விண்ணோக்கிச் செல்வதும்-தேவதேவன்

By 9:10 PM ,

விண்ணோக்கிச் செல்வதும்

விண்ணோக்கிச் செல்வதும்
விண்ணை உணர்வதும்
மண் நோக்கியே பொழிவதும்
மழை நீர்த்தேக்கங்கள் என devdevan3
நின்று நிதானித்து
மண்ணைக் குளிர்வித்தபடியே
விண்ணையே நெஞ்சில் நிறைத்து
விண்ணோக்கியே கிடப்பதும்
அனைத்து உயிர்களையும்
காதலின்பத்தாற்
களிகொள்ளச் செய்வதுமேயன்றோ
நம்மை வாழ்விக்கும்
நம்முடைய ஒரே செயல்!


சிறுவர் உலகம்

கல்லெறிபட்டும்
(ஒரு சின்னக்கலசல் பதற்றம், வலி அவ்வளவே)
கலங்காது
தேனையே சொரிகிறது
தேன்கூடு


கொடுவனம்

தன்னந்தனியே
ஒரு காட்டிடையே
நிற்க நேர்ந்துவிட்டதா என்ன?
நன்பகல் வேளையிலும்
இரவின் ஒலியுடன்
இருண்டு கிடப்பதேன் இவ்வுலகம்?
உயிரைப் பிடித்துக்கொண்டு
பதுங்கி வாழ் முயல்களுக்குமப்பால்
நிலவவே முடியாது
மடிந்தும் தோன்றாமலுமே போன,
யாரும் கண்டிராத
மென்னுயிரினங்களின்
மரண வாசனையோ
மரண பயமோ, இப்போது உன்
இதயத்தைப் பிசைந்துகொண்டிருப்பது?
கண்டுகொண்டனையோ,
இம்மரணத்தின் சன்னிதியில்
முற்றிலுமாய் அழித்தொழிக்கப்பட வேண்டிய
கொடுவனத்தை?
அழிக்கப்படுமுன்
இவ்வேதனையிலேயே
விரைவாய் உன் மரணமும்
நிகழ்ந்துவிடுமென்றா
அவசர அவசரமாய் அதை எழுதி
மரணத்தை வென்றுவிடப் பார்க்கிறாய்?

ஒன்று

உணர்ச்சிப் பெருக்காய்
விரிந்துகிடக்கும் சேலைகள்தாம் எத்தனை!
நம் ஒற்றை உடன் நாடுவதோ
ஒன்றே ஒன்று.
எதை எடுத்துக்கொள்வதெனத் திகைத்து
ஒவ்வொன்றின்மீதும் படர்ந்து பிரிந்து
தேர்ந்தெடுத்த ஒன்றின் மேலே
தன் அத்தனைக் காதலையும்
கொட்டிக் குவித்தவாறே
முத்தமிட்டு அணைத்துத்
தன் மெய்மறந்தவாறே
ஒன்றி
உடுத்துத்
தன் அறையினின்றும் வெளிவரும்
அவள் உதடுகளில் முகிழ்த்திருந்த
புன்னகை சொல்லிற்று
காத்திருந்த அவனிடம்
அவள் காதல் கதைகளின் இரகசியம்.

You Might Also Like

1 comments

  1. விரிந்து கிடக்கும் சேலைகளில் படர்ந்து திரும்பும் மனது எல்லா சேலைகளையும் கட்டி அவிழ்த்த கதை தெரியுமா உங்களுக்கு????

    ReplyDelete

Related Posts with Thumbnails