அறைவெளி - சி. மணி
சி. மணி
தப்பிவிட்டேன் என்று விழித்தேன்.
சுற்றும்முற்றும் பார்த்தேன். மேலே
வானம்; நான்கு பக்கமும் பூவிருள்
கூரை, சுவர்கள் எதுவும் இல்லை.
எல்லாப் பக்கமும் வழிகள் தெரிந்தன.
வெட்டவெளிதான் இது, அறை அல்ல
என்று சிலகணம் துள்ளியது என்மனம்.
மேற்கே நடந்தேன் இடித்தது ஒருசுவர்
தெற்கே நடந்தேன் இடித்தது ஒருசுவர்
வடக்கே நடந்தேன் இடித்தது ஒருசுவர்
கிழக்கே நடந்தேன் இடித்தது ஒருசுவர்
எழும்பிக் குதித்தேன் இடித்தது கூரை.
0 comments