ஓடும் இரயில்வேகம் தொற்றி-தேவதேவன்

By 5:39 PM ,

தேவதேவன்

ஓடும் இரயில்வேகம் தொற்றி

ஓடும் இரயில் வேகம் தொற்றி
அதிர்ந்தன சப்தநாடிகளும் devathevan
அதன் வழியில் அவன் இனி குறுக்கிட முடியாது?
புவி முழுமையையுமாய்
அடக்கி நெரித்தபடி
விரைந்து நெருங்கிக்கொண்டிருக்கும் ஆபத்தை
நேர்நின்று பார்த்தவனாய்
அதிர்ந்தன அவன் சப்தநாடிகளும்.
உடைந்த ஆற்றுப்பாலம் கண்டு
மூச்சிரைக்க ஓடிவந்து நின்று
ஆபத்துக்கு ஆபத்துரைக்கும்
அறியாச் சிறுவர்கள்போலும்
வாழ்ந்து முடிவதில் என்ன பயன்?
இதயத்திலிருந்து பாய்ந்து விரிந்து நின்ற
கைகளும் கால்களும் தலையுயாய்
குறுக்கிட்டு மடிவதன்றி என்ன வழி?
வாள்போலும்
ஆற்றைக் குறுக்கறுத்தோடும் இரயில்வண்டியும்
திரும்பி ஓர்நாள்
ஆற்றோடு கைகோர்த்துச் சிரித்துக்கொண்டோடாதா?

****

என் அறைச் சுவரை அலங்கரிக்கும்
நிலக் காட்சி ஓவியம் ஒன்று ...

அட, அற்பனே!
யாருக்குச் சொந்தமானது அது?
ஏழைகளுக்கு எட்டாத
சற்று விலையுயர்ந்த அந்த ஓவியத்தை
வாங்கி மேடைபோட்டு முழங்கி வழங்கி
தன் மேலாண்மையை நிறுவிவிட்டதாய் எண்ணும்
மடையனுக்குச் சொந்தமாகுமோ அது?
தனது அரிசிபருப்புக்காய் அதை விற்றுவிட்டதால்
அந்த ஓவியனுக்கு இனி சொந்தமாகாதோ அது?
இன்னும் அதன்கீழ் தன் கையப்பம் காணும்
அவன் கர்வத்தையும் அடக்குமாறு
அது தீட்டப்பெற்றிருக்கும் பலகைக்கு
அவ்வோவியத்தில் கனலும்
வானம், ஒளி, தாவரங்கள்
பேரமைதி கொண்டனவாய்
தன் நிழலிலேயே நின்றபடி
தாழ்ந்து குனிந்து
புல் மேய்ந்துகொண்டிருக்கும் கால்நடைகள்
இவர்களுக்குச் சொந்தமானதில்லையா அது?
அனைத்திற்கும் மேலாய் நாம் கண்டுகொள்ள வேண்டிய
அறநியதிகளுக்குச் சொந்தமானதில்லையா அது?

****

நன்றி : காலச்சுவடு

You Might Also Like

2 comments

  1. அருமையான கவிதைகள்.
    பகிர்வுக்கு நன்றி

    visit my blog.பெருங்கனவு
    www.jekay2ab.blogspot.com

    ReplyDelete
  2. //தனது அரிசிபருப்புக்காய் அதை விற்றுவிட்டதால்
    அந்த ஓவியனுக்கு இனி சொந்தமாகாதோ அது? //

    //ஆற்றைக் குறுக்கறுத்தோடும் இரயில்வண்டி//

    அருமையான வரிகள்,பகிர்வுக்கு நன்றி அய்யா.

    இளமுருகன்
    நைஜீரியா

    ReplyDelete

Related Posts with Thumbnails