சந்நியாசி கரடு- பெருமாள்முருகன் கவிதைகள்

By 7:41 PM ,

குவிந்த கை

மூக்கால் ஆனவன் அவன்
வாசனை பிடிக்குமானால்
முகம் மலர்ந்து PERUMALMURUGAN
உள்ளிழுத்து நுகர்ந்து
ஆசையாய்
அவனே சாப்பிட்டுக்கொள்வான்
பிடிக்காதபோது
என் கை தேவைப்படும்

என் விரல்கள் அவ்வுணவில்
கலந்துவிடும் பிரியத்தால்
சுவை மாறிவிடுமா

நினைந்தூட்டும் தாய் முலைபோல
விரல்கள் குவித்துச் 
சோறூட்டி ஊட்டித் திரும்புகிறது கை

எதையாவது
கதைபோலச் சொல்லிக்கொண்டேயிருக்க வேண்டும்
அவன் குரலுக்குக்
காதுகளை முழுதாகக் கொடுத்துவிட வேண்டும்

வெளியே கரையும்
காக்கையின் அழைப்புக்குக்கூடக்
கவனம் போகக்கூடாது
உதிர்ந்த பிஞ்சாய்
வதங்கிப்போகும் அவன் முகம்

கடைசிப் பருக்கைகளைத்
தலையாட்டலோடு உண்டுவிட்டு
அவசரமாய்ப் பை தூக்கி
ஓடுகிறான் வெளியே

பெருமூச்சோடு பார்த்துக்கொண்டிருக்கிறேன்
அவன் வாய் திறப்புக்காகக் காத்திருக்கின்றன
பிரபஞ்சத்தின் விரல்கள் குவிந்து.

கொல்லியருவி

இந்த முறை போனபோது
அருகே மிக அருகே
தாவிப்போய்
அண்ணாந்து
முகம் காட்ட முடிந்தது
ஒரு கணம்
சாட்டை வீச்சாய் முகத்தில் இறங்கியும்
மறுகணம்
ஏதுமற்றும் அசைகிறது

மேலெல்லாம் பட வேண்டும்
வடுவேறிய குளிர்க் கரங்கள்
வருடித் தர வேண்டும்
உடலைத் திருப்பித் திருப்பிக் காட்டுகிறேன்

குனிந்தும் நிமிர்ந்தும் நனைந்து
வெறியேறுகிறது
நீர்விழுதை இழுத்துப்
பிடித்தேறிச் செல்கிறேன்

மெல்ல இறுக்கிக்கொண்டு
திரும்பிச் சிரித்தபடி
செல்லமாய்த் தலையில் தட்டுகிறது
என் தாத்தாவின் கோவண வாலாய்த்
தொங்கிக்கொண்டிருக்கும் அருவி.

உதவி

சமையல் எரிவாயு உருளையைத் திறந்து
அடுப்பைப் பற்ற வைக்கிறேன்
சில நொடிகள் எரிந்த தீ
நீலக் கை நீட்டி
ஏற்கெனவே திறந்திருந்த
பக்கத்து அடுப்புக்குக் கைகொடுத்து
மூட்டிவிட்டுத் திரும்புகிறது

அதிர்ச்சியும் பதற்றமும்
தீர்ந்து முடிந்த பின்னும்
நீலக்கை லாகவமாய் நீண்டு
உதவித் திரும்பும்
காட்சியே நிலைத்திருக்கிறது மனத்தில்

வண்ண நட்சத்திரங்கள்

தொலைக்காட்சி சேனல் மாற்றும் சண்டையில்
கோபித்தோடிய என் குட்டிப்பையன்
பிறந்த நாள்களுக்கெனப்
பல மாதங்கள் முன்னரே
வரைந்து தயாரித்து
அலமாரியில் வைத்திருந்த
அழகிய வாழ்த்து அட்டைகளைக்
காம்பசால் குத்திக் கிழித்தெறிந்தான்

நாட்குறிப்பை எடுத்துக்
கொல்வேன் கொல்வேன்
குத்திக் கொல்வேன்
என்றெழுதி வைத்தான்

அப்படியும் ஆத்திரம் அடங்காமல்
எறும்பு மருந்துக் கட்டியைக்
கடித்துத் தின்றுவிட்டுச்
'சாகிறேன் அழுங்கள்'
என்று வயிறெரியக் கத்தினான்

வண்ணங்கள் விரிந்து
நட்சத்திரங்களெனச்
சிற்றழகாய் மினுங்கும்படி
நான் காப்பாற்றி வைத்திருக்கும்
பூக்கள்
கருகி உதிர்கின்றன
உதிர்ந்துகொண்டேயிருக்கின்றன.

சந்நியாசி கரடு

மலையைக் கடந்து போகிறேன் தினமும்
ஒளிந்து ஒளிந்து போகும்
தார்ச்சாலை மீதான கவனத்தில்
தரையிலிருந்து விரியும் மலைப்பரப்பை
அண்ணாந்து பார்க்க முடிந்ததில்லை

அடிவாரத்தில் உள்ள
என் அலுவலக ஜன்னல் அளவில்
நாளெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறேன்

பாறை பற்றியேறும்
பிரண்டைக் கொடியாய்
வெள்ளாட்டுக் குட்டியன்று
அன்றாடம் மேலேறிச் செல்கிறது

வாய் திறந்த பிளவுகளைப்
பாய்ச்சலில் தாண்டுகிறது
பயமில்லை
கருணை நிரம்பிய பாழிகள்
ததும்பிக் கசிகின்றன
தாகமில்லை

சரிவுகளில் வளர்ந்திருக்கும்
பசுந்தழைகள் கையசைத்துக் கூப்பிடும்
பசியுமில்லை

உச்சிக் கூர்விளிம்பில்
போய்ப் படுத்து
அது கண்ணயர்வதை அறிகிறேன்

தூக்கத்தில் புரளும்போது
தவறி விழுந்திடக்கூடுமோ
எனத் தவிக்கிறேன்

கால் வலிக்கிறதா எனக் கேட்க
முடிந்ததில்லை
அது எப்போது இறங்கி வருமோ
பொழுதாகும் கவலையும் அதற்கில்லை.

நன்றி: காலச்சுவடு

You Might Also Like

2 comments

  1. i have written a review on asokamiththiran's prayaanam in my bolg
    http://jekay2ab.blogspot.com/2010/07/blog-post_17.html

    i must thank you for sharing that story

    ReplyDelete

Related Posts with Thumbnails