அவன் அவள் - விக்ரமாதித்யன் நம்பி

By 9:17 AM ,

விக்ரமாதித்யன் நம்பி

nambi256

அவன் அவள்

எவ்வளவு சொல்லியும் நம்புவதாக இல்லை அவள்.
எந்தவிதத்திலும் சமாதானம் செய்துவிடமுடியாது என்கிற மாதிரி
பிடிவாதமாக இருந்தாள்.
இப்படி வைராக்யமாக இருக்கிறவளோடு எப்படி வாழமுடியும்.
அன்பான வார்த்தைகளைக் கூட ஆணின் பசப்புமொழிகள் என்பது
போலப் புறக்கணிக்கப் பழகிவிட்டிருந்தாள்.
தொட்டுப் பேசுவதைக் கவனமாகத் தவிர்த்து வந்தாள்.
பார்வையை எதிர்கொள்வதை விட்டுவிட்டிருந்தாள்.
இவ்வளவு இறுக்கம் ஒரு பெண்ணுக்கு ஆகாது.
கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்திருந்த அவநம்பிக்கை
நாள்பட நாள்படத் திரண்டிருந்த கசப்பு
சன்னம் சன்னமாகக் குவிந்துபோன வெறுப்பு
எல்லாம் ஆகக்கூடிப் பாறையாக நின்றன.
அவள் இக்கதிக்கு ஆனதில் தான்தான் முழுமுதல் காரணகர்த்தா என்ற உறுத்தல் வேறு மனசைக் குடைந்து கொண்டிருந்தது.
நிவர்த்திக்க வகையறியாது சிந்தை குழம்பியிருந்தான்.
நியாயம் அவள் பக்கம்தான் என்று ஆதியிலிருந்தே உணர்ந்திருந்தான்.
அவள் மனசில் இத்தனை துக்கம் கொண்டிருப்பது தப்பில்லைதான்
தன்னிடம் அவள் மிகுந்த வன்மத்தோடு இருப்பதில் தவறில்லை
என்றாலும் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
பகையாளி போலவேதான் அவள் நடந்துகொண்டாள்.
வெகு கடுமையாக விரோதம் பாராட்டினாள்.
இது இப்படி ஆகியிருக்கக் கூடாது.
இந்த மாதிரி துரதிர்ஷ்டம் நேரக்கூடாது ஒரு ஆணுக்கு.
அவள் இப்படிப்பட்ட பெண்ணே இல்லை.
ஆசையும் பாசமும் கொண்டவள்.
குழந்தைதான்.
கவலை தெரியாத அந்த பச்சைப்பிள்ளை மனசைக் காலம் அழித்துவிட்டதா.
காற்றுப்போல சுதந்திரமான அவள் குதூகலத்தைக் கொன்றது விதிதான்.
பெண்ணுக்கு மட்டுமேயான அவள் கனவுகள் கருகிப் போயிருக்க வேண்டாம்.
நாளும் அவள் குற்றப்பத்திரிகை வாசிக்கையில் பேதலித்துப் போகிறான் அவன்.
அவளுடைய தொடர்ந்த புகார்களைக் கேட்டுக்கேட்டு கலவரமடைகிறான்.
அவனைச் சுட்டெரிக்கிறது அவள் கோபம்.
அவள் பழிவாங்கிக் கொண்டிருக்கிறாளா.
உண்மையிலேயே அவன் களைத்துப் போய்விட்டான்.
இந்த யுத்தத்தை நீடிக்கவிடுவது முட்டாள்தனமானது.
ஆனால் அவள் எதையும் கேட்க சித்தமாயில்லை.
என்னை விட்டுவிடு என்கிறாள்.
வேண்டாம் இந்த உறவு என்றே சொல்கிறாள்.
நிம்மதியாக இருக்கவிடு போதும் என்று கணக்குத் தீர்க்கிறாள்.
அப்படி என்ன கொடுமை இழைத்துவிட்டோம்.
பெண்தெய்வங்களே பெண்தெய்வங்களே
பிழை பொறாத பெண்தெய்வங்களே
* * * *


ஆயாசமாக இருந்தது.
பக்கத்தில் இருந்தும் விலகிப்போயிருப்பது இருவருக்குமே
புரிந்த ஒன்றுதான்.
பேசினாலே தப்பாகிவிடுகிறது.
விஷம் தோய்ந்த கத்திகளாகின்றன வார்த்தைகள்.
முகத்திலேயே விழிக்காதவர்கள் போலத்தாம் பேசிக் கொள்ளும்படியாகின்றன.
அன்பாக இருந்தோம் என்பது கனவாகவும்
அப்படி இனிமேல் இருக்கமுடியாது என்பது எதார்த்தமாகவும் மாறியிருந்தன.
நாலு சுவர்களுக்குள் இந்தமாதிரி இருப்பது அவளுக்கும்
தாளமுடியாத அவஸ்தையாகத்தான் இருக்கும்.
என்னசெய்தும் இந்த மனமூட்டத்தை விலக்க முடியாது போயிற்று.
ஆண்களையெல்லாம் வரிசையாக நிற்கவைத்துச் சுடவேண்டும்.
கோபமாகக் குரல் உயர்த்தி அவள் அன்றொருநாள் சொல்லக் கேட்டபோது
அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
இதுநாள் வரை பத்து தடவையாவது சொல்லியிருப்பாள்.
எரிச்சல்தான் இது.
எரிப்பது தீதானே.
இது தீதான்.
இதை அணைக்கமுடியுமா.
* * * *


கொஞ்சம் நாடியைப் பிடித்துத் தாங்கினால் போதும் முதலில்.
பிறகு உன்னைவிட்டால் எனக்கு யார் இருக்கிறார்கள் என்று
மண்டியிட வேண்டியிருந்தது.
காலகதியில் எந்தக் கூச்சமும் இல்லாமல் ஆண்டையிடம் அடிமை
போல மன்னிப்புக் கேட்டுத் தப்பித்துக் கொண்டிருந்தான்.
நாடகத்தின் காட்சிகள் மாறுவது மாதிரி பார்த்துக் கொண்டிருந்தவள்
நடிப்பு என்று கருதி ஒரு முடிவுக்கு வந்துவிட்டிருந்தாள்.
அவனும் நாடகத்தை முடித்துவிடலாம் என்ற மனநிலையில்தான் இருந்தான்.
என்றபோதும் அவள் அவனுக்குப் பெரிதும் வேண்டியிருந்தாள்.
உணவை ஒழிக்கமுடியுமா.
உறக்கத்தை விடமுடியுமா.
சுவாசத்தை எப்படி நிறுத்த.
இப்படியே ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகையில் அவன் அவளிடம்
சமரசம் செய்து கொண்டிருந்தான்.
இனி சமரசத்துக்கு இடமில்லை என்று அவள் முடிவு செய்திருப்பது
போலப் பட்டது.
இவனுக்குமே அபத்தமாகத்தான் இருந்தது.
இதுவரை ஏதோ ஒரு பந்தத்தில் கட்டுண்டிருந்திருக்கிறோம்.
எல்லாம் கழிந்துபோனதாகத் தோன்றுகிறது.
அவளுக்கு அவன் வேண்டியதில்லை.
ஒரு பரிவிலும் பற்றிலும்தாம் நடையேற்றி வைத்திருக்கிறாள்.
பாவம் என்றுகூட இருக்கலாம்.
காலம்காலமாக எல்லாப் பெண்களும் பாவம் பார்த்துத்தான்
ஆண்களை விட்டு வைத்திருக்கிறார்கள்.
எந்த நேரமும் எளிதாகத் துண்டித்துவிடமுடியும் உறவை.
ஒரு பெண்ணை உண்மையான ஆண் ஒதுக்கிவிட்டுப் போகமுடியாது.
இது ஆணின் பலவீனமாக இருக்கலாம்.
அது பெண்ணின் சக்தியாக இருக்கும்.
இந்த மாயவளையில்தான் எல்லாரும் சிக்கிக் கிடக்கிறார்கள்.
இவனும் விதிவிலக்கு இல்லை.
இதுதான் பெரியசோகம்.
* * * *


அவளுக்குத் தெரியும் அவனை.
திரும்பத்திரும்பத் தேடி வருவான்.
அந்த அளவுக்கு அடிமைப்பட்டிருந்தான்.
அவள் இல்லாமல் உயிர்தரித்திருக்க இயலாது.
அவள் கன்யாகுமரி அம்மன் போலத் தனித்திருக்கக் கூடியவள்.
இவ்வளவு காலமும் நடந்தது விளையாட்டு.
இனி நடக்கவிருப்பது வினை.
விளையாட்டிலேயே ஜெயிக்கத் தெரியாதவன்
வினைக்கு என்ன ஆவான்.
* * * *


தூங்கிக் கொண்டிருந்தாள்.
தொட்டு எழுப்பலாம்.
தயக்கமாக இருந்தது.
எப்படி தூங்கமுடிகிறது அவளுக்கு
அவன் தூக்கத்தைப் பறித்துவிட்டு.
அவள் அயர்ந்து உறங்குவதே அவன் அருகாமையில்தான்.
நிம்மதியான உறக்கம் அவன் சார்ந்தது.

* * * *

You Might Also Like

0 comments

Related Posts with Thumbnails