்து கொளுத்திவிட்டு இன்றைய நடைக்கு வந்ததாகவும் பஷீர் எழுதியிருக்கிறார். பஷீரின் தலைக்கு பிரிட்டிஷ் அரசு விலைவைத்த, திருவிதாங்கூர் அரசு அவரைச் சிறையில் அடைத்த எழுத்துக்கள் எதுவுமே இன்று கிடைப்பதில்லை. பஷீர், பஷீராக ஆன பிறகுள்ள எழுத்துக்களே இன்று கிடைக்கின்றன.
பஷீரின் முந்தைய காலகட்டத்தின் எச்சம் என்று சப்தங்ஙள் குறுநாவலைச் சொல்லலாம். அது ஒருவகையில் எதிர்ப்பு ஓங்கிய ஆக்கம். அனல் இருக்கிறது. இன்றைய வாசிப்பில் அது பலவீனமான ஒரு பஷீர் படைப்பாகவே தெரிகிறது. அதில் உள்ள அமைப்புக்கு எதிரான அராஜக நோக்கு மட்டுமே இன்றைய பஷீரில் ஒட்டும்.
பஷீரின் ஆக்கங்களில் இன்று நமக்குக் கிடைக்கும் குறிப்பிடத்தக்க ஆரம்பகாலப் புனைகதை என்பது பால்யகால சகி தான். இது மிக எளிமையான ஒரு காதல் கதை. எளிய நேரடியான மொழியில் சொல்லப்பட்டிருக்கிறது. பஷீர் இரண்டு விஷயங்களை முற்றாகத் தவிர்த்திருக்கிறார். ஒன்று சூழல் விவரணை. அக்கால எழுத்துக்களில் இது மிக அதிகம். மஜீதின் வீடும் குடும்பமும் சரி சுஹராவின் குடும்பமும் சரி எளிய வேகமான கோட்டுச்சித்திரங்கள் போலத்தான் நமக்கு அறிமுகமாகின்றன. அதேபோல மன உணர்வுகளை விரிவாகச் சொல்வதையும் பஷீர் தவிர்த்துவிடுகிறார். பிற்பாடு பஷீரில் உருவாகிவந்த நுண்ணிய மொழி நிகழ்வுகள் எதுவுமே இந்நாவலில் இல்லை. ஆகவே, இந்நாவல் இன்றைய வாசிப்புக்கு ஒரு கதைச்சுருக்கம் போலவே உள்ளது.
ஆயினும் இதை இன்றும் முக்கியமான ஆக்கமாக நிலைநாட்டும் அம்சம் இதில் மிக இயல்பாக உருவாகி வந்திருக்கும் படிமத்தன்மை. இந்த எளிய காதல் கதையை நெஞ்சுருக்கும் கவிதையாக ஆக்குவது இந்த அம்சமே. வாழ்க்கையைத் தேடி வீடு விட்டிறங்கித் தோற்றுத் திரும்பிவந்து மஜீத் நட்டுவளர்க்கும் ரோஜாத் தோட்டம் ஓர் உதாரணம். சுஹரா ஏதோ சொல்லவந்து சொல்லாமலேயே இறக்கிறாள். 'அவள் சொல்லவந்தது என்ன?' என்ற வினாவுடன் நாவல் முடியும்போது அந்தக் கடைசிச் சொல் ஒரு பெரும் படிமமாக ஆகிவிடுகிறது.
பஷீரின் நடை இதில் உருவாகவில்லை என்று சொன்னேன், ஆனால், உருவாக ஆரம்பித்துவிட்டிருந்தது என அதில் மஜீத் - சுஹரா உரையாடல்கள் காட்டுகின்றன. மெல்லிய புன்னகையுடன் மட்டுமே மீண்டும் மீண்டும் வாசிக்கத்தக்க உரையாடல். உலகமே தெரியாத முஸ்லிம் பெண்ணின் குழந்தைத்தனமான மனம். அந்தக் கள்ளமின்மையில் தன் இளமையைக் கண்டுகொள்ளும் இளைஞன். அவர்களின் உள்ளங்கள் மாறிமாறிப் புன்னகைகளைப் பரிமாறிக்கொள்வது அந்த உரையாடல்களில் தெரிகிறது. அதுதான் பஷீர். அங்கிருந்து முளைத்துத்தான் அவர் கிளை விரித்தார்.
பிற்கால பஷீரின் கதைகளில் எப்போதுமே அந்தப் புன்னகை இருந்துகொண்டிருக்கிறது. மஜீத், சுஹரா போன்ற கதாபாத்திரங்களை நாம் பிற்பாடு பஷீரின் ஆக்கங்களில் காண முடிவதில்லை. நாம் காண்பது நகைச்சித்திரங்களையே (சிணீக்ஷீவீநீணீtuக்ஷீமீ). மண்டன் முத்தபா, பொன்குரிசு தோமா, ஒற்றைக்கண் போக்கர், ஆனவாரி ராமன்நாயர், சாத்தங்கேரி மனைக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு, சைனபா, எட்டுகாலி மம்மூஞ்ஞு போன்று எல்லாக் கதாபாத்திரங்களும் பஷீரின் புன்னகையால் கோணலாக்கப்பட்டுள்ளார்கள். மஜீத் வாழ்ந்த நிலம் அதேபோலத் திரிபுகொண்டு 'ஸ்தலம்' ஆக மாறிவிட்டிருக்கிறது. அதன்பின் இந்த ஸ்தலத்தில் துயரமே இல்லை. சிக்கல்களும் மோதல்களும்கூட இல்லை. கொண்டாட்டம் மட்டுமே உள்ளது.
உலகமெங்கும் நகைச்சித்திரங்களை உருவாக்குபவர்கள் அவற்றை விமரிசனம் கலந்து கேலிச்சித்திரங்களாக (சிணீக்ஷீtஷீஷீஸீ) ஆக்குவதே வழக்கம். பஷீர் அதிலிருந்து முற்றாக வேறுபடுகிறார். பஷீரில் கேலியே இல்லை. காரணம், அவர் எதையுமே விமரிசனம் செய்வதில்லை. பஷீர் நாம் நம்மைச் சுற்றிக் காணும் எதிர்மறைக் கூறுகள் ஏதுமில்லாத ஓர் உலகத்தை உருவாக்கி நம்முன் காட்டுகிறார், அவ்வளவுதான். அது அவரது சிரிப்பு மூலம் நிகழ்கிறது. அந்தச் சிரிப்பு பஷீரின் மொழியிலேயே உள்ளது. பஷீரின் கலையின் சாரம் அதுவே.
கேலி இல்லாததனால் சம்ஸ்கிருதத்தில் பிரஹஸனம் என்று சொல்லப்படும் கேலிக்கூத்துத் தன்மையும் பஷீரின் கதைகளில் இல்லை. எந்த விஷயமும் தரம் தாழ்த்தப்படுவதில்லை, திரிக்கப்படுவதில்லை. ஏன் ஒன்றுக்குக் கீழ் ஒன்றாக வைக்கப்படுவதுமில்லை. நகைச்சுவையாக எழுதிய பிற எழுத்தாளர்களிடமிருந்து பஷீர் மாறுபடுவதும் இங்கேதான்.
ஓர் உதாரணம் மூலம் சொல்லலாம். 'முச்சீட்டு களிக்காரன்றே மகள்'. மகாபுத்திமானும் சந்தையையே தன் வாயடி கையடியால் அமுக்கி வைத்திருப்பவனுமாகிய மூன்று சீட்டு ஆட்டக்காரன் ஒற்றைக்கண் போக்கரின் மகள் சைனபா. அவளும் 'சில்லறைக்காரி' அல்ல. ஆற்றுக்கு மறுபக்கம் சந்தைக்குக் கொண்டுபோக வைத்திருக்கும் வாழைக்குலைகளில் சிலவற்றை அவ்வப் போது தூண்டில் மூலம் தன்னை நோக்கி நீந்திவரச் செய்யும் கலை தெரிந்தவள்தான். மண்டன் முத்தபாவுக்கு ஒன்றும் தெரியாது, திக்குவதைத் தவிர.
ஆனால், மண்டன் முத்தபா மீசையில் மணிகட்டிய கிண்ணன்கள் தோற்கும் மூன்றுசீட்டு ஆட்டத்தை ஆட, போக்கர் முன்சென்று நெளிந்து நிற்கிறான். ஆட்டம் நடக்கிறது. மண்டனுக்குத் தொடர் வெற்றி. பந்தயப் பொருளான சைனபாவை அவன் மணக்கிறான். போக்கருக்கு உலகப்போக்கே புரியவில்லை. அல்லாவுக்கு என்ன ஆயிற்று? குழம்பிப்போய்விட்டாரா என்ன? ஆனால், உண்மையில் அல்லாவின் நியதிப்படியே எல்லாம் நடக்கிறது. மகாபுத்திசாலியின் மகள் மடையனைக் காதலித்துத்தானே ஆக வேண்டும்? சைனபா சீட்டுகளில் போட்ட ரகசிய முத்திரைதான் போக்கரை மண்டனாக்கிவிட்டது.
என்றும் எப்போதும் மண்ணில் நிகழும் அந்த மூன்று சீட்டு ஆட்டத்தைத்தான் பஷீரும் சொல்கிறார். ஆனால், சொல்லும் விதத்தில் அது வலியில்லாத விளையாட்டாக ஆகிவிடுகிறது. "கர்த்தாவாகிய ஏசுகிறிஸ்து செத்தது மரச்சிலுவையில். பின்னே எதுக்கு சர்ச்சுக்குப் பொன் சிலுவை?" என்ற பொன்குரிசு தோமாவின் தரிசனம் அந்த விளையாட்டின் உச்சமாகத் திரண்டுவருகிறது.
ஜெ. சைதன்யா கதை சொல்லுவாள். "..அப்றமா அந்தத் திவிடன் மாமா திவிடிக்கிட்டு ஓடினாங்களாம். அப்போ போலீஸ் மாமா தொப்பி போட்டுகிட்டு வேகமா அவங்களைத் தொரத்தினாங்களாம். போலீஸ் மாமா டேய் நில்லுடா திவிடான்னு சத்தம் போட்டாங்களாம்.....திவிடன் மாமா நிக்கமாட்டேன் நீ என்னைய அடிப்பேன்னு சொல்லிட்டே ஓடினாங்களாம்..." போலீசும் திருடனும் மாமாக்களாக மாறி உற்சாகமாகத் தங்கள் கடமைகளைச் செய்யும் ஜெ. சைதன்யாவின் உலகில் வன்முறைக்கு இடமில்லை. எல்லாம் விளையாட்டுகள் மட்டுமே.
பஷீரின் உலகமும் அத்தகையதே. சொல்ல வரும் கதைகளை எல்லாம் குழந்தையின் கண்களால் பார்க்க ஆரம்பித்துவிடுகிறார். அவ்வகையில் நோக்கும் வாசகர் பஷீருடன் ஒப்பிடத்தக்க படைப்பாளி லூயிஸ் கரோல் மட்டுமே என உணரலாம். பஷீரின் கதையில் கதையைச் சொல்வதும் சரி, கதைநாயகனும் சரி, பஷீர் தான்- குழந்தை அல்ல. ஆனால், சொல்லும் விதமும் சொல்லும் கோணமும் ஆலீஸ§க்குச் சமானமாகவே உள்ளன. பஷீரின் மொழியாட்டம்கூடப் பலவகையிலும் லூயிஸ் கரோலுடன் ஒப்பிடத்தக்கது. ஆம், பஷீர் தன்னை ஒரு குழந்தையாக ஆக்கிக்கொண்டு தன் புனைவுலகை உருவாக்கியிருக்கிறார்.
லூயிஸ் கரோலின் தரிசனங்கள் அவரது மொழிவிளையாட்டிலேயே வெளிப்படுகின்றன. எது உண்மையெனக் கேட்டால் யார் முக்கியம் என்று பதில் சொல்லும் பூசணிக்காய் போல. பஷீரும் அப்படித்தான். அவரது உரையாடல் வரிகளின் வழியாக அவரது தரிசனங்களின் உலகை எளிதாகச் சென்றுசேரலாம். அது ஒரு தனிப் பயணம்.
3
"ஆனைத்தூவல் ஒரு திருட்டின் கதை! கொலைக் கொம்பனாகிய ஒரு ஆனை! மிதித்து அரைத்தும் குத்தியும் அவன் ஒன்றிரண்டு யானைக்காரர்களைக் கொன்றிருக்கிறான். அவனுடைய வாலில் உள்ள ஒரு தூவலைத் திருட வேண்டும். திருடுவது என்று சொன்னால் யாருமே பார்க்கக் கூடாது. யானைக்காரர்களும் வாப்பாவும் உம்மாவும் யாரும்...ஆசாமி நானேதான். ஒரு ஆனை அல்ல. மூன்று. இரண்டு பிடியும் ஒரு கொம்பனும். அந்தக் கொம்பனின் வாலில் உள்ள முடிதான் தேவைப்படுகிறது. என்னுடைய சொந்தத் தேவைக்காக அல்ல. ராதாமணிக்காக...." என்று தொடங்குகிறது பஷீரின் 'ஆனப்பூட' என்னும் கதை. யானையின் வால்மயிரை யானையின் தூவல் என்று எண்ணிக்கொண்ட பஷீரின் இளமைப்பருவம். புத்தகத்தில் வைக்கும் மயில்தூவலைப் போன்றுதானே யானை முடியும் இருக்கிறது? அப்படிச் சொல்லிப் பள்ளிவட்டாரத்தில் ஆனப்பூட எனப் புகழ் அடைந்த கதாநாயகன் கதை சொல்ல ஆரம்பிக்கிறான்.
ஆனப்பூட ஒரு குழந்தைக் கதையல்ல. ஆனால், அதன் மொழி அப்படியே ஒரு குழந்தைக் கதைக்குரியது என வாசகர் காணலாம். ஒரு எட்டுவயதுப் பையன் உற்சாகமும் களங்கமின்மையும் கலக்க, சவடாலடிக்கும் தோரணையிலேயே மொத்தக் கதையும் அமைந்துள்ளது. இந்த பாணி அக்கதைக்கு அலாதியான உற்சாகத்தை அளித்துவிடுகிறது. தம்பி அப்துல்காதர் பாயில் படுத்து மூத்திரம் பெய்கிறான். ஆகவே, அண்ணா பஷீர் யானைக்கு அடியில் நுழைந்து சென்றாக வேண்டும். அப்துல் காதர்தான் ஒருகால் பலவீனமான 'சட்டுகாலன்' ஆயிற்றே. சண்டைகளில் நல்ல காலை ஊன்றி மெல்லிய காலை அந்தரத்தில் சுழற்றி அவன் அடிக்கும் அடிகளையும் பஷீர் வாங்கிக்கொண்டாக வேண்டும். ஒரே ஒரு முறை ஊன்றிய காலில் ஒரு அடி அடித்து அவனை விழவைத்தபோது பஷீருக்குத்தான் அடி கிடைத்தது. இந்தக் கொடுமைகளுக்குக் காரணபூதமாக இருப்பவள் சமையற்காரி நாணி. அவளுடைய முலையைச் சிறு வயதில் பஷீர் குடித்தான் என்பதனால் அவள் அவனைப் பற்றி என்ன சொன்னாலும் அது உண்மையே. அவளது மகன் நத்து தாமுவை பஷீர் கல்லால் அடித்தால் அதற்கும் அடி - கல் கூடையிலேயே பட்டது என்றாலும் இந்தக் கொடுமைகளைத் தீரமாக எதிர்கொண்டு, தோழி ராதாமணிக்காக உயிரைப் பணயம் வைத்து ஆற்றுவெள்ளத்தில் மூழ்கிச்சென்று கொம்பன் யானையின் வாலைக்கடித்து அதை அலறவைத்தான் பஷீர். ஒரே களேபரம். கடைசியில் தேடினால் பஷீரைக் காணவில்லை. கடைசியில் வீடு திரும்புகிறான். "உம்மா என் வேட்டி போச்சு" "எல்லாருக்கும்தான் வேட்டி போச்சு" என்றாள் உம்மா. குற்ற உணர்வு தாளாமல் வாப்பாவிடம் ஒரு ஒப்புதல் "வாப்பா நான் ஆனையைக் கடிச்சேன்!" "என்னது, நீ கொம்பனைக் கடிச்சியா?" அன்பின் சிரிப்பில் முடியும் இந்தக் கதை ஒரு தேர்ந்த வாசகனில் பலவிதமான நுண் அதிர்வுகளை உருவாக்கக் கூடியது. ஆனால், கதையை ஒரு நல்ல குழந்தைக் கதை என்றும் சொல்லிவிடலாம்.
பின்னர் கதாநாயகன் குழந்தையாக இல்லாத கதையிலும் குழந்தைநோக்கு இயல்பாக வந்துசேர்கிறது. "மந்திரச் சரடு வருவது அப்துல் அஸீஸின் வழுக்கைத் தலையில் ஒரு மாம்பழம் ப்டுக்கென்று விழுந்த நாளில் தான்" (மந்திரச் சரடு) மாம்பழத்தை அது மண்ணில் விழுவதற்கு முன்னரே அப்துல் அஸீஸ் போய்ப் பிடித்தாக வேண்டும். இல்லாவிட்டால் அதை கான் எடுத்துத் தின்றுவிடுவான். அவனுக்கு மாம்பழம், பலாப்பழம் எல்லாமே பிடிக்கும். கான் ஒரு ஆண்நாய். "கானை பூட்டியிட்டால் பிறகு செவிதலை கேட்க முடியாது. அய்யோ பொத்தோ என்று கதறல். ஆகவே பூட்டுவதில்லை. கான் இளம்சிவப்பு நிறத்தில் பெரிய வட்டங்கள் கொண்ட வெளுத்த சுந்தரன். அவன் ஒரு காதல் தோல்வியின் துயரத்தில் இருக்கிறான்..."
ஆகவே, ஹிந்து ஸ்திரீகளை விரும்பிக் கடிக்கும் பழக்கம் கானுக்கு இருக்கிறது. மாளு என்ற ஹிந்து நாயுடன் முஹபத் ஆகி அது மத வேற்றுமையால் கைகூடாமல்போன வெறி. வேறுவழியில்லாமல் அஸீஸ் ஒரு மந்திரச் சரடை வாங்கி கானின் கழுத்தில் கட்டுகிறார். கழுத்தில் சரடு கட்டப்பட்டதும் கான் ஆளே மாறி முஸ்லிம் ஸ்திரீகளைக் கடிக்க ஆரம்பிக்கிறான். "உம்முசுல்மயின் உம்மா கொண்டாட்டமாக நடந்து வரும்போது கான் பாய்ந்து காலில் ஒரு கடி வைத்தான். நியாயமான கடி! உம்முசுல்மாவின் உம்மா "றப்பே -ன்னே கொந்நே ஓடிவாயோ.."என்று பெரியவாயில் கதறினாள். அப்துல் அஸிஸ§ம் ஓடிப்போனார். கழுத்தில் மந்திரச்சரடு கட்டி கான் ஸிம்ப்ளனாக நின்றுகொண்டிருந்தான்..."
பஷீரின் நடையில் வரும் இந்த வாய்மொழி வேடிக் கைகளைக் கவனிக்க வேண்டும். மாம்பழம் 'ப்டுக்கேந்நு' விழுகிறது. உம்மா 'ஆஹோஷமாக' வருகிறாள். கான் 'ஸிம்ப்ளனாக' நிற்கிறான். இவ்வாறுதான் பஷீரின் நடை உருவாகிவருகிறது. அது நம்மையும் ஒரு குழந்தையாக எண்ணி நம்முடன் கொஞ்சிச் சிரித்துப் பேச முற்படுகிறது. 'செவிதலை கேட்கில்ல' என்ற நாட்டுப்புறச் சொல்லாட்சியைச் சாதாரணமாக பஷீர் சொல்லிச் செல்கிறார். பஷீரின் ஆகச்சிறந்த படைப்பான பாத்தும்மாவின் ஆடு இந்த அம்சங்கள் மட்டும் அடங்கிய முழுமையான ஆக்கம். அதில் வேறு ஒன்றுமே இல்லை! பஷீரின் இந்த அம்சத்தை மொழியாக்கம் செய்வது மிகமிகக் கஷ்டமான காரியம். ஆனால், இதுதான் பஷீர்.
ஒரு சிறிய நிகழ்ச்சியை உதாரணமாகச் சொல்லலாம். பஷீர் மனைவி குழந்தைகளுடன் பஸ் ஏறிக் கோழிக் கோட்டுக்குச் செல்கிறார். வீட்டிலிருந்தே குடும்பத் தலைவனின் அலம்பல்கள் ஆரம்பம். பொருட்களை எடுப்பது, உடைமாற்றுவது எல்லாவற்றைப் பற்றியும் உரத்த குரல் கட்டளைகள். அறிவுரைகள். குழந்தைகளுக்கு அதட்டல்கள். பஸ் ஏறியதுமே "ஃபாபி மேலே கம்பியைக் கெட்டியாகப் பிடித்துக்கொள். மக்கு மாதிரி ஆடி விழுந்துவைக்கக் கூடாது..." சொல்லி முடிப்பதற்குள் 'ப்படே' என்று விழும் ஒலி. விழுந்தது பஷீர்தான். (மாந்திரிகபூச்ச).
எளிமையான இந்த நகைச்சுவைக்கு ஓர் இலக்கியப் படைப்பில் என்ன இடம்? பஷீர் சொல்வது குழந்தைகளுக்கான கதை என்ற பாவனையில். அங்கே ஒரு 'பெரிய ஆள்' நிலைதடுமாறி விழுவதைப் போல உற்சாகமான விஷயம் வேறு ஏதுமில்லை. முதிர்ந்தவர்களின் உலகம், கட்டளையிடும் உலகம், குப்புற விழுந்து கிடக்கிறது. அதன் பிறகுதான் கதையே ஆரம்பம். இந்தக் 'குப்புறச்சரித்தல்' பஷீரின் எல்லாக் கதைகளிலும் உண்டு. நாய்க்கு 'கான்' என்று பெயர் வைத்த பிரக்ஞை அதுதான். எது வெளியே மிக முக்கியமோ அது உள்ளே கவிழ்க்கப்பட்டிருக்கும். 'ஆனைவாரி' என்றால் யானைமீதுள்ள அம்பாரி என்று பொருள்கொள்பவர்கள் பெரியவர்கள். பஷீரின் சிறியவர்களின் உலகில் ராமன் நாயர் காட்டுக்குப் போய்க் குவிந்துகிடக்கும் சாணி என்று தூங்கும் யானையை மண்வெட்டியால் வாரப்போய் அந்தப் பட்டம் பெறுகிறார்.
தன்னைத் திருடன் என்று முத்திரை குத்தும் 'ஸ்தலத்துக்கு' எதிராக ஒரு நாசகார ஆயுதத்துடன் பொன்குரிசு தோமா வந்து சேர்கிறான். சொரியன்புழு! அதை வீசிவிடுவான். சொரிந்து சொரிந்து சாக வேண்டியதுதான்! ஸ்தலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைகிறது. ஆனவாரி ராமன்நாயர் பீதியுடன் சொன்னார், "ச்ச்சொரியன்புழு!" மண்டன் முத்தபா சொன்னான், "ஜ்ஜ் -ஜ்ஜ் -ஜ்ஜொரியன்புடு!" சாத்தங்கேரி மனைக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு அவரது ராஜதந்திர மூளையை முழுக்கப் பயன்படுத்தி உழைக்கும் வர்க்கத்தை அணிவகுக்கச் செய்து போலீஸ் நிலையம் நோக்கி ஓர் ஊர்வலத்தை நடத்துகிறார்- அதே வேகத்தில் திரும்பிவருவதற்காக.
பஷீரின் உலகில் அணுகுண்டுகூட 'ஜ்ஜொரியன்புடு'ஆகிவிடுகிறது. பொதுவாகக் கேரள வாசகர்களுக்குத் தெரியும், சாத்தங்கேரி மனைக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு இ.எம். எஸ்தான் என. ஆனவாரி ராமன் நாயர் ஆர்.எஸ்.பி தலைவர் சி.என். ஸ்ரீகண்டன்நாயர் என்பார்கள். பிரம்மசாரியான ஆனவாரிக்குப் பெண்களைப் பிடிக்காது. ஆகவே, ஆற்றில் நிறுத்தப்பட்டிருக்கும் பெண்யானைமீது மண்கட்டிகளை விட்டெறிந்து தன் ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டு இன்பக்கிளர்ச்சியும் அடைகிறார். இவ்வாறு நுண்ணிய நகலி உருவங்களைப் படைத்தபோதும் பஷீர் அவர்களின் அரசியல், கருத்தியல் எதையும் அவற்றை வைத்துக்கொண்டு கிண்டலோ விமரிசனமோ செய்யவில்லை. அவரது குழந்தைக்கு அதெல்லாம் பெரிதாகப்படவும் இல்லை. அந்தப் பெரியவர்கள் கால்தடுமாறி 'ப்படே' என்று விழும் தருணங்களில் கெக்கலி கொட்டிச் சிரிப்பது மட்டுமே அதன் நோக்கமாக இருக்கிறது
'சீரியஸ்நெஸ்' கால்தடுமாறி விழுந்து கிடக்கும் குழந்தை உலகில் வைத்துச் சொல்லப்படும் கதைகள் இவை. பஷீரின் மொழி கொள்ளும் எல்லா நெளிவுகளும் சுளிவுகளும் இதற்காகவே. சாதிமதம் எல்லாமே விழுந்து விழுந்து சிரிப்பதற்குரியவை. ஏன், அங்கே அல்லாவேகூட ஒரு மாபெரும் வேடிக்கைதான். சொல்லிய விஷயத்தின் வழியாக பஷீர் சூஃபி ஆகவில்லை, சொல்லும் நடை வழியாகவே அவர் சூஃபி.
4
நாடோடியான பஷீருக்கு இந்தியப் பிரிவினை பிடிக்கவில்லை. ஊருக்குத் திரும்பிப் புத்தகக் கடை வைக்கிறார். மூளை குழம்பி அப்படிச் செய்யவில்லை, அப்படிச் செய்ததனால்தான் மூளை குழம்புகிறது. கையில் கத்தியுடன் "அவன் பல பேர்களில் வருவான்! விடமாட்டேன்" என்று உறுமி நிற்கிறார். எம்.டி. வாசுதேவன்நாயரைப் பார்த்து "அவன் எம்.டி. வாசுதேவன்நாயரின் வடிவிலும் வருவான்!" என்கிறார். உஸ்தாதை ஒருவழியாகக் கையைக் காலைக் கட்டித் தூக்கி எடுத்துக்கொண்டுபோய் ஆயுர் வேத சிகிச்சைக்கு ஆளாக்குகிறார்கள். அதில் முக்கிய அம்சமே கண்களில் அஞ்சனம் எழுதுவதுதான். நாழி குறுமிளகைச் சுக்கில் அரைத்து மையாக்கிக் கண்களில் பூசுவதுபோல் இருக்கும். அதை மூக்கில் ஏற்றும் நஸ்ய சிகிச்சையும் உண்டு. உஸ்தாத் தெளிவாகப் பேசுகிறார், சிரித்து அருகே அமரும்படி உபசரிக்கிறார். வலிய கைகளில் ஆள் அகப்பட்டதுமே பிடித்து அஞ்சனம்பூசி நஸ்யம் ஏற்றிவிடுகிறார். உலகமே மூளை குழம்பி இருக்கும்போது அப்படிச் செய்வது அவரது கடமை.
வேறுவழியில்லாமல் அவரை நூலன்வாசு அல்லது கடாரி வாசு என்ற எம்.டி. வாசுதேவன்நாயர், என்.பி. முகம்மது என்கிற மம்மு, எஸ்.கெ. பொற்றெகாட், நடிகர் சத்யன் ஆகியோர் அடங்கிய கும்பல் வலுக் கட்டாயமாக நிக்காஹ§க்கு ஆளாக்குகிறது. துணிந்த மனத்துக்குப் பெயர் ஃபாபி. பார்கவி நிலையம் படத்துக்குக் கிடைத்த சன்மானத்தில் ஒரு காட்டுத் தோட்டம் போப்பூர் கடற்கரையருகே வாங்கப்பட்டு பஷீர் அங்கே சுல்தானாக ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறார். ஸாஹினா பிறந்து பஷீர் அவளுடைய ஒன்றுக்கும் உதவாத மொட்டைத்தலை 'ற்றாற்றா' ஆக மாறுகிறார். மங்கோஸ்டைன் மரம் நடப்படுகிறது. அதன் கீழே சாய்வு நாற்காலி போடப்பட்டு பாதுஷா பீடிக்கட்டு கடும் சாயாவுடன் வந்து அமர்கிறார்.
பஷீரின் புனைவுலகின் சிறந்த படைப்புகளில் பெரும்பாலானவை இக்காலகட்டத்துக்குப் பின் எழுதப்பட்டவை என்பதைக் கவனிக்கலாம். பாத்துமாவின் ஆடு கூட இக்காலத்து சிருஷ்டியே. 'விஸ்வவிக்யாதமாய மூக்கு', 'ன்றுப்பாப்பக்கொரானேண்டார்ந்நு' முதலிய கதைகள் எழுதியபோது பஷீரில் இருந்த சிறு அளவு உலக விமரிசனம்கூட இப்போது இல்லாமலாகிறது. இந்த உலகம் சிரிப்பதற்கன்றி வேறெதற்கும் பயன்படாதது என்று பஷீரின் மொழியில் துயிலெழுந்த அக்குழந்தை கண்டடைந்தது. "ற்றாற்றா, தா பீப்ளி பீச்ண மிஸ்கீன்!" என்று தனிமொழி பேசும் ஸாஹினா பஷீரில் செலுத்திய பாதிப்பு மிக அபூர்வமானது என இப்போது படுகிறது. அவளுடைய கண்கள் வழியாக பஷீர் உலகைப் பார்க்கக் கற்றுக்கொண்டார். அவளது மொழியின் வழியாக ஒரு புதிய மலையாளத்தை எழுதிப் பழகினார்.
குழந்தைக் கண்களால் தலைகீழாக்கப்பட்ட பஷீரின் உலகில் பெரிய விஷயங்களும் பெரிய மனிதர்களும் வேடிக்கை வடிவங்களாக இருக்கிறார்கள். சுதந்திரப் போராட்டத் தியாகி என்பதற்காக மத்திய அரசு அளித்த தாமிரப் பட்டயம் காயப்போட்ட நெல்லைக் கொத்தவரும் காகத்தை விரட்டப் பயன்படுத்தப்படுகிறது. வீட்டுக்கு வரும் சகலமான நாயர்மாரும் அவர்களின் ஸ்திரீரத்தினங்களும் கிண்டல்செய்யப்படுகிறார்கள். அதேசமயம் ஆடு மையக் கதாபாத்திரமாகி மொத்த உலகமே அதைச்சுற்றி நடைபெறுகிறது. பஷீர் எழுந்ததுமே கோழி அவரது சுல்தான்பீடத்தில் ஏறி அமர்ந்து ஒருகண்ணை மட்டும் திறந்து என்ன என்று பார்க்கிறது.
பஷீரின் ஆக்கங்கள் இப்போது 'கிளாசிக்' ஆக மாற்றப்பட்டுவிட்டமையால் அவை தடவித்தடவி விடப்படுகின்றன. உக்கிரமான பெண்ணியர் ஒருவர் அவரைப் போட்டுக் குடைந்து எடுக்கும் நாள் தொலைவில் இல்லை. அவரது புனைவுலகில் பெண்கள் எப்போதுமே பிரியத்துக்குரிய குசும்பினிகள் மட்டுமே. 'பூவன்பழம்' உதாரணம் . அடிதடி நிபுணரான உஸ்தாத் அவர்கள் பரம ஸ்டைலாகக் குடையுடன் வரும் டீச்சர்மீது மையல் கொள்கிறார். 'உன்னை எனக்குப் பெருத்து இஷ்டம்' என்று காதலைத் தெரிவிக்கிறார். "அதற்கு?" என்று ஸ்டைலான பதில் வருகிறது.
எப்படியோ திருமணம். நாள்தோறும் முதலிரவு. உஸ்தாத் புதையல் காத்த பூதமாக இருக்கிறார். ஒருநாள் இரவில் பீபிக்கு பூவன்பழம் வேண்டுமென்று ஆசை ஏற்படுகிறது. ஊரடங்கிய நேரம். மழை. ஆற்றில் வெள்ளம். உஸ்தாத் மனம் தளராமல் ஏழு மலை, ஏழு கடல் தாண்டிச்சென்றாலும் பூவன்பழம் இல்லை. ஆகவே, திராட்சை வாங்கித் திரும்ப வருகிறார். அதை பீபி தூக்கி வீசி எறிந்துவிட்டு விசும்பி விசும்பி அழுகிறாள். உஸ்தாத் ஒரு சிறிய குச்சியை எடுத்துப் பீபியின் அழகிய தொடையில் அடிக்கிறார். திராட்சையைச் சுட்டிக்காட்டி "இது என்ன? ". நாலைந்து அடிகளுக்குப் பின்னர் பீபிக்குக் காரியம் பிடி கிடைக்கிறது. கண்ணீருடன் "பூவம் பழம்!" என்கிறாள். இருவரும் தொண்ணூறு வயதுவரை சந்தோஷமாக வாழ்ந்தார்கள். சுபம் மங்களம்.
இந்தக் கதையைக் கதையாகச் சொல்லப்போனால் மிகமிக ஆணாதிக்க நோக்குள்ள ஒரு கதை என்றே படும். உண்மையில் பஷீரின் பல கதைகள் இப்படிப்பட்டவையே. ஆனால், பஷீரின் புன்னகையின் ஒளிமிக்க நடை இதன் தொனியையே மாற்றிவிடுகிறது. ஆதிக்கத்தின் கதை என்ற தளத்திலிருந்து தூக்கிக் காதலின், காமத்தின் விளையாட்டைப் பற்றியதாக ஆக்குகிறது. பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கும் அலகிலா நடனம் ஒன்றின் ஒரு தருணமாக ஆக்கிவிடுகிறது.
பஷீரின் பெரும்படைப்புகள் என்று இப்போது ஒரு விமரிசகன் சொல்லத்தக்கவை பாத்துமாவின் ஆடு, ஸ்தலத்தே பிரதான திவ்யன், மாந்த்ரிக பூச்ச, ஆனவாரியும் பொன்குரிசும், முச்சீட்டுகளிக்காரன்றே மகள், ஸிங்கிடிமுங்கன் போன்றவை. இவையனைத்துக்குமே ஒரு பொதுத்தன்மை உண்டு என்று காணலாம். இவற்றுக்கு எந்த விதமான மையமும் அர்த்தமும் இல்லை. கதை என்ற ஒன்று இல்லை. இருந்தாலும் அதைச் சொல்லப்போனால் நான்கு வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகள் மட்டுமே ரசிக்கும். வடிவமே இல்லை. பஷீர் அவருக்குத் தோதுபட்ட விஷயங்களைத் தோது பட்ட மொழியில் சொல்லிச் செல்கிறார். விமரிசனம், மையக்கரு எதையுமே தேட முடியாது.
இருந்தே ஆக வேண்டுமென்றால் எல்லாக் கதைகளிலும் முடிவில் பஷீர் எழுதிவைத்திருக்கும் 'சுபம்' 'சுபமஸ்து' போன்ற வார்த்தைகளையும் "நாயர் ஸ்திரீகளும் நஸ்ராணி ஸ்த்ரீகளும் மாப்பிள ஸ்த்ரீகளும் சகல குசும்பு குன்னாய்மைகளுடனும் நீணாள் வாழட்டே" என்பதுபோன்ற வரிகளையும்தான் சொல்ல வேண்டும். அதிலும் பாத்தும்மாவின் ஆடு முழுக்க முழுக்க 'அர்த்தமில்லாத' கதை. அதில் ஒன்றுமே நடக்கவில்லை. அதைப் பற்றி என்ன சொன்னாலும் அது தவறு. அதில் குடும்ப உறவுகளின் மகத்துவம் பற்றிச் சொல்லியிருக்கிறார் பஷீர் என எங்கோ படித்தேன்? அப்படியா? "பாத்துமா அறிய வேண்டாம். அப்துல் காதர் அறிய வேண்டாம். ஹனீஃபா அறிய வேண்டாம். அபி அறிய வேண்டாம். நீ எனக்கு ஒரு அம்பது ரூபா தா" என்று ஓயாமல் பிடுங்கும் அம்மா வாழும் வீடுதான் குடும்பமா?
குடும்ப சுயநலங்களின் மையமாக அவ்வீட்டை பஷீர் காட்டுகிறார் என்றும் ஒருவரி வாசித்திருக்கிறேன். முட்டாள்தனம். அந்த வீடு முழுக்க நிறைந்திருப்பது உற்சாகமும் அன்பும்தான். ஆட்டின் மடியும் பஷீரின் பையும் கனத்திருப்பது அவ்வீட்டின் குற்றமா என்ன? அகப்பட்டவர்கள் கறக்க வேண்டியதுதானே? உண்மையில் அவ்வீட்டைப் பற்றி எதையுமே பஷீர் சொல்லவில்லை. எதைப் பற்றியும் பஷீர் சொல்லவில்லை. அவர் வெறுமே வேடிக்கை பார்க்கிறார். இந்திய இலக்கியங்களில் 'சும்மா' எழுதப்பட்ட ஒரே படைப்பு இதுதான். ஆகவேதான் இது என்றும் ஒளிமங்காத ஒரு பேரிலக்கியம்.
5
ஆழ்பிரதியே இல்லாத விசித்திரமான பேரிலக்கியம் பஷீர் எழுதியது. உய்த்துணர, சிந்திக்க, குறியீடுகளாக விரிய எந்த வாய்ப்பும் இல்லாத உலகம் அது. நம்முன் கிடப்பது பண்பாடு, தலைகீழாகப் பிரதிபலித்து நெளியும் ஒரு மொழிவெளி. விளையாடும் அர்த்தங்களின் நுண்பரப்பு. இந்த எளிய உலகம் ஆழ்ந்த அர்த்தங்களைத் தேடப் புகுந்தவனுக்குப் புரியாத மந்திரப்புதிர்களாகத் தோன்றி மயக்கக்கூடும். சட்டையைக் கழற்றிவிட்டுக் காட்டாற்றில் குதிப்பவனைப் போல இறங்குபவனைச் சிரித்தபடி குளிர அணைத்துக்கொள்ளும்.
பஷீரின் மொழி மிகமிகத் தெளிந்த நீரோட்டம். அதற்கு அடித்தளம் இல்லை. ஏனெனில், அடித்தளமே மேல்தளமாகத் தெரிகிறது. பஷீரில் அறிய ஏதுமில்லை. அவரது மொழியுடன் சற்றாவது இணையும்போது நமது மொழி நம்மை விட்டு நீங்கும் '...ம்ணி பல்ய ஒந்நின்' மொழிக்குள் நாம் நுழைவோம். அதுவே பஷீரின் புனைவுகள் அளிக்கும் அனுபவம்.
பஷீரைப் பற்றிய ஆவணப் படம் பார்த்துவிட்டு அந்த வரியைச் சொன்னவர் யாராக இருந்தாலும் அவர் பஷீரின் நல்ல வாசகர்.
*********
நன்றி : காலச்சுவடு
ஜெயமோகன் எம்.ஏ. ரஹ்மான் தயாரித்த பஷீர் த மான் ஆவணப்படம் பார்த்துவிட்டு இறங்கிய ரசிகர்களில் ஒருவர் 'படம் எப்படி?' என்று கேட்கப்பட்டபோ...
Bonjour & Welcome
Subscribe & Follow
Popular Posts
Created By Sora Templates | Distributed By Gooyaabi Templates