கிருஷ்ணன் நம்பி கவிதைகள்

By 10:20 AM ,


1.
ஆனை வேணுமென்று _ குழந்தை
அழுது கூச்சலிட்டான்
ஆனை கொண்டு வந்தார் _ ஆனால் knambi
அழுகை தீரவில்லை 

பானை வேணும் என்றான் _ குழந்தை
பானை கொண்டு வந்தார்
ஆனை பானை இரண்டும் _ வந்தும்
அழுகை ஓயவில்லை  

`இன்னும் அழுவதேனோ _ குழந்தாய்
இனியும் என்ன வேணும்?’
என்று கேட்டபோது _ குழந்தை
ஏங்கி அழுது கொண்டு

இந்தப் பானைக்குள்ளே _ அந்த
ஆணை போக வேணும்!
என்று சொல்லுகின்றான் _ ஐயோ
என்ன செய்ய முடியும்?

2.
அம்பிப் பாப்பா விஷயம் என்றால்
அம்மா சலுகை அதிகம்தான் _ எங்கள்
அம்மா சலுகை அதிகம்தான்.

பாலைக் கொட்டிக் கவிழ்த்தினாலும்
`பார் சமர்த்தை’ என்கிறாள்!
சீலத்தோடு சிரித்துக் கொண்டே
சிந்திய பாலைத் துடைக்கிறாள் _ அம்மா
சிந்திய பாலைத் துடைக்கிறாள்!

பள்ளிப் புத்தகத்தை எல்லாம்
பறித்துக் கிழிக்கும் வேளையில்
அள்ளி அணைத்து முத்தமிட்டு
அம்பிப் பயலைப் புகழ்கிறாள் _ அம்மா
அம்பிப் பயலைப் புகழ்கிறாள்

கண்ணில் கண்ட பொருளையெல்லாம்
காலால் உதைத்துத் தள்ளினால்
`கண்ணன் இவன்’ என்று அம்மா
கண்டது போல் சொல்கிறாள் _ ரொம்பக்
கண்டதுபோல் சொல்கிறாள்!

அம்மா என்று திக்கித் திக்கி
அம்பி உளறிக் கொட்டினால்
அம்பிப் பயலை வாரி எடுத்து
அறிஞன் என்று மெச்சுறாள் _ அம்மா
அறிஞன் என்று மெச்சுறாள்!

அம்பிப் பாப்பா விஷயம் என்றால்
அம்மா சலுகை அதிகம்தான் _ எங்கள்
அம்மா ரொம்ப மோசம்தான்!

3. மண்ணிலே பொன்னிருக்கு!

மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!

கையில் வலு இருக்கோ _உன்றன்
மெய்யில் வலு இருக்கோ?
கையில் வலு உளதேல் _ உன்றன்
மெய்யில் வலு உளதேல்,.

மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!

மண்வெட்டி ஒன்றுளதோ _ நல்ல
மண்வெட்டி ஒன்றுளதோ?
மண்வெட்டி ஒன்றுளதேல் _ நல்ல

மண்வெட்டி ஒன்றுளதேல்,

மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!

காணி நிலம் உளதோ _ ஒரு
காணி நிலம் உளதோ?
காணி நிலம் உளதேல் _ ஒரு
காணி நிலம் உளதேல்,

மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!

வெட்டத் தெரியாதோ _ வேர்வை
கொட்டத் தெரியாதோ?
வெட்டத் தெரியுமெனில் _ வேர்வை
கொட்டத் தெரியுமெனில்,

மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!

வித்து சிறிதிருக்கோ _ மழை
வெய்யில் சிறிதிருக்கோ?
வித்து சிறிதுளதேல் _ மழை
வெய்யில் சிறிதுளதேல்,

மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!

ஊக்கம் உனக்கிருக்கோ _ வேலை
பார்க்கத் திறமிருக்கோ?
ஊக்கம் உனக்கிருந்தால் _ வேலை
பார்க்கத் திறமிருந்தால்,

மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!

                                
                              
நன்றி: கிருஷ்ணன் நம்பி படைப்புலகம் தமிழாலயம் வெளியீடு.

You Might Also Like

0 comments

Related Posts with Thumbnails